பொருளற்றவாழ்க்கை / nihilism – ஒரு எளிய வெள்ளோட்டம்

பொருளில்லாத் தத்துவத்தின்/nihilism மூலம் அன்றாடவாழ்வைக் காணுங்கால் சராசரி உணர்வுநிலைத்தாண்டிய முழுமையுணர்வை எப்படிக்காணலாம் என்பதையறிய விழைந்ததால் உண்டானது இக்கட்டுரை.

1. உள்ளுணர்ந்து ஒருவர் இயங்குகிறாரோ இல்லையோ, பொதுவாக, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய உள்ளம் மகிழ்வாகவோ துன்பமாகவோ, இல்லை, எந்தவுணர்வுநிலையையும் சாராமலோக் கூட இருக்கலாம்.

2. அல்லது இறந்தும் விடலாம்

3. அவரின் இருப்பும் இறப்பும், உணர்வுப்பூர்வமாக மற்றோருக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஏதும் தேங்குவதில்லை, தங்குவதுமில்லையென்று எல்லாரும் உணர்ந்திருந்தாலும், ஒரு உந்துதலைப் பெற்றிருப்பதனாலேயே வாழ்க்கையை வாழ்கிறோம்.

4அ. ஆயினும் அவ்வகையான உந்துதல் பெரும்பாலும் அர்த்தமற்றது அல்லது தொலைநோக்குப் பார்வையில்லாது, அந்தந்த நேரத்துக்குத் தேவைக்காக செயல்படுவது.

5. இதில், பிரச்சினையென்னவெனில், இவற்றையெல்லாம் கற்றோர் கல்லாதார் எந்த நிலையில் இருந்தாலும், ஒரே மாதிரியான, படிவத்திற்குள்ளேயே சிக்குண்டிருக்கிறோம்.

6. சில படிவங்கள் கவித்துவமானவை (artisitic interpretations மெய்ஞானப் புலம்பல் போல), சில பொதுவோட்டத்தில் இருப்பவை (சொந்தபந்தங்களிடம் புலம்புவது). எப்படியிருப்பினும், திரும்பவும் முதலாம் கருத்திலிருந்தே தொடர்ந்து ஓடும்.

7. இவ்வகையில் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

8. இடாய்ச்சு/(David Deutsch, a quantum physicist) அவர்கள் கூறியதாக சேது (@Sethu Subbar)க் (https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&reply_comment_id=1834432536638687&comment_tracking=%7B%22tn%22%3A%22R%2321%22%7D) குறிப்பிட்டிருந்தது போல், மொத்த சூரியக்குடும்பமும், பேருணர்வுப் பெற்று சத்யயுகம் போல் இருந்தாலும், இதே போன்றநிலையிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

9. இப்படியெல்லாம் பொருளற்றதாக இருப்பதனாலேயே, எதன்மீதும் பற்றற்று அன்பாக இருக்க வாய்ப்பு உண்டு. இடாய்ச்சுமுறையில் பேருணர்வு கொண்டு இயங்குவதாக இருந்தாலும் அன்பையுணராத் தன்மை சமூகத்தில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

(விட்கன்சுடைன்/Ludwig Wittgenstein போல ட்ரேக்டடஸ் போல கூற்றுவகையில் எழுதத் தலைப்பட்டேன். குழப்பங்களைத் தவிர்க்க, விளக்கித் தொடர்கிறேன்.)

இதற்கெல்லாம் மொத்த அர்த்தந்தான் என்ன? ஊழ்வினை போன்றவற்றை நம்பினாலும், நம் தேவைக்கேற்ப நடப்பில் அவரவர் வசதிக்கு வாழும் முறைமையும் உள்ளது. முழுமையுணர்வையெட்ட பலவழிகள் என்பதும் ஒருவழியென்பதும் அவரவரின் வரையறைகளைப் பொருத்தது. இங்குள்ளப் பெரும்பாலான பிரச்சினைகளுக்கானக் காரணம், வழிகள் இருக்கிறதா இல்லையா என்பதும், நாம் செய்வது சரிதானா என்ற ஒப்புமைக் குழப்பத்தினாலும் தான்.

ஓர்ந்த ஓர்நிலையென்றுக் (union) கூறிக்கொண்டே, ஈர்நிலைகளையோ (நான், மற்றவர்கள்), பல்நிலைகளையோ (நான், சார்ந்தோர், சாராதார்) தேவைக்கேற்பப் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கு பல்நிலைகள் என்பது, நான் என்பதற்கும் நான்-தவிர்த்த மற்றவர்களுக்கும் இடையேயானத் தொடர்பு. செய்யவேண்டியதற்கும், செய்யவியலாதநிலைகளுக்கும் இடையேயானத் தொடர்புகளையும் குறிக்கிறேன். இவ்வளவு விவாதம் நடைபெறும்போது, நாம் நம்முடைய உணர்வுகளை உருக்கி வார்க்கக்கூடிய வார்த்தையைத்தான் தேடுகிறோமேயொழிய அந்த ஓருணர்வைப் பெறுவதில்லை.

அதுபாட்டுக்கு இயங்குமொன்றுக்கு விளக்கங்கள் தந்து அதன் வடிவத்தைப் பெறமுயல்கிறோம்.

இதில் புறத்தில் உள்ளதா, அகத்தில் உள்ளதா என்பதும், இக்குழப்பங்களினால், இன்னும் பிரச்சினைகளையுண்டாக்கும் என்பதும் என் எண்ணம். வெளியெல்லாம் இழைகளாக/strings, ஆற்றற்றுடிப்புகளாக/vibrations இருக்கும் என இயற்பியல் கூறுகிறது. அவற்றைக் காணவும் இயலவில்லை, அதேநேரம் உணரவும் (lhc experiments) இயலவில்லை, ஆனால் அது இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

இருப்பதற்குவாய்ப்பேயில்லையெனினும், நானொரு தொடர்-பருப்பொருளில்லையென்பதையும் (continuous body) இவ்வுடலத்திற்கென ஒரு அணுக்கட்டமைப்பும், அக்கட்டமைப்பில் உள்ள அணுக்களுக்கிடையே இடைவெளியுள்ளது என்பதையும், ஓரளவு இயற்பியல் விளக்கமுடியும். அப்படியானால், ஒரு சல்லடைபோல், இந்த நேர-இடப்புள்ளிகளில் இயங்கித்திரிகிறேன். அதாவது, அணுக்களுக்குள்ளும் புறமும் வெளி/space உள்ளது. ஆக, நாம் நம்மை முப்பரிமாண சல்லடையெனலாம். (நம்மில், அதிகப்பரிமாணங்கள் மற்ற அடிப்படைத்துகள்களுக்குத் தெரியலாம், புரியவில்லையெனில் விட்டுவிடலாம்)

ஒருப்புள்ளியிலிருந்து இன்னொருப்புள்ளிக்கு நகரும் ஊடுருவக்கூடியக் கதிர்கள், நாமாக மாறி, பின் வெளியேறி வேறொன்றாக வெளியேறவும் இயலும், இதனாலேயே, எனக்கு எல்லோரும் ஒருவகையில் சம்பந்தப்படலாம் எனத் தோன்றும். என்னுடலில் நுழைந்து மற்றோர் உடலில் நுழைந்து வெளியேறும், இழைகளோ/strings அல்லது துகளோ/particles இவ்வாறுத் தொடர்பை உண்டாக்கலாம், அந்தத் தொடர்பு அதிகநேரமோ, குறைந்தநேரமோ இருக்கலாம். இதனாலேயேக் கூட, ஒரு வேளை, இடாய்ச்சு அப்படியொரு முடிவுக்கும் கூட வந்திருக்கலாம். (அல்லது, உயிர்பொறியியல், சைபர்னெடிக் உயிரினம் சார்ந்த ஆய்வுத்துறை வளர்ச்சியினால் கூட கூறியிருக்கலாம்)

அதாவது, ஆரம்பத்தில் இருந்தே, ஒரு விசயத்தைக்கூறிவருகிறேன், வைரஸ், வயிற்றிலுள்ள நுண்ணுயிர் பாதிப்பினால், ஏற்படும் உயிரியல் கொந்துதல்/hacking, வேதிக்கொந்துதல், வேறுவகையானத் தொழிற்நுட்ப கொந்துதல் மூலம் எந்நேரமும் நாம் நாமாக இருப்பதாக நினைக்கிறோம், செய்கிறோம், ஆனால், அது உண்மையில் நாமாக இல்லாமலும் இருக்கலாம் என்பது.

ஆக, நான் என்று யோசித்திருப்பதை சரிவர செய்கிறோமா என்பதே நமக்குத் தெரியவில்லையெனில். எது சரியாக இருக்கமுடியும்.

நாம் முழுமையுணர்வுபெறுவதற்கு பற்பல வழிகளையமைத்திருக்கிறோம், ஆனால், அவ்வழிகள் பெரும்பாலானோர்க்கு எதையும் காண்பிப்பதில்லை. நாம் முழுமையுணர்வுக்கான வழியில் இருக்கிறோம் என்பதும் இல்லையென்பதும், இயல்பில் ஒப்புமைப்படுத்துதலில் வருவது. மேலும், ஒருவேளை முழுமையுணர்வு பெறுவதற்கான வழிமுறைகளாக நாம் கொண்டிருக்கும் வழிமுறைகளைக் கடந்த வேறொன்றாகவும் இருக்கலாம்.

