என்னுடைய முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய ஒருவர் இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.
குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும். அடுத்து ஒரு பெண் என்பவளோ அல்லது ஓர் ஆண் என்பவனோ திருமணம் செய்து தான் வாழ வேண்டியது கட்டாயமில்லை. திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு. இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி. இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.
// குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.//
எப்படி??
//ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.//
ஆம், அப்படித்தான்.
// வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். //
தவறு. சமூகபிரசித்தி பெற்ற வெளிநாட்டு சினிமாக்காரர்களின் விளையாட்டுவீர்ர்களின் குடும்பங்களூம் அவர்களின் வாழக்கைமுறைமை மட்டும் அந்தந்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் காரணியாகா , எல்லா நாடுகளிலும் தாத்தாப்பாட்டியுடன் வாழும் குடும்பங்கள், குடும்பப் பிணைப்பு, பண்பாடு என்று ஏராளம் உண்டு, வளர்ச்சி சார்ந்த நகர்ப்புற வாழ்க்கை, நம்மூர் போலவே, குடும்பங்களைப் பிரிக்கிறது, அவ்வளவு தான். எல்லாநாடுகளிலும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை, பிள்ளைபெற்றுக்கொள்ளவில்லை என்றுகேட்கும் அதே கலாச்சாரம் இங்கேயும் உண்டு.
//இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். //
சாதிபோன்ற அமைப்பைத் தாண்டிவந்து பொருளாதார வளர்ச்சிக்காக வேலைசெய்து, அதுவே பின்பு சமூகவளர்ச்சியாக மேலைநாடுகள் மாற்றத்தான் செய்துள்ளது. என் மனைவி வசிக்கும் உற்றெச்ட் நகரில் நகரின் ஓரத்தில், மிகப்பெரிய மடு உண்டு. அம்மடு சாதியில்/மதத்தில் குறைந்தோராகக் கருதப்பட்ட மக்களை, காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று சாதியில் பெரியோர் சேர்ந்து அரசுக்குக் கூறி அம்மடுவை செயற்கையாக உருவாக்கினார்கள், இது நடந்தது இருநூறு வருடத்துக்கு முன்னர்.
சாதியை அறுத்தப்பின்னரும் அச்சமூகமும் வளரத்தான் செய்துள்ளது, இன்னும் பண்ணைவீடுகளில் இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் விஞ்ஞானிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
//அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும்.//
குழு என்றாலே அடக்குமுறை உண்டு. மென்மையானதா அல்லது கடுமையானதா என்பது அக்குழுவில் வாழும் மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது. பதின்பருவப்பிள்ளைகள் எம்மாதிரியானக் குடும்பத்தில் இருந்தாலும், புரட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. அதற்காக, நாம் பிள்ளைகளை அடக்குவதை அடக்குமுறை எனக் கருதுவோமா? ஆனால் அவர்கள் பார்வையில் பெற்றோர் அடக்குமுறையாளர்களே. ஆக என்ன நோக்கத்தில் நாம் செய்கிறோம் என்பதை சிந்தித்து செயல்படவேண்டும். மனிதர்கள் சமூகவிலங்குகள் என்பது இயற்கைவிதி, அது மாறினால் மட்டுமேக் குடும்பம் வேண்டாம் என்று கூறுவது மாறும்.
//திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. //
அதை நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தெளிவான சிந்தனைகொண்டிருக்கிறவர்கள் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை, சமூகவொழுங்கில் உண்டானது. அதற்காக சமூகவொழுங்கு மட்டுமே ஒருவரை வளர்த்தெடுததுவிடமுடியாது.
