பாரத ஆத்தாளே நீ வாழ்க! — தேசத் துரோகம்,
பாரத் மாதா கீ ஜே — தேச பக்தி..
இப்படித் தான் போகிறது, இந்திய தேசியம் பேசுபவர்களின் கருத்துகள். மேலிருக்கும் சொற்றொடரில் உள்ள ஒரே பொருள் கொண்ட விசயங்களில் இரு வேறு நிலைப்பாடுகளின் மீநிலைப்பாடே இக்கட்டுரையின் போக்கு. இச்சொற்றொடரில் இரு கருத்துகளுண்டு.
ஒன்று மக்களின் சொந்த மொழியை வெறுக்கவோ அல்லது முக்கியத்துவத்தை இழக்கவோ செய்வது போல் செய்வது
இரண்டாவது, தேசபக்தர்கள் கூறுவதையே மற்ற தரப்பினர், தத்தம் வழியிலோ மொழியிலோக் கூறுவதை தேசபக்தர்கள் எதிர்ப்பது. சாதி மத மொழி இன வேறுபாட்டைக் கொண்டிருக்கும் போழ்து, நாட்டின் முன்னேற்றத்திற்காகாது என்பதை இரு வகுப்பினரும் கூறத் தான் செய்கிறோம். ஆயினும் அவர்கள் அதை வைத்து வேறொரு குழப்பமான அரசியலை முன்னெடுக்கும் பொழுது, அதில் துவேசம், வெறுப்பு, அரசியல் என மற்றையவரின் மீது சேறுவாரித் தூற்றுகின்றனர். இவ்விருக் கருத்துகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் வியப்புக்குரியது, இவ்விரண்டும் கல்வி சாலைகளில் நிகழ்வது ஆச்சரியகரமாணது அல்லவா! வடமொழித்திணிப்பு, ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத் பல்கலைக் கழகங்களைப் பற்றிய கருத்துகளும் அவை கையாளப்படும் விதங்களூம் இரண்டாம் வகையினது.
உணர்ச்சி பொங்க சமக்கிருதத்திலேயோ இந்தியிலேயேக் கத்தினாலேயே தேசபக்தி என்பது படுமுட்டாள்த் தனமானது இல்லையா. அது பற்றி சிலக் கட்டுரைகளில் விவாதித்திருந்தேன் [1, 2].
மேம்போக்காய் உலகம் முழுவதும் ஒரு மாதிரியான தன்னலம் எனும் தீவிரவாதம் தலைதூக்குகிறது போல் ஒரு மாயை உண்டாகிறது, இது கிட்டத்தட்ட, நாம் படிக்கும் போது, வகுப்பில் ஆசிரியர்கள் போன வருடம் இருந்த மாணவர்கள் தங்கம் என ஒவ்வொரு வருட மாணவர்களிடமும் கூறுவது போலானது. சரியாக உற்றுக் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே மனிதர்கள் ஒரு மாதிரியான ஆக்கிரமிப்பைப் பண்ணியுவர்கள், நியாண்டர்தால் மனிதர்களுடன் கூடிக் கெடுத்ததாய் கூட சில மாதங்கள் முன்னால் வந்த ஆய்வில், உயிரி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மனிதர்கள் ஒரே விசயத்துக்கு வெவ்வேறு காலதேச வர்த்தமானங்களில் வேறுபடுவது ஒன்றும் தவறில்லை. ஆயினும், பேசப்படுபொருள் ஒன்றாயிருக்குங்கால், அதன் கருத்தின் பொருட்டு எதிரெதிர் கருத்துகள் கொண்டிருந்தாலும் கூடியிருத்தல் நலம்! இதன் மூலம் பல விசயங்களை சரிசெய்ய முடியும். இவை புரிந்தும் புரியாதது போல் கையாளப்படுகின்றனவா என விளங்கவில்லை. பல்கலைகளில் அரசியல் பேசவேக் கூடாது என்று ஒரு கூட்டம் கிளம்பியிருப்பது எதன் பொருட்டு எனவிளங்கவும் இல்லை. முரண்படுதலும் கூடுதலும் ஆட்டக் கோட்பாட்டின் (Game theory) படி நல்ல வளர்ச்சியான சமூகம் அமைக்க வழிகுக்கும் எனப் பல சமூக சோதனைகளில், சமூக இயற்பியலாளர்களாலும், கணிதவியலாளர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. இரு பக்கமும் வெற்றிகளை விளக்கும் நாஷ் சமநிலையிலும் (Nash Equilibrium) கூட இரு பக்கத்திலும் உள்ள சாதகபாதக நிலைகளைக் எடுத்து சீர்தூக்கி அமைப்பதே ஆகும். உதாரணமாக, தற்பொழுது உள்ள சமூகத்தைக் கூட சில நிலைப்பாடுகளை வைத்து மேம்போக்காகப் பிரிக்கலாம்.
