ஏன் புதிதாகக் கண்டுபிடிப்பனவற்றைப் பார்த்தவுடன், அன்றைக்கே முன்னோர் இவற்றையெல்லாம் அறிந்திருந்தனர் என்றுக்கூறும் போக்கு அதிகமாகவுள்ளது, மேலும் ஏன் பழமைவாதம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றக் கேள்விக்கும்…
இதில் ஒரு சின்ன பிரச்சினை ஒளிந்துள்ளது. உண்மையென்பது எப்பொழுதும் உள்ளது. ஒவ்வொரு பரிணாமப்படிநிலையும், பின்னர் தலைமுறையும் அவரவர்க்கு எட்டிய விதத்தில், அவர்கள் அனுபவம் அறிவைக்கொண்டு உண்மையையறியவும் மற்றோருக்கு உரைக்கவும் செய்கிறார்கள். அது வேதம், உபநிடதம், பௌத்த சுத்தாக்கள் போன்ற நமக்குத் தெரிந்த அல்லது மறைந்த நூல்களின் மூலம் அவ்வப்பொழுது சொல்லிவைக்கப்பட்டது.
இவையனைத்தும் தனிமனிதரின் சிந்தித்தலின் மூலம் உணர்ந்தது, ஆனால், ஒருவர் உணர்வதை மற்றொருவருக்குக் கடத்துவதில் ஏகப்பட்டப்பிரச்சினைகள். அதே நேரம், அதற்குப் பொதுவான ஒரு வடிவம் இருப்பின் சரியாக வரலாம் என்பதன் விளைவே, எழுதப்பட்ட வேதங்களும் சுவடிகளும், அதிலும் உணர்தலில் அறிந்துகொள்ளும் பார்வையில் பல இடர்கள், உருவாகின்றன. இதற்கிடையில் நாம் அறிவின் வளர்ச்சியால் நவீன அறிவியல் உண்டுபண்ணுகிறோம். ஆனால், நாம் அதை வேறொருபார்வையில், பார்ப்பவரின் அறிவு, காணும் உண்மையைப் பாதிக்காவண்ணம், மூன்றாம்நிலை கண்காணிகளைப் பயன்படுத்தும் நிலைக்கு செல்கிறோம், அவை உணர்விகள்/sensors-ஆக அமைகின்றன. இதில் பார்க்கும் முறைமைதான் வேறு, மனிதகுலம் அதன் ஆர்வத்தின் விளைவாலேயே பரிணமித்திருக்கவேண்டும்.
ஏன், நேற்றுநாம் கண்ட சீனோ விளைவு கூட சீனோவின் தோற்றமுரணிலிருந்து வந்தவை தாம். அதற்காக அங்கேயே நின்றிருந்தால், புதிதாக வந்திருக்காது, அதே நேரம் ஏற்கனவே இருந்ததை முன்னோர்களின் யோசிக்குந்திறனையும் கற்றறிந்தனவற்றையும் அறிந்திருப்பதும் நல்லவிசயந்தானே!
அறிவியல் வளர, குவாண்டம், சார்பு இயற்பியல் போன்ற நவீன அறிவியல், ஏற்கனவே நாம் பயன்படுத்தும் கண்காணிகளின் கண்களின் வழியாகக் காண்பதில் உள்ள தவறுகளை எடுத்துக்காண்பிக்க, அதை சரிசெய்ய நாமெல்லாம் உழைக்கிறோம் .. நமக்கும் வாழ்க்கை ஓடுகிறது, உண்மை அதன்போக்கில் அதுவாகவே உள்ளது!
ஆக, எதையும் வியத்தலும் இகழ்தலும் வேண்டாவென்று “எங்கள் முன்னோர்” அன்றைக்கேக் கண்டுபிடித்துவிட்டனர்!!