கிரேக்க தத்துவமேதைகளாகட்டும், தமிழ் சமற்கிருத தத்துவமேதைகளாகட்டும். அவர்கள் கொல்லப்பட்டதும் வணங்கப்பட்டதும், சிந்தியுங்க்ள் என்று சொன்னதற்காகத் தான். விதண்டாவாதத்தில் இது முன்னேற்றம் பகுத்தறிவு என்று யாராவது கூறுகிறார்கள் என்றால், அவர்களை அவர்களின் முடிவுகளை அவர்கள் வாழ்க்கையேப் பார்த்துக்கொள்ளும். அதையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது, கருத்துக்களை முன்வைக்கலாம், அதை அப்படியே பின்பற்றுக என்று வலியுறுத்துவது எதேச்சதிகாரம், சிறுபிள்ளைகளை அடித்துத் திருத்துவது, இக்காலத்தில் தவறாக ஆனது கூட இம்மாதிரிதான். வழிப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள், அது மட்டுமே நம் வேலை, மிச்சர் அவரவர் கைகளில் தான்.
//இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு.//
உங்களின் கேள்வியின் அடிப்படையேத் தவறானது. இருப்பதை இருப்பதுபோல் படித்துச்சொல்வது தான் சமூக அறிவியலும், அதுசார்ந்த ஆட்டக்கோட்பாடும், இல்லாததைச் சொல்வது எதுவும் நிலைத்தும் நிற்காது, அறிவியலின் வேலையும் அதுவல்ல. மேலும், எல்லாவிதமானக் கோட்பாடுகளும் நிலைத்துநிற்கும் என்றுக் குறிப்பிட்டது எப்படியெனத் தெரியவில்லை. அணுக்களைப் பற்றி நம்மவர்கள், சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னிருந்தகிரேக்கர்கள் முதற்கொண்டு பலபேர் உரைத்திருக்கின்றனர். இன்றும் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு அறிவியல் சார்ந்தும் அதைப்பற்றி சோதித்துவருகிறோம். அதேநேரம் அணுக்கொள்கைகளாகக் கூறப்பட்டப் பலவும் அறிவியலால் தூக்கியெறியப்பட்டுள்ளது. அறிவியலல்லாதக் கோட்பாடுகளெல்லாம் பயன்படாவிட்டால் களையெடுக்கப்படும்..
ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையைக் கூறி நூறுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அவ்விதியை ஐன்ஸ்டைன பகன்று இருபது வருடங்களிலேயே புதன் கிரகத்தின் ஒளியை வளைப்பதில் இருந்து அவர் விதிசரிதான் என்று அறியப்பட்டது. ஆனால் அந்த ஒரேயொரு வாதத்தை மட்டும் அவரின் விதி சரியென அறிவியல் ஒத்துக்கொள்ளாது. நூறாண்டுகள் கடந்தப்பின்னும், இன்றுவரைக்கும் வெவ்வேறு சோதனைகளும் அதன்மேல் கட்டப்பட்ட வெவ்வேறுக்கோட்பாடுகளும் அவ்விதிகளை சந்து சந்தாக அறுத்து ஆய்வுசெய்கிறது.
நல்லவன் கெட்டவன் என கோட்பாடு சொல்வதாகக் குறிப்பிடவில்லை, நல்லவரும் கெட்டவருமாக முரணோடு சேர்ந்திருப்பதில் தான் சமூகத்தின் ஓட்டம் இருக்கும் என்பதாய் இருப்பதை இருப்பதாகவேக்கூறுகிறது. இதுதான் நாம் அனைவரும் அறிந்ததேயென்றுக் கூறினாலும், அறிவியலின் வீச்சுஅதோடு நிற்பதிலில்லை, மாறாக மாற்றத்தில் எவ்வளவு வேகம், எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கும். இதற்கு எடுத்துக்காட்டு உலகப்போர்கள். இரண்டே இரண்டு உலகப்போர் உலகத்தின் வளர்ச்சியை திடீரென மாற்றியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு உலகப்போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடும் அளவுக்கு மாற்றிவிட்டது.
//இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//
இப்படி ஒருக்கருத்தைக்கூறி மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள். இதற்கானப் பதில் முந்தைய கருத்திலிருந்தும் தங்களுக்குப் புரியும் என்றாலும், ஆட்டக்கோட்பாடோ/அறிவியலோ எப்படி இயங்குகிறது என்று கூறுவதற்கு உங்கள் கேள்வியை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறேன்.
எதையாவது எகனைமுகனையாகத் தங்கள் வீட்டில் பேசிவிட்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நம்வீட்டினரிடம் கூட கூறிவிடமுடியாதுதானே? அப்படியிருக்க, அறிவியல் என்பது உங்கள் வீட்டுப்புழக்கடையில் வளரும் நாய்க்குட்டி போல் இருக்கும் த்வனியில் நீங்கள்கூறியுள்ளீர்கள். அறிவியலில் ஆய்வுசெய்யவேண்டும் என்று விரும்பும் மாணவன் கூட இம்மாதிரி உரைக்கமாட்டார். என்னப்பா, ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைபார்ப்பவர் நீங்கள், இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோமென அறிவியலைப் பற்றிப் பேசுவது?
ஒரு தியரி உருவாகும் கதையை உரைக்கும் முன்னர், முதலில் நீங்கள் கூறுவதுபோல் இமல் தியரி எனும் பெயரை நமக்கு நாமே தரவும்முடியாது பிரஸ்தாபிக்கவும் முடியாது என்பதை உணர்தல் நலம். அதன்படிநிலைகள் இவ்வாறு செல்லும்:
- உங்களின் கோட்பாட்டை உருவாக்கும் முன்னர், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து, அதைப் படிக்கும்போது ஏதோவொன்று உங்கள் மனதில் உதித்து, இதில் வேலைசெய்வோம் என்று ஏதோவொரு சின்னக் கேள்வியை எடுத்து, இதன் பின்னர், திரும்பவும் அக்கேள்வி சார்ந்த பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, அதில் நீங்கள் யோசித்ததை ஏற்கனவே செய்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவ்வாறெனில், நீங்கள் யோசிப்பது புதிதா பழையதா என்றுக் கண்டறிந்து, பழையதானால், திரும்பவும், முதலில் இருந்து துவங்குவீர்கள். இதற்கே பலவருடங்களாகலாம். பின்னர், நீங்கள் நினைத்ததை வடித்து, அதற்குரிய கணித அல்லது ஏரண/logic வடிவங்களை அமைத்த பின்னர், அதற்கான சரியான உதாரணங்களையும், சரியான வடிவங்களையும்/மாடல்கள் தரவேண்டும். இவையெல்லாம் உங்கள் திருப்திக்கு வளர்ந்தப்பின்னர், பொதுவில் உங்களுடையக் கருத்தை வைப்பீர்கள். முதலில்
- உங்களின் ஆய்வு, அறிவுசார்பாக முக்கியமானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், முதலில் நீங்கள் வேலைபார்க்கும் பல்கலைக்கழக அல்லது ஆய்வுக்குழுவில் உரையாற்றுவீர்கள். ஒரு மனிதன் எல்லாவற்றையும் எல்லாநேரத்திலும் சரியாக செய்துவிடமுடியாது, ஆக சுற்றி வேலைபார்ப்பவர்கள், நீ சரியாகத்தான் கூறியுள்ளாய் என்றோ அல்லது, அவர்களுடைய அனுபவத்திலும் அறிவிலும் உதித்ததை சேர்க்க சொல்வார்கள். சரியானதென்றால் சேர்ப்பீர்கள், இல்லையென்றால் விடுவீர்கள். ஒரு வேளை யாருமே ஒத்துக்கொள்ளவில்லையெனினும், அடுத்தக்கட்டமாக.