தவிர, எனக்கு முழுமையுணர்வு பெற்றவர்கள் ( புத்தர், சித்தர்கள்) எதையும் பெரிதாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுமில்லை. வாழ்வின் போக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது சரியானதாகத் தான் இருக்கிறது என்பதே அவர்களின் பதிலாக இருக்கும் எனத் தோன்றும், அவ்வாறே இதுவரை இருந்திருக்கிறது. சொடுக்கிடும் நேரத்தில் நம்மாலேயே பலவேலைகள் செய்யவியலும் போது, வல்லமையுள்ளவர்களால் இன்னும் பெரிதாகவே செய்யவியலும் என்பது, எந்தவொரு பாமரனின் கருத்தாகவேயிருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை, இல்லையெனில், மொத்தமாக, எல்லோருக்கும் மோட்சகதி அருளியிருக்கலாம்.

ஆக, சமூக வளர்ச்சி அதுபாட்டுக்குப் போகும், மாந்த உளப்போக்கு சீரடைவதும் அதுபாட்டுக்கு நடைபெறும், இந்த இடைவெளியில் நாம் தத்துவங்கள் பழகுவதெல்லாம், உளப்போக்கு மென்மேலும் சீராவதற்கும் சமூகத்தின் ஓட்டத்திற்கும்/நடைமுறைத் தேவைக்கும் இடையேயான இடைவெளியை சரிசெய்வதற்கென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, ஞானியருக்கு சரி தவறென்று ஏதுமில்லையென்பர். அதையொரு சமூகம் அல்லது சாதாரண மனிதர் ஒப்புக்கொள்ளமுடியாது, சரி தவறு பகுக்கப்படவேண்டியது முக்கியமானதாகவேக் கருதுவர்.

அதாவது, ஒரு சமூகம் தீங்குவிளைவிப்போருக்கென்று சட்டங்களை இயற்றியிருக்கும். அதற்கு நல்லதகெட்டதைத் தேர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும். அது சாதாரண மக்களுக்கும், ஒரு கொலைகாரருக்கும்/பெருஞ்சண்டைக்காரருக்கும் இடையேயான உளப்போக்கின் வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு, பெருஞ்சண்டைக்காரரினால், உண்டாகக்கூடிய கேடுகளிலிருந்துக் காப்பதற்கு விதியமைக்கும்.

விதிகளைப் படைத்ததனாலேயும், அதை எல்லோருக்கும் உணர்த்துவதன்மூலமும் சமூகம் சரியாக ஆகிறதா?! விதிகளை சரிவரக்கடைப்பிடித்தால் எல்லாம் சரியாகுமா?? ஒரு வேளை, சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் துறவியானால் எல்லாம் சரியாகுமா? இரண்டிலும் வழிதவறி அர்த்தமற்றதாகும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே, வாழும்வரையில் செய்யவேண்டியவை என நமக்கு உணர்த்தப்பட்டதையும், அந்நேரத்துக்கு ஆகவேண்டியதையுமேச் செய்கிறோம். அதாவது இயல்புநிலையிலேயே இருக்கிறோம்.

முழுமையுணர்வு வாய்த்திருக்கவேண்டியதொரு தருணத்தை ஒருவர் தவறவிட்டுவிட்டார் எனக் கொண்டால், அதற்கான தீர்வுதான் என்ன? கிரியா யோகம் போன்று மனத்தையும் உடலையும் தீட்டிவைத்தும், முழுமையுணர்வை எட்டாதக் கதைகளைக் கேட்டிருக்கிறோம் தானே. ஆதலால், கடவுளர் பத்தியென்பது எல்லாம், இவ்வளவுக் குழப்பங்களின் நடுவே நடத்தவேண்டியதை நடத்துவதற்கென்பது என் எண்ணம்.

அது சரியான நேரத்தில் தூங்காமல் சுகம்பெறுவதாகக்கூட இருக்கலாம், அல்லது வேறெதாவதாகவும் இருக்கலாம். இப்படி இருநிலைகளில்–அதாவது, 1. எனக்கு வழிமுறைத் தெரியும், 2. ஆனால் இன்னும் போய்ச்சேரவேண்டிய இடத்திற்குச் சென்றடையவில்லையென்று உணர்வது –இவ்விருநிலைகளினால் ஏற்படும், உடல்-உளத்தாக்குதல்களும் (affecting psychosomatically) பெரும்விளைவை உண்டுபண்ணக்கூடியவையென யோகசூத்திரங்கள் சொல்கின்றன.

இருப்பின் புதிருக்கானத் தீர்வுகள், மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலாமுறைகளிலும், அதாவது கட்டமைக்கப்பட்டவழிகளில் இல்லாமல், கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் பொருளற்றதாக ஆகும்போது எல்லாம் எளிதானதாகவும் ஆகும், அதாவது, தேவையற்றதைச் செய்வதால் முழுமையுணர்வுத் தருணம் தவிர்க்கப்படலாம், அது முழுமையுணர்விற்கானப் பயிற்சியென்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அது அதனாலேயே வாய்க்காமல் போகலாம்.

ஆக, சாதாரணமாக இருப்பதும், முழுமையுணர்வை அருளலாம். கடைசியாக, முழுமையுணர்வும் ஒன்றுமில்லாததாகப் பொருளற்றதாக இருக்கலாம்.

குறுக்கியற்பார்வை, அறிவியல் நடைமுறைகள்…

https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&comment_tracking=%7B%22tn%22%3A%22R%22%7D  விவாதத் தொடர்ச்சி..

இயற்பியலின் ஆய்வுவரையறையென்று பொதுவாக, நாம் குறிப்பிடுவது போல், அதுவொரு எல்லைக்குள் அலகிடப்பட்டதல்ல, ஆய்வுநடைமுறையில்! இங்கே குழந்தைகளுக்கான ஊடாடலுக்காக இதை சேது எழுதியிருப்பதால், வரையறைக் குளறுபடிகளுண்டாகா வண்ணம் இருக்க இதையிங்கேக் குறிப்பிடுகிறேன்.

நாம் உணர்ந்த இயற்பியலேக்கூட, சமூக, உள, உயிரியற்றளங்களில் நடக்கும் இயக்கங்களையும் காண்பிக்கிறது. ஆனால், இன்னும் சமன்பாடுகளால் உணர்த்தமுடியாத நிகழ்வுகளை விளக்கமுடியாவிட்டாலும், அவற்றை, நாம் அறிந்த அறிவியலோடு நிற்பதில்லை. குறுக்கியப்பார்வையானாலும், அது படிப்படியாக விசாரங்களின் மூலம் வளரும். அறிவியல்/இயற்பியல் விசாரங்கள் இருவகையானவை, 1. சோதனையின் மூலம் அறிவது. 2. கோட்பாட்டுமுறைமையின், அறிவியற்கட்டமைப்பின் மூலம். கோட்பாட்டுமுறைமை, புதிய இயற்பியலுக்கும் கணிதத்துக்கும்–அதாவது, நிகழ்கால இயற்பியலையும், கணிதத்தையும் தாண்டும் முயற்சிகள்– வழிவகுக்கும்.

இவ்வாறு சோதனையின் மூலம் காணவியலாத, புதிதாகப் படைத்தவற்றை, இயற்பியல், கணித கட்டமைப்பின்/foundation of physics and maths, வாதங்களின் மூலமும், தெரிந்த, தெரியாதக்கோட்பாடுகளின் மூலமும் அலசி ஆராய்ந்து வழிகளை உருவாக்குவார்கள். தக்கது நிற்கும், சிலசமயம் ஒரு புதியக் கோட்பாட்டை வெளியிட்டும் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, வருடாவருடம் இப்படி பல வருகின்றது! ஆயினும் திடீரென, சில கோட்பாடுகள், 50, 60 வருடத்திற்கப்புறம் ஏதாவது புதியக் கோட்பாட்டின் மூலமாகவோ அல்லது சோதனையின் மூலமோ பெரிதாக வளர்ந்து நிற்கும்.

இப்படி ஒருவர் செயல்பாடாக இல்லாமல், பலரின் செயல்முறையாக சமூகவளர்ச்சிக்காக வளர்ந்தாலும், நிறைய ஆய்வாளர்கள், உள்ளுக்குள் ஒரு யோகியைப் போல் கேள்விகள்கேட்டுத் தேடினாலும், வெளிக்காட்டிக்கொள்வதில்லை, பலநேரங்களில்ன தேடலுக்கும், கண்டுபிடித்ததற்கும் இடைவெளி சிறிதாக இருந்தாலும், நிரூபணம் தெளிவானால் தான் வெளியிடுவதென்பது, அவர்களின் வழக்கமாகக் கொள்வதால், வெளியில் பெரிதாகப் பேசுவதில்லையென்பதாகத் தான் நான் காண்கிறேன். சில சமயங்களில் வேறொருவர் அதேமாதிரியானத் தேடலைக் கொண்டிருந்தால், அவர்களின் வெளியிடாப் பரிமாணங்கள் வெளிவரும்.