1: இரு புறத்திலும் நன்மையே இருக்க.
2: இரு புறத்திலும் குறைகளையேக் காண.
3, 4: இருபக்கத்திலும் உள்ள சாதக பாதகங்களை எடுத்தியம்புதல்.
சத்திய யுக நிகழ்வாக முதலாம் நிலைப்பாட்டை, பெரும்பாலும் யாரும் கலியுகத்தில், யோசிப்பதேயில்லை என்பது வருத்தத்திற்குரியது. யாரையாவது யாராவது ஒத்துக் கொள்ளும் தன்மை, அப்பனாத்தாளானாலும் பிள்ளையரானாலும் எவரிடமும் இருப்பதேயில்லை. பெரும்பாலானோர் இரண்டாவதையே தத்தமது நிலையாகக் கொள்கின்றனர், பொது வாழ்வில் “எங்ககிட்டயேவா?” என எக்காளம் பேசுவோர், “அடுத்தவனிடம் நீ எப்பொழுதும் சீப்படுவாய்” என ஜோசியக்காரர் கூறும் போது “ஆமாஞ் சாமி, கரேட்டு” என்பது மாதிரி, அவர்களுக்கே அவர்களைப் பற்றி சந்தேகம் இருப்பதால் எல்லாரிடமும் குறைகளைக் காண முடிகிறவர்கள். 3, 4 ஆவது நிலைகளைக் கொண்டவர்கள் யாராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இம்மாதிரியானவர்கள் ஆல்ஃபா விலங்குகளாக இல்லாமல், சமூகத்தை சிறிது சிறிதாக நேர் செய்யக் கூடிய ஆல்ஃபா விலங்குகள். சில விலங்குகள், ஆல்ஃபாத்தனம் கொண்ட சண்டியர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதும் ஓர் அதிசயமான சங்கதி! இருக்கட்டும்!
இப்படி படிநிலைகள் மிகவும் எளிமையானது, ஆனால், நாம் எங்கிருக்கிறோம் என்றே நிறையப் பேருக்கு விளங்கவில்லை அல்லது, விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர். எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் என்ன ஆகும்? சமூகம் வளராது அல்லது அழியும், அதுவும் இரண்டாவது நிலைப்பாட்டின் pay-off – அந்நிலைப்பாட்டிற்கான விலை – மிகவும் கொடுமையாக இருக்கும். உதாரணத்திற்கு ஹிட்லரின் தத்துவங்கள், சர்வாதிகாரியின் கீழுள்ள தேசத்தில் மக்களின் நிலை. மாற்றுக்கருத்து இருக்கும் போது, ஒன்றைத் தொட்டு ஒன்றைப் பிடித்து சமூகம் வளரும், எடுத்துக்காட்டு, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகள். மக்களின் போக்குக்கேற்ப மாறும் ஸ்காண்டிநேவிய நாடுகள்.
சரி நம் நாட்டிற்கு வருவோம், கல்விச்சாலைகள் அரசியல் பேசுவதற்குரியது இல்லையெனக் கூறுபவர்களின் தன்மை எத்தகையது? பெரும்பாலானோர் ஆள்வோர் சார்ந்து பேசுவோர். அல்லது 2வது நிலைப்பாடான எதிலும் குற்றம் காண்பவர்.
