மறுகல்வியமைப்பு – 0 இன்றையக் கல்விச்சூழல், “நீட்” …

மாற்று கல்வியமைப்புகளுக்கான சூழல்கள் அமைகிற நேரமாக எனக்குத்தோன்றுகிறது.  இருக்கும் பள்ளிக் கல்லூரிக் கல்விநடைமுறைகளும் அதன்பின்னான அரசியல்களூம், மிகவும் உறுத்துகிறது. போதாதற்கு நீட் தேர்வின் விளைவுகள்.

போனவருடமும், இவ்வருடமும் நீட் தேர்வின் அடாவடிகள், மாணவர்களுக்கு தேர்வுபயத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருப்பதைக் காணமுடிகிறது. விட்டால் மாணவர்களின் மூளையையும் வெளியேவைத்துவிட்டு எழுதச்சொல்வார்கள் போல, தேர்வில் தவறு நடவாமல் பார்த்துக்கொள்வது முக்கியமே, அதற்காக அரக்கத்தனமாக, எல்லாவற்றையும் கழற்றி, யாருடைய மாண்பை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் இம்முட்டாள்கள் எனத் தெரியவில்லை. ஆகமொத்தம், மாணாக்கர்களை அலைக்கழித்ததிலிருந்து மதுரையில் இந்தியில் தேர்வுத்தாள் கொடுத்தது வரை, நீட் மடமைத்தனமும் பேய்த்தனமான நிராகரிப்பும் அதற்கான அரசியல் சமாளிப்புமாக வளர்கிறது.

*****

இன்று ஒருப்பெண்ணின் நுழைவுச்சீட்டில், தேர்வு நடக்குமிடமாக இரு கல்லூரிகள் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அதில் ஒன்றுக்கு அந்தப் பெண்ணாகவே செல்ல, தேர்வெழுதுவோர்ப்பட்டியலில் பெயரில்லையென மறுத்திருக்கிறார்கள், அங்கிருந்த மற்றப் பெற்றோர்கள் விசயமறிந்து போராட்டம் செய்திருக்கிறார்கள். இதில் மிகவும் கோபமூட்டும்படியாக, தேர்வு உயரலுவலர், இது மாதிரி பிரச்சினை வேறெங்கும் இது வரை, எங்கள் பார்வைக்குவரவில்லை, ஆதலால் இம்மாணவி போலிநுழைவுச்சீட்டு கொண்டுவந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்கள் எந்த நம்பிக்கையில் தவறே நடக்க வாய்ப்பில்லையெனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வையெழுதுமாறு வந்ததற்கு, கணினிக்குளறுபடி எனக்கூறும் இவர்கள், இம்மாதிரி ஊடகத்தில் விட்டேற்றியாக அந்த பெண் மேல் போலிநுழைவுச்சீட்டுக் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால், இவர்களால், காவல்நிலையத்தில் இதன்பேரில் புகார் சார்த்தமுடியுமா?

ஒருவேளை, அந்தப் பெண், இவர் பேரில், தன்பெயரைக் கெடுத்துவிட்டாரென ஒரு வழக்கைப்போட்டால் நன்றாக இருக்கும். வாய்க்குவந்ததைப் பேசக்கொஞ்சமேனும் தயங்குவார்கள்.

*****

சேது தன் தமிழ்க்கல்விக் கட்டுரைகளின் மூலம் (https://sethusubbar.wordpress.com/2018/05/04/tamileducation2/) அடுத்தடுத்த கல்விமுறை மாற்றம் சார்ந்த உவப்பானப் பார்வையை வைத்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தினார், அது சார்ந்து யோசித்துவரும் இவ்வேளையில், இன்றையக் கல்விச்சூழலின் சமூகவோட்டத்தின் எண்ணங்களை வெளியிலிருந்து எட்டிப்பார்க்க எத்தனிக்கிறேன்.

பெரும்பாலும் அவரவர் வாழ்க்கையனுபவங்களில் இருந்தே விசயங்களைக் கற்று, அதன்வழி தீர்வுகளையமைப்போம். ஆயினும் பிறருடையப் பார்வையைப் பெறுவதன்மூலம் இன்னும் நலமான சமூகத்தை உருவாக்கமுடியும். ஆனால், நிகழ்காலக் கல்லூரி பள்ளி நடைமுறைகளும், கல்விக்கற்பிக்கும் ஆசிரியர்களின் சிரத்தையின்மையும், கல்விநிலையங்களின் அரசியலும் கொள்ளை இலாபம் வைத்து கல்வியைவிற்கும் முறைமைகளும் மிகுந்த அழுத்தம் உண்டாக்குகின்றன.

எனக்கிருந்த பள்ளி-கல்லூரி அனுபவத்தில், சிறுவயதிலேயே நான் வளர்ந்தப்பின்னர் என்னுடையப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவில்லையென்று சொன்னால் பரவாயில்லையென்றே அடிக்கடி யோசிப்பேன், இத்தனைக்கும், அப்படியொன்றும் மோசமான அனுபவங்களை நான் பெற்றிருக்கவில்லை.