உணர்வுநிலையாலானக் கலைஞர்கள், உணர்ந்ததை வெளியிடுவதற்கான வரையறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை. யோகிகள் அதையும் தாண்டியநிலையிலுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது என் அனுமானம். யோகியர்நிலைபோன்றவொன்றின் மூலம், இயற்பியலை அதாவது, இயற்கையைக் காணுங்கால், இன்னும் நிறைவான அறிவைப் பெறவியலும் என்பதும் என் அனுமானம். அதை நோக்கி தெரிந்த ஆய்வாளர்கள் பலர் நகர்கிறார்கள்.

இது எப்பொழுது வெவ்வேறுவகைப்பட்டத் துறைசார்வல்லுநர்கள் அனைவரையும், எல்லாவகையான அறிவியலையும் பிணைக்க ஆரம்பித்தோமோ, அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒருவகையில் இதுவொரு சிறப்பான செயல்பாடுதான், தத்துவவாதிகள் இடையில் புறந்தள்ளப்பட்டார்கள் என உணரவும் ஆரம்பித்திருக்கிறோம், இப்படி உணர்வதே மிகப்பெரிய மாற்றந்தான்.

இதுதான் வழியென்று ஆன்மீகவழியில் கூட ஒருவழியில்லையென்கிறார்கள். சிலர் உள்ளில் நீள்கிறார்கள், சிலர் கர்மத்திலுறைகிறார்கள். இது ஆன்மீக-அறிவியல் விவாதம் எனக்கொண்டாலும் ஆன்மீகத்திற்குள்ளேயே முரண்படுகிறார்கள் (இதில் தனியாகப் பேசவேண்டியது நிறைய உண்டென்றாலும்), தன்னையறிதல் போன்றவை எனக்கு பிரச்சினையில்லை. நானொரு காளியம்மையின் பத்தன் தான். ஆக, முழுமையானவுணர்வு போன்றவற்றை, இப்படி எல்லாவற்றையும் சார்ந்த ஆய்வை உருவாக்கும்போது, பொதுசனப்படுத்த முடியலாம், தங்களின் வரையறைகளும் அலகுகளும் மாறலாம்! David Bohm-JK கிருட்டிணமூர்த்தி கூட்டுவிவாதங்களும் கூட இதுபோன்றதொரு ஒரு உந்துதல் தான். ஆக நீங்கள் விரும்புவதுபோல் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆயினும், இது போதாது. எல்லாவழியிலும் அறிந்தால் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் ஆகும்! பார்க்கலாம்! 

எ.ச. ஜார்ஜ் சுதர்சன்

எ. ச. ஜார்ஜ் சுதர்சன் சகக்காலத்தில் வாழ்ந்த மிகமுக்கியமான இந்திய இயற்பியலர். என்னை மிகவும் ஆழ்ந்துபாதித்த இயற்பியலர்களுள் இவரும் முக்கியமானவர். இன்று அவர் இறைத்திருவடிகளுடன் கலந்துவிட்டார்.

அவருடைய ஆய்வுப் பரம்பரையில் நேரடியாக வந்தவனாக என்னைக் கொள்ளவியலாது, ஆயினும் நான் சிறிதுகாலம் இணைந்து வேலைசெய்த இந்திய வானியற்பியற்கழகத்தின் பேராசிரியர் சிவராம் அவர்களின் ஆசிரியர் சுதர்சன் அவர்கள்.

(நோபல் பரிசு வழங்கப்பெற்ற) வலுவிலா இடைவினை/weak interaction, குவாண்டம் சீனோ விளைவு/Zeno effect, நோபல் பரிசு வழங்கப்பெற்ற சுதர்சன்-க்ளௌபர்/Sudarshan-Glauber representation குவாண்ட ஒளியியல் வழிமுறை, டாக்கியான்/tachyon எனப்படும் ஒளியினும் அதிதிசைவேகத்துகள், குவாண்ட நேரியல், ஆற்றல் தேய்வியல்/decoherence, dissipation போன்ற புலங்களில் ஆய்வை மேற்கொண்டும், மேற்குறிப்பிட்டப் பலமுறைகளையும் புதிதாக இயற்பியலில் கண்டறிந்தும் தந்தவர்.

இவரின் கண்டுபிடிப்புகளுக்காக ஒன்பதுமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பெற்றவர் எனக்கூறப்படுகிறது. ஆயினும் ஒருமுறைகூட வழங்கப்படவில்லை. கடைசியாக 2005ஆம் வருடம்- சுதர்சன் -க்ளௌபர் வழிமுறைக்காக, க்ளௌபருக்கு நோபல் பரிசு வழங்கிவிட்டு, இவரை விட்டதையடுத்து, இவரே நோபல் குழுமத்துக்கு மடலெழுதி தன் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

வேத, வேதாந்தங்கள் போன்ற இந்தியத் தத்துவங்களில் மிகவும் ஆழ்ந்து இயற்பியலை/உண்மையைத்தேடியவர். உலகளாவிய ஆய்வில் புகழ்மிக்கவராய்த் திகழ்ந்த அதேநேரம், இந்திய இயற்பியல் ஆய்விலும், தத்துவார்த்தத் தேடலுக்கும் மிகுந்தப் பங்கினை ஆற்றியவர்.

மறுகல்வியமைப்பு – 0 இன்றையக் கல்விச்சூழல், “நீட்” …

மாற்று கல்வியமைப்புகளுக்கான சூழல்கள் அமைகிற நேரமாக எனக்குத்தோன்றுகிறது.  இருக்கும் பள்ளிக் கல்லூரிக் கல்விநடைமுறைகளும் அதன்பின்னான அரசியல்களூம், மிகவும் உறுத்துகிறது. போதாதற்கு நீட் தேர்வின் விளைவுகள்.

போனவருடமும், இவ்வருடமும் நீட் தேர்வின் அடாவடிகள், மாணவர்களுக்கு தேர்வுபயத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருப்பதைக் காணமுடிகிறது. விட்டால் மாணவர்களின் மூளையையும் வெளியேவைத்துவிட்டு எழுதச்சொல்வார்கள் போல, தேர்வில் தவறு நடவாமல் பார்த்துக்கொள்வது முக்கியமே, அதற்காக அரக்கத்தனமாக, எல்லாவற்றையும் கழற்றி, யாருடைய மாண்பை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் இம்முட்டாள்கள் எனத் தெரியவில்லை. ஆகமொத்தம், மாணாக்கர்களை அலைக்கழித்ததிலிருந்து மதுரையில் இந்தியில் தேர்வுத்தாள் கொடுத்தது வரை, நீட் மடமைத்தனமும் பேய்த்தனமான நிராகரிப்பும் அதற்கான அரசியல் சமாளிப்புமாக வளர்கிறது.

*****

இன்று ஒருப்பெண்ணின் நுழைவுச்சீட்டில், தேர்வு நடக்குமிடமாக இரு கல்லூரிகள் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அதில் ஒன்றுக்கு அந்தப் பெண்ணாகவே செல்ல, தேர்வெழுதுவோர்ப்பட்டியலில் பெயரில்லையென மறுத்திருக்கிறார்கள், அங்கிருந்த மற்றப் பெற்றோர்கள் விசயமறிந்து போராட்டம் செய்திருக்கிறார்கள். இதில் மிகவும் கோபமூட்டும்படியாக, தேர்வு உயரலுவலர், இது மாதிரி பிரச்சினை வேறெங்கும் இது வரை, எங்கள் பார்வைக்குவரவில்லை, ஆதலால் இம்மாணவி போலிநுழைவுச்சீட்டு கொண்டுவந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்கள் எந்த நம்பிக்கையில் தவறே நடக்க வாய்ப்பில்லையெனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வையெழுதுமாறு வந்ததற்கு, கணினிக்குளறுபடி எனக்கூறும் இவர்கள், இம்மாதிரி ஊடகத்தில் விட்டேற்றியாக அந்த பெண் மேல் போலிநுழைவுச்சீட்டுக் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால், இவர்களால், காவல்நிலையத்தில் இதன்பேரில் புகார் சார்த்தமுடியுமா?

ஒருவேளை, அந்தப் பெண், இவர் பேரில், தன்பெயரைக் கெடுத்துவிட்டாரென ஒரு வழக்கைப்போட்டால் நன்றாக இருக்கும். வாய்க்குவந்ததைப் பேசக்கொஞ்சமேனும் தயங்குவார்கள்.

*****

சேது தன் தமிழ்க்கல்விக் கட்டுரைகளின் மூலம் (https://sethusubbar.wordpress.com/2018/05/04/tamileducation2/) அடுத்தடுத்த கல்விமுறை மாற்றம் சார்ந்த உவப்பானப் பார்வையை வைத்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தினார், அது சார்ந்து யோசித்துவரும் இவ்வேளையில், இன்றையக் கல்விச்சூழலின் சமூகவோட்டத்தின் எண்ணங்களை வெளியிலிருந்து எட்டிப்பார்க்க எத்தனிக்கிறேன்.