ஆள்வோரை ஆதரிப்போராய் இருந்தாலும் குறைகளைக் காண்போராய் இருந்தாலும் சரி, பழம்பெருமைப் பேசுவதே பிடித்திருக்கிறது, பெரும்பாலானோர்க்கும், உலகத்தின் மிகவும் பழையப் பல்கலைகளான, தக்கசீலமும், நாளந்தாவும் வெறும் வேதத்தைப் பற்றி மட்டுமாப் பேசின, அரசியல், போர்முறைப் பற்றியும் பேசின. குறளும் சாணக்கியமும் அரசன் செய்யவேண்டியன பற்றி பேசினவும் கூட அதன் தாக்கத்தினாலேயே தானே. தத்துவங்கள் ஊடாக அக்காலத்திற்கேற்ற வகையில் அறிவியலும் பேசப்பட்டது.
ஆனால், இப்படிப் போகும் விவாதமானது, எல்லாவற்றிலும் குறைகளைக் காணும்படிக்கு எல்லாநிலைகளிலும் மாற்றிக் கொண்டே வருவதையும் காண முடிகிறது.
- பொய்யான காணொலிகள் அதை வைத்து விவாதங்கள்
- மாணவர்களை தீவிரவாதிகள் அல்லது தேசத் துரோகிகள் என்பது,
- பல்கலைக் கழகங்கள் மூடப்பட வேண்டும் என்பது
- சமூக விவாதக் குழுக்கள் மூடப்படவேண்டும் என்பது
- ஒரு மாணவனின் இறப்புக்கு உலகவே வருத்தம் தெரிவிக்கும் போது, “நான் அங்கிருக்கிறேன்இங்கிருக்கிறேன்” என ட்வீட் போட்டுவிட்டு, நாட்கள் கழித்து வருத்தம் தெரிவிப்பது.
- இதில் ஒரு பெண்ணை சுடச்சொல்வது தேசபக்தி; சாதியப் பிரச்சினைகளைப் பேசுவது தேசத்துரோகம்
- இவ்வளவு பிரச்சினைகளுக்கப்புறம் நேற்றே வாயைத் திறந்தது
- நடக்கும் எல்லாவற்றையும் தேசியத்தின் பேரில் சேர்ப்பது.
அதற்கு ஆதரவுகள் வேறு.
சரி, அதன் பின்னால் இருக்கும் நியாயங்கள் எவ்வகையானது எனக் காண்போம்.
பள்ளியிலும் கல்லூரியிலும் கண்களை மூடிக் கொண்டு இருந்துவிட்டு, திடீரென ஒரு நாள் கண்விழித்து வாக்களித்துவிட்டுத் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என நினைப்பது எத்தகையது?? என் தந்தையார் பெரிதாக அரசியல் நாட்டம் இல்லாதவர்கள், ஆனால் அவர்களே என்னை குறைந்தபட்சம் தேநீர்க் கடை அரசியலாவது பேசவேண்டும், தேநீர் கடைக்குப் போய் செய்தித்தாள்களைப் படித்து அவர்கள் பேசுவதையாவதுக் கவனி என்பவர்கள். ஆனால், எனக்கு அடிப்படையேப் புரியாததால், திருவள்ளுவம், பிளேட்டோ, சாக்ரடீஸ் எனச் சுற்றிக் கொண்டிருந்தேன், இருக்கிறேன். என் தந்தையையும், தம் குழந்தைகள் அரசியல் பேசக்கூடாது என குதிக்கும் பெற்றோரையும் ஒப்பிடும் போது எனக்கு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை. அதுவும் நாட்டின் அரசியலையும் பிற நாட்டு அரசியல், பிறநாடுகளுடனான உறவைப் பற்றியும் அலசி ஆராய்ந்து, அதற்கான கொள்கைகளை வரையறுக்கும் பல்கலைக்கழகத்தில்.. இவர்களுக்கெல்லாம், என்ன பேசுகிறோம் என விளங்கவாவது செய்கிறதா எனத் தெரியவில்லை.