பின்னர், சமூக அறிவியலின் தத்துவங்களையும் ஆட்டக்கோட்பாட்டையும் படித்தப்பின்னர், அந்த எண்ணம் கொஞ்சம் சீர்பட்டது என்றாலும் இருக்கும் கல்வியமைப்புகள் மேல் பெரியப்பிடிப்பு இல்லை,  அதனாலேயே, நான் ஒரு வெள்ளோட்ட ஆய்வுநிறுவனத்தை (Institute for Natural Philosophy/அறிவியற்குடில்) ஆரம்பித்தேன், அதில் நண்பர்களையிணைத்து, சில திட்டங்களை செயல்படுத்தினேன், பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லையெனினும், ஆய்வாளர்களின் செயல்பாடுகள் குறித்த திட்டவரையறையைக் கொண்டுசெல்லும்விதம் என ஓரளவுக் கற்றுக்கொண்டேன், அந்நேரத்தில் நாங்கள் அனைவரும் ஆய்வின் தொடக்கத்தில் இருந்தோம், ஒரு 4, 5 ஆண்டுகள் சிறப்பாகப் போனது, பிறகு பெரிதாக ஆரம்பிப்பதற்கு நேரம் வரும்போது ஆரம்பிக்கலாம் என நிறுத்தப்பட்டது.   அதுபற்றி பிறகுப் பேசுகிறேன்.

ஆனால், தற்காலத்திய கல்வித்துறையின் நடவடிக்கைகளைக் கண்டால், இனிவரும் சமூகத்தில் எல்லோரையும் என்னைப்போல் யோசிக்க வைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

நிர்மலா தேவி போன்ற பேராசிரியர்கள் இம்மாதிரியான சமூகப்போட்டிமனப்பான்மைகளில் இருந்தே தங்கள் இலாபங்களை அறுவடைசெய்கின்றனர், ஒருவேளை சிக்கவைக்கப்பட்டிருந்தாலும், அதன் மூலம் அங்கிருந்துதான். ஆக அவர்கள் அப்படி இயங்குவதற்குக் காரணம், ஏதோவொருவழியைப் பிடித்துக்கொண்டு அதன்வழி சென்றால்தான் சமூகம் முன்னேறும் என்றொன்றை நாம் நினைத்துவைத்திருப்பதே. மற்றவர்களை எல்லாம் ஏறிமிதித்து அவரவர் சாம்ராச்சியத்தை நிறுவிக்கொடிநாட்டுவதற்கு எதற்கு சமூகம்? தனித்த மிருகமாய் வாழ்ந்தே சாகலாம். சமூகமாய் வாழ்வதாய் காட்டிக்கொண்டு, அதன் தத்துவத்துக்கு மாறாகப் படிநிலைகளை/strata உருவாக்குவதைத்தான் எல்லோரும் செய்கிறோம், வேண்டுவோர்க்கு வேண்டுங்கல்வியென, கல்வியின் அழகையும் சிறப்பையும், பெருந்தேடலையும் உருவாக்காமல், சம்பாத்தியத்திற்கான வேலையில்கூட கற்றக்கல்விப் பயன்படாத சமூகத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்.

இதில் ஆச்சரியத்தக்கவகையில், நம் சமூகச்சான்றோரின் திறன் வியக்கவைப்பது. நம் சமூகத்திலும் தொழில்முறையில்லா சான்றோரின்/amateurs திறன், திறன்மிகுசான்றோரின்/professionals திறனுக்கு ஒப்பான தீரத்தைக்கொண்டிருப்பதை வியந்து நோக்கியிருக்கிறேன். ஆனால், சமூகத்தின் அரசை, அரசியலை உருவாக்குந்திறன் இவர்களுக்கு இல்லாதது அல்லது, பெரும்பாலும் தரப்படாதது வியப்பு. ஒருவேளை அப்படி உருவாயினும் அங்கீகரிக்கப்பட்ட வலதுசாரி குண்டர்களான “ஹூண்டா/Junta”வின் கைப்பிடிதனில் மாறுவதை வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஒரு பரந்துபட்டக் கருத்துக்கேட்போ அல்லது அதற்கான வழிகாட்டலோ இல்லாமல், இறுக்கிப்பிடிக்கப்பட்ட வலியுறுத்தல் மூலம் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. அணுமின்னிலையத்துக்கே அஞ்சாது, கருத்துக்கேட்பு நடத்தாது, அதுவமைந்த ஊருக்கு அவசரநிலைப்பாடங்களையும் சொல்லித்தராச் சமூகத்தில், சட்டத்தின்வழியாக அல்லது குறைந்தபட்சம் எண்ணவோட்டங்களின் வழியாகவாவது சிச்சிறு கிளர்ச்சிகளைச் செய்தாலாவது  நம் சமூகத்துக்கு ஆகும் என நம்புவோமாக.