பெரும்பாலும் அவரவர் வாழ்க்கையனுபவங்களில் இருந்தே விசயங்களைக் கற்று, அதன்வழி தீர்வுகளையமைப்போம். ஆயினும் பிறருடையப் பார்வையைப் பெறுவதன்மூலம் இன்னும் நலமான சமூகத்தை உருவாக்கமுடியும். ஆனால், நிகழ்காலக் கல்லூரி பள்ளி நடைமுறைகளும், கல்விக்கற்பிக்கும் ஆசிரியர்களின் சிரத்தையின்மையும், கல்விநிலையங்களின் அரசியலும் கொள்ளை இலாபம் வைத்து கல்வியைவிற்கும் முறைமைகளும் மிகுந்த அழுத்தம் உண்டாக்குகின்றன.

எனக்கிருந்த பள்ளி-கல்லூரி அனுபவத்தில், சிறுவயதிலேயே நான் வளர்ந்தப்பின்னர் என்னுடையப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவில்லையென்று சொன்னால் பரவாயில்லையென்றே அடிக்கடி யோசிப்பேன், இத்தனைக்கும், அப்படியொன்றும் மோசமான அனுபவங்களை நான் பெற்றிருக்கவில்லை.

பின்னர், சமூக அறிவியலின் தத்துவங்களையும் ஆட்டக்கோட்பாட்டையும் படித்தப்பின்னர், அந்த எண்ணம் கொஞ்சம் சீர்பட்டது என்றாலும் இருக்கும் கல்வியமைப்புகள் மேல் பெரியப்பிடிப்பு இல்லை,  அதனாலேயே, நான் ஒரு வெள்ளோட்ட ஆய்வுநிறுவனத்தை (Institute for Natural Philosophy/அறிவியற்குடில்) ஆரம்பித்தேன், அதில் நண்பர்களையிணைத்து, சில திட்டங்களை செயல்படுத்தினேன், பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லையெனினும், ஆய்வாளர்களின் செயல்பாடுகள் குறித்த திட்டவரையறையைக் கொண்டுசெல்லும்விதம் என ஓரளவுக் கற்றுக்கொண்டேன், அந்நேரத்தில் நாங்கள் அனைவரும் ஆய்வின் தொடக்கத்தில் இருந்தோம், ஒரு 4, 5 ஆண்டுகள் சிறப்பாகப் போனது, பிறகு பெரிதாக ஆரம்பிப்பதற்கு நேரம் வரும்போது ஆரம்பிக்கலாம் என நிறுத்தப்பட்டது.   அதுபற்றி பிறகுப் பேசுகிறேன்.

ஆனால், தற்காலத்திய கல்வித்துறையின் நடவடிக்கைகளைக் கண்டால், இனிவரும் சமூகத்தில் எல்லோரையும் என்னைப்போல் யோசிக்க வைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

நிர்மலா தேவி போன்ற பேராசிரியர்கள் இம்மாதிரியான சமூகப்போட்டிமனப்பான்மைகளில் இருந்தே தங்கள் இலாபங்களை அறுவடைசெய்கின்றனர், ஒருவேளை சிக்கவைக்கப்பட்டிருந்தாலும், அதன் மூலம் அங்கிருந்துதான். ஆக அவர்கள் அப்படி இயங்குவதற்குக் காரணம், ஏதோவொருவழியைப் பிடித்துக்கொண்டு அதன்வழி சென்றால்தான் சமூகம் முன்னேறும் என்றொன்றை நாம் நினைத்துவைத்திருப்பதே. மற்றவர்களை எல்லாம் ஏறிமிதித்து அவரவர் சாம்ராச்சியத்தை நிறுவிக்கொடிநாட்டுவதற்கு எதற்கு சமூகம்? தனித்த மிருகமாய் வாழ்ந்தே சாகலாம். சமூகமாய் வாழ்வதாய் காட்டிக்கொண்டு, அதன் தத்துவத்துக்கு மாறாகப் படிநிலைகளை/strata உருவாக்குவதைத்தான் எல்லோரும் செய்கிறோம், வேண்டுவோர்க்கு வேண்டுங்கல்வியென, கல்வியின் அழகையும் சிறப்பையும், பெருந்தேடலையும் உருவாக்காமல், சம்பாத்தியத்திற்கான வேலையில்கூட கற்றக்கல்விப் பயன்படாத சமூகத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்.

இதில் ஆச்சரியத்தக்கவகையில், நம் சமூகச்சான்றோரின் திறன் வியக்கவைப்பது. நம் சமூகத்திலும் தொழில்முறையில்லா சான்றோரின்/amateurs திறன், திறன்மிகுசான்றோரின்/professionals திறனுக்கு ஒப்பான தீரத்தைக்கொண்டிருப்பதை வியந்து நோக்கியிருக்கிறேன். ஆனால், சமூகத்தின் அரசை, அரசியலை உருவாக்குந்திறன் இவர்களுக்கு இல்லாதது அல்லது, பெரும்பாலும் தரப்படாதது வியப்பு. ஒருவேளை அப்படி உருவாயினும் அங்கீகரிக்கப்பட்ட வலதுசாரி குண்டர்களான “ஹூண்டா/Junta”வின் கைப்பிடிதனில் மாறுவதை வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஒரு பரந்துபட்டக் கருத்துக்கேட்போ அல்லது அதற்கான வழிகாட்டலோ இல்லாமல், இறுக்கிப்பிடிக்கப்பட்ட வலியுறுத்தல் மூலம் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. அணுமின்னிலையத்துக்கே அஞ்சாது, கருத்துக்கேட்பு நடத்தாது, அதுவமைந்த ஊருக்கு அவசரநிலைப்பாடங்களையும் சொல்லித்தராச் சமூகத்தில், சட்டத்தின்வழியாக அல்லது குறைந்தபட்சம் எண்ணவோட்டங்களின் வழியாகவாவது சிச்சிறு கிளர்ச்சிகளைச் செய்தாலாவது  நம் சமூகத்துக்கு ஆகும் என நம்புவோமாக.

களஞ்சியம் – 6: குவாண்டக்கணினி – 2

குவாண்டப்பின்னல்

இதில், 1930களில் சுரோடிங்கர் கணிதமொழியில் அலைச்சார்புகளை வடிக்கமுயன்றபோது, Verschränkung எனும் குவாண்டப்பின்னலைக் கண்டறிந்தார், அதாவது, இரு குவாண்டத்துகளின் அலைச்சார்புகளை ஒரே கணிதச்சார்பாகக் குறித்தார், அக்கணிதச்சார்பை, இரு தனித்தனியான சார்புகளாக பிரிக்கமுடியாது என்பதையும் கண்டறிந்தார். அதாவது, அவ்வாறு அமையும் இரண்டு அல்லது அதற்குமேற்பட்டத் குவாண்டத்துகள்கள் பிணைக்கப்பட்டத்துகள்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இந்த பிணைக்கப்பட்டத்துகள்கள் நாம் சாதாரணமாக நினைப்பதுபோல், அருகருகே இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது, இவ்வாறுப் பிணைக்கப்பட்ட இரு துகள்கள், ஒன்று பூமியில் இருந்தால், மற்றொன்று நெப்டியூன் கிரகத்திலோ, அல்லது இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் கூட பற்பல ஒளியாண்டுகள் தூரத்தைக் கடந்திருக்கலாம்.

1குவாண்டவியலும் ஐன்சுடைனின் உள சோதனையும்

அதிலென்னப் பிரச்சினை?! ஐன்சுடைன் பொதுசார்புக்கொள்கையின் அடிப்படைவிதிகளாக, சில விதிகளை வெளியிட்டிருந்தார், அதில் எந்தவொருப்பொருளும் ஒளியின்வேகத்தைத்தாண்ட முடியாது. அட, ஒளியின் வேகத்திலேயே ஒரு பொருள் செல்கிறது என வைத்துக்கொள்வோம், அப்பொழுதும் அப்பொருளுக்கு அருகில் செல்லும் ஒளி, ஒளியின் திசைவேகத்திலேயே இருக்கும் என சொல்லியிருந்தார்.

ஆக, இதில் பிணைக்கப்பட்டத்துகள்களுக்கும் ஐன்சுடைனின் விதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இந்தப் பிணைக்கப்பட்டத்துகள்களில் ஒரு துகளை தொந்தரவுசெய்தால், மற்றொருக் துகள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்தாலும், அத்துகளும் சேர்ந்து பாதிக்கப்படுவதாக, சுரோடிங்கரின் கோட்பாடு உரைத்தது. இது நம் பகுத்தறிவுக்கு ஒத்துழைக்காததாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும். ஐன்சுடைன் விதிகளில் ஒன்றான ஒளியின் திசைவேகத்தில் எதுவும் செல்லவியலாது என்றாலும், ஒரு துகளைப்பாதித்தால், மற்றொருத்துகள் பாதிக்கப்படுவது உடனுக்குடன் என்பது, ஐன்சுடைனின் ஒளியின் திசைவேகத்தினைக் கடக்குமென்பது, அருகாமை தத்துவத்தை உடைப்பதை அவரால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை, மேலும் பழங்கோட்பாட்டுப்பின்னணியிலேயே இயற்பியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருந்த காலமது.