அக்காலத்தில் அவர்கள் பேசிய அளவே அறிவியலும் பேசப்படவேண்டும் என நினைப்பதும், கொடுக்கும் காசை வைத்து கொஞ்ச காசில் நிறைய அறிவியல் செய்யலாம் எனக் கூறும் அமைச்சரைக் கொண்டாடுவதற்கு பதில் தலையை வடக்குப் பக்கம் வைத்து தினமும் படுக்கலாம். இந்தம்மாள் தான், கொஞ்ச நாளை முன்னர் ஐஐடி மாணவர்கள் ஏன் வெளிநாடு செல்கிறார்கள், அவர்களுக்குரிய மானியக் கணக்கு என்று பிதற்றியவர். இப்படி செய்தால், இன்னும் அறிவியலை வெறியுடன் செய்வோர் வெளிநாட்டை நோக்கி வரத்தானே செய்வார்கள். இதில் இவர்கள் சீனாவுடன் போட்டியிடச் சொல்கிறார்கள். ஒரு மானியக்குழுவைக் காட்டிக் காக்க துப்பில்லாத அரசும் அதன் இயந்திரங்களூம் விஞ்ஞானிகளை கைநீட்டுவதற்கு முன், இது சரியானவழியா எனக் கேட்டுக் கொள்ளுங்கள்! சரி, போதும்!
மக்களின் கைவரை இணையம் வளர்ந்திருக்கும் இவ்வேளையில், பல்கலைக் கழகத்தில் கூட அரசியல் கூடாது என்றும் நாங்கள் சொல்லும் அளவுக்கு. கொஞ்சமே கொஞ்சமான அறிவியல் போதுமென்றும், பொதுமக்களை சிந்திக்கச் சொல்லும் சிந்திக்க வைக்கும் அரசு, அடுத்து அது செய்யும் எல்லாவற்றையும் சரியென சொல்ல வைக்க நிறைய நாட்களாகாது. Make in India எனக் கூறும் அதே நேரம், உள்ளூர் கடைகளை மூடியும், அறிவியலுக்கானப் பாதையைக் குறுக்கியும், மக்களை எப்பொழுதும் பயனர்களாகவும் கண்டுபிடிக்கும் திறனை முடக்கியும், இயந்திரங்கள் போல் ஆக்கவும் முயல்கின்றன. விளம்பரப்படுத்துவது ஒன்று, நடப்பது அதற்கு நேரெதிர். ஆயினும் சமூகம், அரசின் பக்கம் வருமாறு ஊடகங்களின் அமைப்புகள்! ஆக சமூகத்திற்கான pay-off ‘ஞே!’.
செர்மனியில் குழந்தைகளுக்கான அரசியல் செய்தி:
வெளிநாட்டுக் குழந்தைகள் கற்பது போல வேண்டும் என்பவர்கள் கவனிக்க.
செர்மனியில், குழந்தைகளுக்கான அரசியல் செய்திகள் என்று ஒன்று உண்டு. என் தோழியினுடன் வேலைபார்க்கும் பேராசிரியையின் மகனுக்கு 9 வயதே ஆகிறது. அவனுக்கு அரசியல் மிகவும் விருப்பம்! சில வருடங்களுக்கு முன்னர் அவனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஆங்கெலா மெர்க்கல் (Angela Merkel) சார்ந்த ஆளுங்கட்சியே (CDU) மிகவும் பிடித்தம், நாம் வேண்டுமென்றே, நம் செர்மனில், பெரிய எதிர்க்கட்சியான SPD (சோஷலிச)க் கட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய் எனக் கேட்டதற்கு, அவர்களின் கொள்கைகள் முட்டாள்தனமானது எனக் கூறினான். திரும்பவும் வேண்டுமென்றே எனக்கு SPD-யேப் பிடிக்கும் எனக் கூறியதற்கு, என்னை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு, அவனுக்கு ஏன் ஆளுங்கட்சிப் பிடிக்கும் என சில காரணங்களை அடுக்கினான். அதை அவன் தந்தையிடம் கூறிய போது, அவருக்கு மிகவும் அதிர்ச்சிகரமான மகிழ்ச்சி! அவனுடைய சார்பைப் பற்றியும் பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதையும் அவர்கள் அவ்வளவு எதிர்பார்த்திருக்கவில்லை! சிறுவனுக்குரிய விசயங்கள் இருந்தாலும், அதன் தீவிரத்தை உணர்ந்திருந்தான்.