இவ்வாதத்தில், ஆல்பர்ட் ஐன்சுடைன் (Albert Einstein), போரிசு பொடொல்ச்கி (Boris Podolosky), நாதன் ரோசன்( Nathan Rosen ) ஒருபக்கமும், போர் ஒருபக்கமுமாக, இயற்கையின் தத்துவத்தை வாதித்தனர். இவ்வாதமே, நவீன அறிவியலின் புதியத்திறப்புகளாக அமைந்தது. உண்மையில் ஐன்சுடைன்பொடொல்ச்கிரோசன் (Einstein-Podolsky-Rosen) வாதத்தின் மூலமாகத் தோற்றமுரணாகக் காணப்பட்ட, இவ்வகை பிணைக்கப்பட்டத்துகள்களே, குவாண்டக்கணினி மற்றும் தொடர்பியலுக்கு அச்சாணியாகியது. தற்காலத்தில் அவ்வகைத்துகள்கள் EPR ஈபிஆர் துகள்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகைத்துகள்கள் உருவாக்கும் முறைமையையும் பயன்படுத்தும்முறைமையையும் அறிவோம், ஆனால், அதன் குவாண்டநிலையின் முழுமையான இயக்கநிலையை அறியவில்லை.

குவாண்டவியலின் ஆரம்பக்காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், இம்மாதிரியான ஆய்வுகளால், பற்பல அதிர்ச்சிகளைத் தந்தனர். அவ்வகை அதிர்ச்சிகளைத் தரும் குவாண்டவியல், அக்காலத்தைய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததனவாக இருந்து வந்தது. 1990களின் ஆரம்பத்தில், சார்லஸ் பென்னட் (Charles Bennett), ஆர்தர் எகர்ட்(Arthur Ekert), பீட்டர் சோர் (Peter Shor), ஆசர் பெரெஸ் (Asher Peres) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட பிரத்யக்சம் (quantum teleportation), காரணிகள் கண்டறியும் முறைமையுடன், அடிப்படைக் கட்டுமான முறைமைகளைத் தர ஆரம்பித்திருந்தனர். அதேபோல் ஈபிஆர் துகள் சார்ந்த சோதனைகளை அஸ்பே (Alain Aspect) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட ஒளியியற்சோதனைகள் மூலம் நிரூபித்ததும், குவாண்ட சோதனைகள் சார்ந்த நவீன சோதனைகளுக்கு அடித்தளமிட்டது!

அதில் இருந்தே, நாம் முன்னர் பார்த்த விஞ்ஞானிகள், குவாண்டக்கணினிகளின் உறுப்புகளான, குவாண்டக் கதவங்கள் (gates), குவாண்ட நிரல்கள் (programs), படிமுறைகள்(algorithm), அதிலுள்ள இடர்பாடுகள் ஓரியல்தன்மையிழப்பு, ஆற்றலிழப்பு (decoherence, dissipation) என கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து, தற்பொழுது, ஐபிஎம், கூகுள் போன்ற நிறுவனங்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்கியது வரை வளர்ந்து நிற்கிறது. அவை பற்றிய மேலோட்டமான விசயங்களைக் காண்போம்.

களஞ்சியம் – 5: குவாண்டக்கணினி – 1

குவாண்டவியல்

கரும்பொருள்களின் கதிரியக்கத்தன்மையை மரபார்ந்த வெப்ப இயக்கவிதிகளை வைத்து விளக்க முற்பட்டபோது பிறந்ததே குவாண்டவியல். கரும்பொருட்களிலிருந்து வெளிப்பட்ட ஒளிநிறமாலையின் அலைநீளத்தைக் கொண்டு, வெவ்வேறு அறிவியலர்கள் தத்தமது அறிவியல் விதிகளால் விளக்க முயன்றனர். வில்லெம் வீன் (Wilhelm Wien) எனும் ஆத்திரிய இயற்பியலர், முதலில் அதிஅலைநீளத்தில் அதன் வெப்பநிலையைப் பொருத்து நேர்கீழ்விகிதத்தில் உள்ளதைக் கண்டறிந்தார்.

\lambda_{max} \propto \frac{1}{T} ( 1.1)

இராலே பிரபு சேம்சு சீன்சு (William Strutt Rayleigh – James Jeans) விதியை, இரைலியும் சீன்சும் தந்தனர். உயர் அலைநீளத்தில் வெளிவரும் நிறமாலையை இவர்களின் விதி சிறப்பாக வரையறுத்தாலும், சிறிய அலைநீளங்களில்ம் அதாவது அதிக அதிர்வெண்களில், அல்லது அதிக ஆற்றலில் இவர்களின் வாய்ப்பாடு முடிவிலியை யைத் தொடுவதை, புற ஊதாக் கேட்டைவிளைவிப்பதாக இருப்பது, அதாவது சக்தி அதிகமாக வருவதால் பேரழிவை உண்டுபண்ணவேண்டும், ஆனால் ஒரு கரும்பொருளைச் சூடேற்றுவதால் அவ்வவாறு எதுவும் நிகழ்வதில்லை, மேலும் ஆற்றல் அழிவின்மைவிதியை ஒட்டியே இயற்கை இயங்குகிறது. ஆக அவர்களின் விதியும் சரியாகப் பொருந்தவில்லை.

u(\lambda,T) \propto \frac{1}{T^4} ( 1.2)

இவ்வாறு கரும்பொருளில் இருந்து வந்த நிறமாலையானதை, மரபார்ந்த வெப்ப இயக்கவிதிகளால் சரியாக விளக்கமுடியாத போது, மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனும் செர்மானிய இயற்பியலாளர், கரும்பொருளில் இருந்து தொடர்நிறமாலையாக அல்லாமல், குறிப்பிட்ட ஆற்றல் பொட்டலங்களாக வருகிறது என நிறமாலையின் தன்மையை மரபல்லாத வேறொரு வகையில் விளக்கினார், இது கரும்பொருளிலிருந்து வரும் வெப்பக்கதிர்வீச்சின் நிறமாலையின் தன்மையினை வெகுவாக விளக்கியதோடு, குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆற்றல் குறிப்பிட்ட அளவினதாகவே வெளிவரும்.

1தோற்றமுரணும், அருகாமைத்தத்துவமும் (nonlocality)

இவ்வாறு ஆரம்பகாலக் கோட்பாடுகளைக்கொண்ட இந்த அறிவியலை பழைய குவாண்டவியல் என்று தற்காலத்தில் அழைக்கிறோம். இதுபோல் சோதனையிலிருந்து கோட்பாட்டுவடிவையெட்ட ஆரம்பித்த குவாண்டவியலானது, சிறிதுசிறிதாக அணுத்துகளியற்பியல், ஒளியியல் என வளர்ச்சியடைந்து, குவாண்டக்கணினிகள் வரையெட்டியிருக்கிறது. இரிச்சர்டு ஃபெயின்மேன் (Richard Feynman), பால் பெனியாப் (Paul Benioff)போன்ற இயற்பியலாளர்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்க வழிமொழிந்தனர். அதேநேரம், பழைய குவாண்டவியற்கால கட்டத்திலேயே, எர்விந் சுரோடிங்கர்(Erwin Schrödinger), நீல்சு போர் (Niels Bohr), மேக்சு பான் (Max Born), லூயி டு ப்ராய் (Louis de Broglie) , வெர்னர் ஹை/கைசன்பர்க் (Werner Heisenberg) போன்றோர் குவாண்டவியலின் கணிதவடிவத்தையும் தத்துவத்தையும் வெவ்வேறு வழிகளில் பரிந்துரைத்தனர்

களஞ்சியம் – 4: நியூட்டனின் இயக்கவிதிகள் – 3

3மூன்றாம்விதி

ஒரு பொருளின் மீது, நாம் ஒரு விசையை ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால், அப்பொருளானது அதே விசையை, அதே அளவில், ஆனால் எதிர்த்திசையில் தரும்.

அப்படியானால், ஒருவர் காய்கறிவண்டியைத்தள்ளி தெருக்களில் வணிகம்செய்பவர் எனக்கொள்வோம். சரி, அதற்கு அவர் அவருடையக் காய்கறி வண்டியைத்தள்ளுகிறார் எனக்கொள்வோம். அப்படித்தள்ளும்போது, அவ்வண்டியும் அதே அளவான ஆனால் எதிர்த்திசையில் கொடுக்குந்தானே? அப்படியானால் என்னவாகும்?

இப்பொழுது, போன இரண்டாம் விதியில் சோதனை 1ல் இருபக்கமும் வீமசேனர்கள் எதிரெதிர்திசையில் தந்தனர் என்றோம் அல்லவா?! அப்பொழுது பொருளானது நகரவில்லைதானே?!

அதேபோல் காய்கறிவிற்பவரோ தள்ளுவண்டிக்கு விசையைத்தருகிறார் என்றால், அவ்வண்டியும் எதிர்த்திசையில் அதே அளவு விசையைத் தருமென்றால், வண்டி நகரக்கூடாது தானே. அதுமட்டுமல்ல, எந்தவொருப்பொருளும் எதிர்த்திசையில் இது போல் ஒரு விசையைத்தந்தால், நாம் எந்தவேலையைத்தான் செய்யவியலும்?!

சரி வண்டி நகராமல் இருக்கவேண்டும் என்றால் என்னகாரணமெல்லாம் இருக்கலாம். ஒரு வேளை தள்ளுவண்டியின் சக்கரம் நகரவே முடியாத அளவுக்கு நிலத்தில் பதிந்துவிட்டது எனக் கொள்வோம். அப்படி இருக்கும்பட்சத்தில், என்ன அழுத்தினாலும் வண்டி நகராது ஆனால், நம் கை வலிக்கும். கை வலிப்பதன் காரணம் என்ன?! ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது?! கொடுக்குமிடமே திரும்பபெறுமிடமும் என்பதுப் புரிகிறதா?

சரி, இதை விளங்கிக்கொள்ள சரியான திறவுகோல், “ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால்என்ற விதியில் உள்ள சொற்றொடர். காய்கறிவணிகர் வண்டியைத்தள்ளும்போது, அவர் இருவேறுதிசைகளில் விசைகளைத் தருகிறார், ஒன்று கைமூலமாக வண்டிக்கு ஒரு விசை, இன்னொன்று, கால் மூலமாக பூமியில் ஒருவிசை, அதேபோல, வண்டியானது அதே விசையை அவர்கைகளில் தந்தாலும், இன்னொருபுறம் அதன் சக்கரம் பூமியில் பதியாமலும் உருண்டோடும் தன்மையிலும் இருப்பதால், மொத்த விசையின் திசையன் கூட்டுத்தொகை, சுழியாகாமல், ஒரு குறிப்பிட்ட அளவு வந்துவிடும், அதன் விளைவால் வண்டி இயங்குகிறது.

இன்னொரு உள சோதனை: விண்ணுந்துகள் விண்வெளிக்கலங்கள் நகர்வதற்கானக் காரணம் இம்மூன்றாம்விதியால் தான். விண்கலங்களுக்கும் விமானங்களுக்கும் என்ன வித்தியாசம். விமானங்கள் காற்றை உள்வாங்கி பின்வெளித்தள்ளி, விமானத்தை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் அழுத்தவேறுபாட்டை உண்டுசெய்தே முன்னேறுகின்றன. அப்படியானால் காற்றில்லாத விண்வெளியில் விமானங்கள் என்னவாகும்? விண்வெளியில் விமானங்களால் விண்கலங்கள் போல நகரவியலாது. ஆக, விண்வெளியில் விண்கலங்களில் எரிபொருள் எரிந்து பீய்ச்சிஅடிப்பதன் மூலமே, இயங்கமுடியும். இவ்வாறு எதிர்திசையில் விசையினைசெலுத்தி நகரலாம்.

களஞ்சியம் – 3 : நியூட்டனின் இயக்கவிதிகள் – 2

இரண்டாம் விதி

ஒரு பொருளின் இயக்கத்தை வரையறுக்கும்பொழுது. அதன்மீதான விசையைப் பொருத்து அமைவதைக் கண்டோம். அப்படியானால் ஒரு பொருளின் மீது விசைக்கொடுத்தாலே நகர்ந்துவிடுமா?!

எடுத்துக்காட்டிற்கு, ஒருவர் ஒரு பொருளை நகர்த்துகிறார் எனக்கொள்வோம், அதற்கு நேரெதிராக, இன்னொருவர் அதே அளவு விசையை அப்பொருளின் மேல் கொடுத்தால் என்னவாகும்? பொருள் அங்கேயே நிற்குமல்லவா?!

சரி, இதே சோதனையை, ஒருபக்கம் வீமசேனன் மாதிரி ஒருவரும் மற்றொருபக்கம் திறன்போதாத ஒருவரும் இருக்கிறார்கள் எனக்கொள்வோம், இருவரும் எதிரெதிர்திசையில் விசையைக்கொடுத்தால் என்னவாகும்?! வீமன் செலுத்துந்திசையில் அப்பொருளானது நகரும். சரியா?!

மற்றொரு சோதனை, முதல் சோதனைமாதிரியே, இருபக்கமும் வீமன் மாதிரி இரு பளுதூக்கும்வீரர்கள், அப்பொருளின் மீது எதிரெதிர்திசையில் விசைபோடுகிறார்கள், மூன்றாம் திசையில் இப்பொழுது ஒரு திறன்போதாத அம்மனிதர் விசையைத்தருகிறார், எனக்கொள்வோம், இப்பொழுது, பொருளானது, வீமன் மாதிரியான ஆட்கள் பக்கம் நகரவில்லையெனினும், வலுவற்ற மனிதர் செலுத்தும்திசையில் பொருளானது நகர ஆரம்பிக்கும். அப்படியானால் என்ன அர்த்தம்?!

பொருளானது, அதன்மேல் செலுத்தப்படும் விசைகளின் அளவையும் திசையையும் பொருத்தே நகருவது விளங்கும். நகரும் அளவும் திசையும், எல்லா விசைகளின் திசையன் கூட்டுத்தொகையைப் பொருத்தே அமையும். அதாவது மொத்தவிசையின் விளைவின் அளவு மற்றும் திசையைச் சார்ந்து அமையும்.

ஒரு விசைப்பாட்டில் நகரும் பொருளானது, அதன்மேல் செயல்படும் மொத்தவிசையின் விளைவானது, அப்பொருளின் திசைவேக மாறுபாட்டுவீதத்துக்கு நேர்விகிதத்தில் அமையும்.

இதையே கணித சமன்பாடாக எழுதுவோம்.

F \propto \frac{v_2-v_1}{t_2-t_1} ( 2.1)

இதில் F என்பது விசையைக் குறிக்கும், v_2v_1 என்பன முறையே நேரங்களில் நகரும்பொருளின் திசைவேகங்களாகும்.

\propto என்பது விகிதாச்சாரத்தைக் குறிப்பது. அப்பொருளின் இயக்கம் நிறையைப் பொருத்து அமைவதாலும், இயக்கத்தின் போது பொருளின் நிறையானது மாறாது என்பதாலும், விகிதத்தை எடுத்துவிட்டு, நிறையைக் கொண்டுப் பெருக்கிட, அதே சமன்பாடானது

F = m \frac{v_2- v_1}{t_2 - t_1} ( 2.2)

என மாறும். அதோடு, a=(v_2 -v_1)(t_2 - t_1)   என்பதை முடுக்கம் என வரையறுக்க,

F = m a ( 2.3)

நேர்விகிதம் என்றால் என்ன அர்த்தமெனில், விசை கூடினால், திசைவேகமாறுபாடும் அதிகரிக்கும், அதேபோல் விசையைக் குறைத்தால் திசைவேகமாறுபாடுக் குறையும். என்பதைக் குறிக்கும்.

ஆக, முதலாம் விதியில் நிலைமப்பண்பைக் கண்டோம், அது போல், இரண்டாம்விதியில் முடுக்கத்தையும், நிறையைப்பொருத்து இயக்கம் அமைவதைக் காண்கிறோம்.

சரி, இரண்டாம் விதியில் சோதனை 1ல் இரு வீமசேனர்கள் இருபக்கமிருந்தும் அழுத்தினால் என்னவாகும் எனப் பார்த்தோம், இதேமாதிரியான ஒரு சோதனையைச் செய்யப்போகிறோம். அதற்கு நாம் அனைவரும் பேச்சுவழக்கிலேயேப் பயன்படுத்துகிற நியூட்டனின் மூன்றாம்விதியைக் காண்போம்.

களஞ்சியம் 1: இயக்கச்சட்டகங்கள் / reference frames

இயல்பு வாழ்க்கையில் இயக்கவிதிகளைத் தெரியாமலேயே அவற்றைப் பயன்படுத்தக்கூடிய பட்டறிவைப் பெற்றிருக்கிறோம். காட்டாக, வேகமாக வண்டிகள் ஓடும் சாலையைக் கடக்கநேரிடும்போதோ, அல்லது அதேசாலையில் ஒரு வண்டியை முந்தும்போதோத் தேவையான இடத்தில் முடுக்கி, வேகத்தைக்கூட்டிக்குறைத்து என நம்மையறியாது இயக்கவிதிகளை உள்வாங்கியே, ஒரு நிதானத்தில் இயங்குகிறோம். வண்டியின் வேகத்தை கண்களால் கண்டே உணர்ந்து, இச்சாலையை இவ்வளவு வேகத்தில் கடந்தால், விபத்தைத் தவிர்க்கலாம் என்பதை உளத்தில் கணக்கிட்டு செயல்படுவோம்.