நான் கல்லூரியில் படித்தக் காலத்தில், சிறுவயதில் நான் படித்தப் பள்ளியிலேயே, கணிதம் சொல்லித்தர அழைக்கப்பட்டேன், அப்பொழுது சில கிராமத்துப் பெண் பிள்ளைகள், 10-வதுப் படிக்கும் போதே, அரசியல் நோக்கைக் கொண்டிருந்தனர், அவர்கள் இந்நேரம் அரசியலில் பெரிதாக ஆகியிருக்கலாம், அப்படியில்லாத பட்சத்தில், அடுத்த தலைமுறைக்குத் தேவையான படிப்பைத் தந்து கொண்டிருக்கலாம். அரசியல் வேண்டாம் என்று சொல்லுபவர்கள், பெரும்பாலும் நம்மூரில் தம் பிள்ளைகள் வளர்ந்து வெளிநாடுகளுக்குப் போய் இருக்கட்டும் என நினைப்பதால் தான், அரசியல் பேசக் கூடாது என்கிறார்களா எனத் தெரியவில்லை. தாம் வாழும் சமூகத்தைப் பற்றி விமர்சிப்பது என்பது, சமூக ஓட்டத்தைத் தாண்டியும் அச்சமூகம் நன்றாக இருக்க முடியும் என்று நினைத்தும், மேலும் சிந்தனைகளால் மாற்றம் எப்படியாகப்பட்டதாக இருக்க வேண்டும் என யோசித்தாலும் தான் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படை அறிவினாலேயே விவாதிக்கிறார்கள். ஆனால், தேசத்தின் வளர்ச்சியைப் பற்றி யோசிப்பவர்களைத் தடுப்பவர்கள் தேசபக்தர்களாகின்றனர். செய்பவர்கள் தேசத்துரோகிகள் ஆவது வினோதமான விசயம் அல்லவா.
சரி இதில் மிதவாதம் பேசுபவர்களின் (பேசுவதாக நினைப்பவர்களின்) நோக்கு எப்படியானது?
கைது செய்யப்பட்ட மாணாக்கர்கள், ஆய்வாளர்கள் அவர்களின் கல்விநலனையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு வெளிவிடுதல் நலம் என்கிறார்கள். மேலும், ஏதோ இதற்கு முன்னர் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் விவாதங்களே நடக்காத மாதிரி, தற்பொழுது தான் இவையெல்லாம் நடக்கின்றன என்பது போலும் மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளது, மிகவும் ஆபத்தானது. அரசைக் காட்டமாக எதிர்ப்பதில் ஏற்படும் சுணக்கம்.
ஆனால் அது கல்வி நலனை மட்டும் கொண்டு செய்வது என்ற சிந்தனையில் பெரிய ஓட்டை உள்ளது. அதுவும் நல்ல வழியாகத் தெரியவில்லை. ஆளும் ஆட்சியர்களுக்கெதிரான ஒரு விசயத்தை முன்வைக்க கல்விச் சமூகத்துக்கும் உரிமை உண்டு. மொண்ணையானக் கல்வியை வழங்கும் கல்விநிறுவனங்களைக் கேள்விகேட்கவோ, அதன் அதிகப்படியானக் கட்டணக் கொள்கைகள் அதன் தரம் பற்றிய கொள்கைகள் மீது கைவைக்கவோ வக்கில்லாதவர்கள், ஐஐடி மத்தியப் பல்கலைக் கழகக் கல்விநிறுவனங்களின் சுயசிந்தனையைத் தூண்டும் சூழ்நிலைகளில் கைவைக்கத் துணிகிறார்கள். சோறு போட்டால் செஞ்சோற்றுக் கடனைச் செய் என்பது போல் உள்ளது, இந்நிலைப்பாடு.
எங்கெங்கும் புரட்சி நடக்கப் போகிறதென்றால், முதலில் ஆள்வோர்கள் கைவைப்பது, பல்கலைக்கழகங்கள் தான் என்கிறது வரலாறு! அது சீன பர்மிய கிரேக்க இலங்கை ருஷ்ய அடக்குமுறை இப்படி எந்த நாட்டுப் பிரச்சினையானாலும் அதைக் காண முடியும். தேசியவாதிகளானாலும் இடதுசாரியானாலும் முதலில் சொல்வது, “இதை நாட்டுக்காகத் தான் சொல்கிறோம், அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையென்பதேயன்றி வேறு கிடையாது, அதனால் பல்கலைக் கழகங்களை மூடுகிறோம்” என்பர். நன்றாக கவனித்தால், அதே போல சமூகத்தில் நிகழ்வதும், நம் கல்விக்கூடங்களும் அவ்வழியில் சேரும் அபாயம் இருக்கிறது. நாட்டின் ஒழுங்குமுறையில் முனைப்புக் காட்டாமல், இப்படி இருக்கிறார்கள். நானும் என் பாரம்பரியத்தை மதிப்பவன் அதனாலேயே தான் கேள்விகளை எழுப்புகிறேன். இவர்களின் போக்கு சன்னியாசிகள் ஆனாலும் கோபம் கொள்ளச் செய்யும் என்றேத் தோன்றுகிறது. சுற்றியுள்ள நாடுகள் கேள்விகேட்கும் போதும் ஹிட்லரும், கிம் ஜாம் உன்னும் உருவாகத் தான் முடிகிறது அது இணையம் இல்லாதக் காலமானாலும், இணையமிருக்கும் காலாமானாலும். எப்படியானக் காலமானாலும்.
சிலரின் கருத்துகள், பல்கலைக்கழக விவாதங்களை ஆதரிக்கும் பேராசிரியர்களை உலகச் சமாதானம், தீவிரவாதச் சமாதானம் பேசச் செல்லுங்கள் எனக் கூறுகிறார்கள். இவர்கள் பல்கலைக்கழகங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றே விளங்கவில்லை. வெளியுறவு, அரசியல் சார்ந்த முடிவுகளை ஆராய அதிகாரிகள் மட்டும் இருப்பார்கள் என நம்புவது மிகவும் மேலோட்டமான எண்ணம், எல்லோராலும் பாராட்டக்கூடிய வகையில் ஒரு எந்திரம் செய்வதற்கு அதன் பின்னால் உள்ளவர்களின் உழைப்பும் ஆய்வும் மிகவும் முக்கியமானது, ஆனால் அவை பற்றி பயனர் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதே போல் தான் இதுவும் எனத் தோன்றுகிறது. வெளியுறவுக் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் பல்க்லைக் கழக அளவில் வெவ்வேறு விதங்களில் அலசப்பட்டும் ஆராயப்பட்டும் பிரசுரிக்கப்படுகின்றன, அவை பெரும்பாலானத் தருணங்களில் இக்காலத்திற்கும் நடப்பு அரசியலிலும் தாக்கத்தை உண்டு பண்ண முடியும் எனக் கூறிவிட முடியாது, ஆயினும், எல்லா நேரமும் தாக்கத்தை உண்டு பண்ணாமலும் இருப்பதில்லை. தாக்கம் இல்லாதிருத்தலுக்கானக் காரணங்களும் பல நிலைப்பட்டவை. பின்னர் இது பற்றி விவாதிக்கலாம்.
நான் ஐஐடியில் படித்த போது, எனக்கு கற்றுக் கொடுத்த ஒரு குவாண்டம் இயற்பியல் பேராசிரியர், காஷ்மீர் விவாகாரத்தைப் பற்றி நம் நாடாளுமன்றத்தில் இருந்து, அமெரிக்க சபைகள் வரை பேசியவர், அதற்காகத் தொடர்ந்து கொலைமிரட்டல்களையும் பெறுபவர். ஆனால் அவர் கூட இப்படி முடக்கும் வேலைகளை ஆதரிப்பவர் இல்லை. நாட்டை ஆதரியுங்கள், ஆனால் நடப்பவற்றையும் கண்கொண்டு வாளாவிருப்பது எவ்வகையிலும் நல்லதல்ல. இப்படி சுயசிந்தனையை ஆதரிக்கும் ஆசிரியர்களை விட்டுவிட்டு, பிள்ளைகளுக்கு நூலில் இருக்கும் விசயங்களைக் கற்றுத் தரமட்டும் போதுமான ஆசிரியர்கள் வேண்டுமென்பதால் தான், சமூகத்தில் கல்விச்சீரழிவும் பின்பு நாமே அதைக் குறை சொல்வதும் நிகழ்கிறது. எல்லையில் நின்று போராடும் போர்வீரர் எவ்வளவு முக்கியமோ, அதே போல் விமர்சனத்தை நோக்கும் பக்குவமும் வேண்டும். வெறும் வலுவான எல்லையை வைத்துக் கொண்டு, உள்ளேக் குப்பையைக் கொட்டிக் கொண்டே இருந்தால் எப்படி?