இயக்கச்சட்டகங்கள்

இயக்கவிதிகளைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு முன்னர், இவ்விதிகள் எதற்காக என்று அறிந்துகொள்ள, முதலில் பொருட்களின் இயக்கங்களை நாம் எவ்வாறு எல்லாம் உணர்கிறோம் என்பதைக் காண்போம். சார்புக்கொள்கைகளினைப் புரிந்து கொள்வதற்கு, வெவ்வேறு இயக்கச்சட்டகங்களில் (reference frames) பொருட்களின் இயக்கம் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவும் இவ்விதிகள் உதவும்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு அன்பு, இசை, உமா என்ற மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள் எனக்கொள்வோம். ஒரு ஓடும் வண்டியில் அன்பும் இசையும் அருகருகே அமர்ந்திருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது வண்டி மதுரையிலிருந்து திருச்சிக்குச் செல்வதாகக் கொள்வோம், வண்டி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்தாலும், அவ்விருவரும் வண்டியில் இருக்கும்பொருட்டு, அன்புக்கும் இசைக்கும் இடையேயான இடைவெளி அல்லது தூரம் மாறாது இருக்கும். (அப்படியானால், இருவருக்கும் இடையேயான இடைவெளி சுழியம்.)

இன்னொரு எடுத்துக்காட்டு அன்பும் இசையும் வண்டியில் இருக்கும் போது, உமா வண்டிக்குவெளியேத் தரையில் நின்றிருக்கிறார் என்றுக்கொள்வோம். தரையில் இருக்கும் உமாவுக்கும் ஓடும்வண்டியில் செல்லும் நண்பர்களுக்கும் இடையேயானதூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். உமா நிற்குந்தரை ஒரு இயக்கச் சட்டகம் என்றால், மற்ற நண்பர்கள் அன்பும் இசையும் இருக்கும் வண்டி மற்றொரு இயக்கச் சட்டகம்.

ஒரு வேளை, உமாவும் இன்னொரு வண்டியில் எதிர்த்திசையில் பயணிக்கிறார் என்றால், அதாவது அன்புக்கும் இசைக்கும் எதிர்த்திசையில், உமா செல்கிறார் என்றால், இருவண்டிகளுக்கும் இடையேயான தூரம் வேகமாக அதிகரிக்கும்.

ஒருவேளை, உமா பின்னாடியே அவர்வண்டியில் பிந்தொடர்ந்து வந்து அன்பு,இசையின் வண்டியைப் பிடித்துவிட்டார் எனக்கொள்வோம். இப்பொழுது இருவரும் சாலையில் இருவேறு வண்டியில் இருந்தாலும் பேசிக்கொண்டேச் செல்கிறார்கள் என்போம், இப்பொழுது உமாவுக்கும் அன்புக்கும் இடையேயான தூரம் மாறாதே இருக்கும்.

இதுவரையிலான இவ்வெடுத்துக்காட்டுகளை நம்முடைய உளத்தில் ஓட்டிப்பார்க்க இயலும் அல்லவா?

தத்துவக்கூடை: இருப்பு/existence, அறியொணாமை/agnosticism, வெறுமை/emptiness and a physicist! :-p

நேற்று இராமசாமி செல்வராஜ் மற்றும் சுந்தர் இலட்சுமணன் அண்ணன்களின் மிக அழகான  ஆழமானத் தத்துவார்த்தப் பேச்சின் கருவைக் காணநேர்ந்தது.

“”வணக்கம் வணக்கம். எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்து ஒரு சுழற்காற்றில் ஏறியமர்ந்துகொண்டால், அப்படியே சென்று வாழ்வியல் மெய்யியல் சமூகவியல் தத்துவவியல் உடலியல் உள்ளத்தியல் தமிழியல் மொழியியல் இலக்கணவியல் என்று ஒரு பெருஞ்சுற்றே வந்துவிடலாம். இன்னும்கூட இருக்கலாம். நம் வடிகட்டியில் சிக்கியது இவ்வளவுதான்.”

“ஏன் இங்கு இருக்கிறோம் சுந்தர்? இதற்கான விடை இல்லையே”, என்றேன்.
“இன்னும் ஒருபடி மேலே போங்க. இங்கு நாம் மெய்யாகவே இருக்கிறோமா?”, என்கிறார்.
ஆகா.
தின்ற உணவு செரிக்கக் குடித்த இஞ்சியெலுமிச்சைச் சாறும், மசாலாத் தேநீரும் கூட நமது இருப்புக்குச் சான்று தானே.” —

அதில் கலக்கமுடியவில்லையே என்ற நினைப்புடனேயே என்கருத்துக்களையிட்டிருந்தேன், பின்பு அவர்களின் கருத்தைத்தொடர்ந்து என்கருத்தை நாலேநாலு வரியில் எழுத ஆசைப்பட்டேன் ஆனால், “இம்புட்டுப் பெரிசையெல்லாம் போடமுடியாது போவென”, ஃபேஸ்புக்கே உமிழும் அளவுக்கு மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது.  எனக்கும் வலைப்பூவில் எழுதினால் டைரிக்கு வசதிதான்!

சிசிறிது நேரத்திற்கு முன்பு, என்னுடையப்பதிவில் தங்களின் கருத்துக்கு கருத்திடும்போது, தற்செயலாக என்ற வார்த்தையை, எழுதும் போது, பல விசயங்கள் தோன்றியது. என்னுடைய அனைத்துப்பதிவுகளுக்கும் காரணங்களான, ஏனிந்தப்பதிவு என்றுக்கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு “தற்செயலான” காரணமிருக்கும்.   அதைப் பெரும்பாலும் என்னுடையக் கட்டுரைகளில் ஏனெழுதினேன் என குறிப்பிடவும்செய்வேன், தங்களுக்கு குறிப்பிட்டதுபோல்–நேரம், குவாண்டம் சீனோவிளைவு, வெப்பியக்கவிதிகள்! அவையனைத்தும் ஏதோவொரு கோணத்தில் இருப்பைக்கேள்விப்படுத்துவதைச்சார்ந்தே இருக்கும், ஆனால் ஏனிந்த இருப்பு, என்பதன் ஆழம் கொஞ்சம் அதிகமானாலும் பிடித்துவிடலாம் என்பது நம்பிக்கை, ஒருவேளை ஏனிந்த இருப்பு என்பது உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்!

ஒரு நிலையில் நின்றுகொண்டு காரணந்தேடின் அந்நிலைக்கு பதில்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதை தற்செயல் விளைவாகக்கொள்ளலாம், ஆனால், நாம் நிற்குமிடம் எல்லாவற்றுக்கும் மேலேயென்றிருந்தால் அனைத்து நிகழ்வுகளும் காரணகாரியத்தைச்சார்ந்தவையாகிவிடும் அல்லது அப்படியாகத்தோன்றக்கூடச் செய்யலாம், அல்லது ஒற்றையடிப்பாதையில் நான் மிதிக்கும் அந்த புல்லுக்கு காலையில் நீர்கிடைத்திருக்குமா என்பதிலிருந்து என் துன்பம் தொடங்கிவிடும் .

ஆழமான பக்தியோகத்திலும் கடவுளையும் கடந்துபோகவே வழிப்படுத்துகிறார்கள். கேள்விகள் கேட்காமல் ஞானயோகம் துவங்காதென்பதிலிருந்தே நாத்திகத்தின் ஆணிவேர் அங்கிருந்து உடனேக் கிளைக்கும். ஆக, ஏதோவொரு நம்பிக்கைபோல் தெரிந்திருக்கும் விசயங்களே மற்றொருஏதோவொரு நம்பிக்கையினின்று அகலச்செய்வனவாகவாகத்தானிருக்கிறது. அப்படியானால், நம்பிக்கையென்பது அன்றைக்கானத் துன்பத்தினின்று மேலேறுவதற்காக போலத்தான் தெரிகிறது.

கவித்துவம், அறிவு எல்லாம் அவ்வகையைச்சார்ந்தவைபோலத்தான் தோன்றுகிறது. அதாவது, என்னுடைய வலிக்கானக் காரணம், மூளையின் உணர்வுவாய்க்காலில் உண்டாகும் மின்னழுத்தவேறுபாடோ அல்லது வேதிவினையோதான் என்பதுத் தெரிந்தப்பின்னரும் எனக்கு வலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் முதன்முதலில் நான் அதை அறியும்போது, வலியில் மாற்றம் இல்லாது இல்லை, அதே விசயம், நன்கு பரிட்சயம் ஆனப்பின்னர், அதன் அறிவு எனக்கு துணைபுரிவதில்லை. ஆக, துன்பமானத்தருணத்தில் நம்பிக்கைசார் அந்த அறிவால் நாம் நம்மை சற்று ஏமாற்றிக்கொள்வதுபோல் இருக்கிறது, அதற்கான ஆணிவேரின் ஞானம் கேட்பதோடு நிற்கவில்லையெனினும், இருப்பில் இருந்து / சாதாரண வாழ்க்கைமுறையிலிருந்தே பெறுவதைப்போலத்தான் ஆதிசங்கரர், நாகார்ச்சுனர், தர்மகீர்த்திப் போன்றோரும் கூறுகிறார்கள்.