ஆக, எல்லாநேரமும் கண்களை மூடிக் கொள்ளவேண்டும், அவர்களுக்கு வேண்டும் நேரம் மட்டும் கண்திறந்து பார்த்து அவர்களின் துயரம் போக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய தன்னலக் கருத்து?
குறைகளை மிகுதியாக்கிக் கொண்டே இன்னொரு பக்கம் எதற்கு ஆதரிக்கிறோம் எனத் தெளிவான ஆய்வுநோக்கில் கருத்துகளை விடாமல், உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவதன் சம்பளம் சாதிய மத இன வெடிகளை ஆயத்தப்படுத்தி குழப்பம் மிகுந்த நாடாக்குவதே ஆகும். வேண்டாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டால், நாடு என்பது யார் வாழ்வதற்கு? இது மிக எளிதான விசயமாக ஆகிவிட்டால், உள்ளே இருக்கும் பிரச்சினைகள் பூதாகரமாய் ஆகும், வீட்டில் இருப்பவர்களின் பிரச்சினை கூட பெரிய சமூகப் போராட்டமாக வெளிவரும், நீதிமன்ற வளாகத்தில் மாணவர்களையும் பத்திரிகையாளர்களையும் அடித்தவர்கள் வெளிவந்துவிட்டார்கள், பொய்யானக் காணொலிகள், மாணவ தற்கொலை, விவசாயத் தற்கொலைகள் என்றாலும் அது எளியோர் பக்கமேப் பாதிப்பதும் அதற்கு மிகக் கேவலமாக, புதுப்பாணி என்பதும், மேலும் அதற்கு சரியான வழிக் காணாது, மாணவர்கள் காமுகர்கள் என்பதும் மிகவும் தரங்கெட்ட நிலையில் அரசின் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.
திரும்பவும் ஆட்டக்கோட்பாட்டு வழியிலான அனுமானம்
ஆக, மேலிருக்கும் விசயங்களை வைத்து உய்த்துணரும் போது, சில ஆட்டக்கோட்பாட்டியலின் படி அனுமானிக்க முடிகிறது. அரசின் தற்போதைய காரியங்கள் பார்ப்பதற்கு சென்னின் தோற்றமுரண் (Amartya Sen’s Paradox) போல் அமைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு யோசிப்பவர்கள் லிபரல் மினிமலிசம் (சிலர் மட்டும் ஒரு விசயத்தை விரும்புவது) எனும் ஒரு நிலையில் இருந்து பேரட்டோ உவப்பு (எல்லோரும் ஒரே விதமான விசயத்தை விரும்புவதைப் போல் ஒரு மாயை உருவாக்குவது) என்பதை நோக்கிச் செலுத்துவது போல் உள்ளது. மேலும் சமூகக் குழப்பத்திற்கான ஒரு விசயமாக எல்லோருக்கும் தன்னலமும் மற்றும் என்ன யோசிக்கிறோம் அல்லது பேசுகிறோம் எனத் தெரியாமலேயே நினைப்பதும் பேசுவதும் போல் அமைவது, பற்பல சிக்கல்களுக்கே இட்டுச் செல்லும்.
திரும்பவும் சொல்கிறேன்.. வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!! ஆனால், உங்களின் வழியிலல்ல… 2000 வருடம் முன்னர் இருந்த எதோவொரு அனுமானத்தில் ‘அந்த நல்ல வாழ்க்கை’ தான் வேண்டுமென்கிறீர்கள், ஆனால், இருப்பவர்களின் மத்தியில் பிரிவினையை உண்டு பண்ணவும்செய்கிறீர்கள். இதுவே தாங்கள் முரணுடன் செயல்படுகிறீர்கள் எனத் தெரியவில்லையா?!
உடன்படுவோர் எதிர்ப்போர் ஆட்டக் கோட்பாடுகளில் கருத்து கொண்டோர் விமர்சிக்கலாம். நன்றி!