== “உங்கள் பின்னூட்டத்தின் கருத்துச் செறிவு அடர்த்தியாகவும் ஆழமாகவும் இருக்கிறது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துச் சிந்தித்தால் தான் முறையாக என்னால் உள்வாங்க முடியும் போலிருக்கிறது 🙂
ஆழத்தை அறிந்துகொள்ள முடிந்தால், ‘அன்றைக்கான துன்பம்’ என்னும் ஒன்று இல்லாமல் போய்விடும் அல்லவா?

ஆம் ஆம் அதேதான்! அறிவானது வலிக்கு மாத்திரை செய்கிறது; மருத்துவம் பார்க்கிறது; அது சைபோர்க்/cyborg மாதிரியோ குருத்தணுக்கள்/stem cells dynamics மாதிரியோ எனவளர்ந்துகொண்டே சென்றாலும், அன்றைக்கானத்துன்பத்தைத்தீர்க்கும் அளவிலேயே நிற்கவேண்டியிருக்கிறது, ஆய்வாளர்கட்கு இதை ஒத்துக்கொள்ளவொப்பாது என்பது ஒரு விசயமானாலும், அவர்களின் தீர்க்கதரிசன- நீண்டகால ஆய்வுத்திட்டங்களுங்கூட, அன்றன்றைக்கான அல்லது பின்னாளில் ஒருநாளுக்கான விசயத்தின் தீர்வாகவேயிருக்கிறது. ஆனால், நாம் நினைப்பதும் வேலைசெய்வதும் நம்பிக்கையுடன் இருப்பதும், ஒரே நொடியில் என் துன்பங்களை அகற்றமுடியுமா என்பதை எட்டுவதற்காகத்தான், ஆனால் இந்த ஆசையை இரகசியமாகவே வைத்துக்கொள்கிறோமெனத் தோன்றுகிறது.   ஏனெனில் ஒருநொடியில் வலிநிவாரணியென்பது எல்லாநேரத்திலும் சாத்தியப்படுவதில்லை, இந்தமாதிரியானமருத்துவப் புள்ளியியல் இடர்களால், உடனடிநிவாரணம் உண்டு என்றுகூறுவதற்கு அஞ்சவேண்டிவருகிறது.  ஆக நம் புள்ளியியல் அறிவு இதை ஒத்துக்கொள்வதுமில்லை மனமொப்புவதுமில்லை, பெரும்பாலும்!  ஆனால், இது பொதுவான அறிவு, நமக்குநாமே நாம் அவ்வளவு நம்பிக்கையுடன் (பகுத்தறிவுடனும்) இருக்கிறோமா?

ஒரு எடுத்துக்காட்டு, நமக்காக ஒருவர் எல்லாவேலையையும் செய்கிறார் எனவைத்துக்கொள்வோம், நமக்கு எதையுமே செய்யவேண்டிய அவசியமேயில்லையென்ற நிலையில் இருந்தால், நாம் அந்நிலையை ஒத்துக்கொள்வோமா?! கேட்கும்போது இனிமையாகத்தோன்றினாலும், நாம் கர்த்தத்துவம் என்றவொன்றுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறோம்!  இதில் இன்னொரு சிக்கலென்னனவென்றால், நமக்கு அந்த கர்த்தத்துவம் என்பது, சாதாரணமாய் கிடைத்தாலும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறோம், ஒரு துன்பம் வந்து, அது நம்மை துவைத்துக்காயப்பட்டப் பின்னர், மீண்டெழுந்து அதைக் கைப்பற்றவேண்டும் என்ற மனனிலையேப் பெரும்பாலும் இருப்பதுபோலும் தெரிகிறது.

மிக எளிமையான “வெற்றிக்கான முதற்படிதோல்வி” என்பதாகட்டும், ஆழ்ந்த புத்தரின் ஞானத்தையறிவதாகட்டும், இம்மனனிலையிலேயேதான் நாம் இருப்பதுபோலும் தெரிகிறது, இம்மனனிலை மிகவும் ஆச்சரியமானவொன்றல்லவா?!  நமக்குவேண்டியதொன்று, ஆனால், நாம் விருப்பப்படுவது முற்றிலும் எதிரானவொன்றைப்பெற்று அதில் சாதித்து நமக்குவேண்டியதை அடைவதுபோன்ற மனனிலை.

பெரும்பாலும், ஆழ்ந்த அறிவையெட்டிப்பிடிக்க முயலும்போது, சொந்தபந்தங்கள் காலைப்பிடித்து இழுப்பதை மனம் உடனே ஒத்துக்கொள்ளும் என்றால், நம்முடைய சொந்த அறிவும் அதைத்தடுத்து, எட்டவிடுவதில்லையென்பது நகைமுரண்,, அதை எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்றும் அறிந்துகொண்டால் சிறப்பாயிருக்கும்.

இன்னொரு எடுத்துக்காட்டாக, ஒருவேளை, எதோவொரு விசயத்தில் அதிசயத்தை எதிர்பார்க்கிறோமெனில், அதிசயம் நடந்தபின்னரும், நிசமாவா என்று புத்தி தீவிரமாகத் தெரிந்துகொள்ளமுயலும். ஒருவேளை என்னால் அதிசயத்தைக் கண்டுகொண்டே, அதிசயத்தின் காரணத்துக்கான (நாமறியாத ஒரு) பரிமாணத்தைப் புரிந்துகொள்ளமுடிவதற்கு என்னுடைய மூளையை அனுமதித்தால் மட்டுமே அதையெட்டமுடியும், அதற்கு நாம் கற்றவற்றை சற்று மறக்கவேண்டியிருக்கிறது, உதாரணத்துக்கு மந்திரத்தில் மாங்காய் விளையாது, காரணகாரியமில்லாத (அது உண்மையில் நாம் அறியமுடியாத) தற்செயல்விளைவுகள் என்பதுபோன்றவை.

ஆக அன்றையத்துன்பத்தைத்தாண்டி நாம் யோசிக்கிறோம் என்பதும், ஒரு நம்பிக்கை போலத்தானேயிருக்கும்,  ஏனெனில் நம்முடைய சொந்த அறிவே நம்மைத்தடுக்கிறது எனப் பார்த்தோம், மேலும் நமக்கு சுதந்திரமானப் பார்வையுண்டு என்று நம்புவதும் சற்றுயோசிக்கவேண்டியிருக்கிறது,  சமீபத்தைய ஆய்வொன்றில் பூனையினங்கள் தான்தோன்றித்தனமாய் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட வைரஸ்கள் எனக் குறிப்பிடப்படுகிறது,  மேலும் சில உளவியல் ஆய்வுகள் (மருத்துவப்புள்ளியியலையும் இதில் கணக்கில் கொள்ளவேண்டும்!) பூனையை வளர்ப்பவர்கள் சமூகவிலங்காக இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு எனக் கூறுகிறது.  பூனையைப் போலவேப் பூனைப்பிரியர்களூம் இருப்பதற்கு காரணம், அதே வைரஸாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.   இதில் நான் என்பது உண்மையில் அவரா, அல்லது அந்த வைரஸின் பின்னூட்டமா?!

சராசரி மனிதரின் நிலையிலேயே  மறந்தும் நினைத்தும் சிந்தித்தும் சிந்திக்காமலும் இருந்தால் எப்படியிருக்கும்?! பார்க்க கொஞ்சம் கிறுக்கு சாமியார் போலத் தெரியுமென நினைக்கிறேன். அதனாலேயே, இப்படிக்குறிப்பிட்டேன், அடியாழம் எட்டியபின்னர் இருப்பு என்பதே உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்.

நாகார்ச்சுனர் அவருடைய மூலமத்யமககாரிகாவில் இப்படி வினவுகிறார், வெறுமையைப்/emptiness பற்றிப்பேசும்போது, ஒன்றுமில்லாததிலிருந்து எப்படி ஒரு பொருள் தோன்றியிருக்கும், அப்படியானால், பொருட்களுங்கூட ஒன்றுமில்லாதவையா?! இதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு இயற்பியல் ஞானம் உதவியதென்றாலும், இதையெழுதுவதற்கு பொருட்களை ஒன்றுமில்லாதவகையாக யோசிப்பதற்கு, பொருள் அல்லது பொருளின் தன்மையென்றால் இன்னதுதான் என்ற அடிப்படைஞானத்தை நான் மறந்தால் மட்டுமே இப்படியோசித்திருக்க முடியும்.

மன்னிக்கவும் அண்ணன், நான்குவரிகளில் முடித்துவிடவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன், மீண்டும் பெரிதாகிவிட்டது. ஆனால், தங்களுடைய இருவரின் அறிவார்ந்த உரையாடலையும் அங்கில்லாமல் தவறவிட்டுவிட்டேனேயென்று நேற்று இப்பதிவைப்பார்த்ததும் யோசித்தேன், அப்படி நினைத்ததிலேயே பேச்சு வளர்ந்துவிட்டது என நினைக்கிறேன். தங்களிருவரின்/மற்ற தத்துவவியலாளர்கள் கருத்துக்களையும் அறிய விழைகிறேன்!