- நீங்கள் ஆய்வுசெய்யுந்துறையில் ஆய்விலுள்ளோர் அதிகம் வாசிக்கும் ஒரு நல்ல பனுவலுக்கு/journal அனுப்பிவிடுவீர்கள், அவர்கள் அதைத் தகுந்த அந்தந்த புலத்தில் வேலைசெய்யும் பெரிய ஆய்வாளர்கட்கு அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் கருத்தை ஒருவரி விடாமல் படித்து, நான் இப்பொழுது எழுதுகிறேனே, அது போல், ஒவ்வொரு வரிக்கும் கேள்விகளும் கருத்துகளுமாய் கொட்டித்தீர்ப்பார்கள்.
- அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் ஒருவரி விடாமல் பதில் அனுப்பி, திரும்பவும் அவர்கள் நீங்கள் பதிலளித்ததிலிருந்து திரும்ப கேள்விகள் பல கேட்டு என 3, 4 முறையாவது தொடர்பாடல் நடந்தப்பின்னர், நீங்கள் அளித்த மொத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டால், அப்பனுவலில் பதிப்பார்கள்.
- ஒரு வேளை, உங்களுடையப் பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனில், மொத்தமாக உங்கள் ஆய்வை ஒதுக்கிவிடுவார்கள், அப்படி பதிக்கமுடியாது என்றுக்கூறிவிட்டால், அடுத்த பனுவலுக்கு அனுப்பவேண்டியது, அங்குமில்லையென்றால், அடுத்தது, இப்படிப் போகும்.
- ஒரு வேளை, நீங்கள் எழுதியது அறிவுசார்ந்து இருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர், உங்களின் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவர், இது பல வருடங்களுக்கு நடந்தால் மட்டுமே, இமல் தியரி என்று பெயர் வரும், அதையும் மற்றோர்தான் குறிப்பிடுவர்.
விஞ்ஞானிகள் சிம்மங்கள் போன்றவர்கள், அவர்களிடம் போய் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனறெல்லாம் பேசமுடியாது. அக்குவேறு ஆணிவேராக நாம் உரைத்தவற்றை கீறிப்பார்த்து அதனுள் உண்மை இருக்கிறதா எனப் பார்க்கும் அதேநேரம், அவர்களுக்கு ஒன்றைத் தெரியவில்லையென்றால், தெரியவில்லையென்றும் கூறிக்கடந்துவிடுவர். அதே விஞ்ஞானிகளில் பலர், தங்களின் பெயரில் வெளியானக் கோட்பாட்டைக் குறிப்பிடும்போது, தன் பெயரை தவிர்த்து சொல்லும் பணிவுடனும் இருப்பர். இருக்கட்டும்!
- ஒரு வேளை எங்குமேப் பதிக்கவில்லையெனில், நம் ஆய்வை, நம் டைரியில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டியது தான். அத்தனைவருடம் நாம் செய்த ஆராய்ச்சியும் வீண் என்று அர்த்தம்.
இத்தனைபேர் குறிப்பிட்டும் நம் ஆய்வுப்புலமையை நாம் சந்தேகிக்கவில்லையெனில்… ஒரு உதாரணம், நானிருக்கும் கட்டிடத்துக்கு பக்கத்துக்கட்டிடத்தில் தான் நோபல் விஞ்ஞானி பேரா. எரார்ட் டூப்ட் /Gerard t’Hooft இருக்கிறார். அவருக்கு, பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததாகவோ ஐன்ஸ்டைன் போன்ற பெரிய விஞ்ஞானிகள் தவறிழைத்தார்கள் என்றோ, இயற்கை எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டேனென்றோ, கான்ஸ்பிரசி தியரியென்றோ குறிப்பிடும் ஆயிரம் கடிதங்கள் அனுதினமும் வரும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதுபோல் ஆகிவிடும்.
- ஒரு வேளை, பெரியதாகப் பாராட்டப்பட்ட ஒரு கோட்பாடு, செயல்முறையில் தவறு என்றுத்தெரிந்தால், அதன் மேல் கட்டப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் தரம் என்ன, அதாவது சரியாக இருக்கிறதா என்று அப்பொழுதும் ஆய்வுகள் நடக்கும். அறிவியலும் அறிவியல்சார் ஆய்வுகளும் பெருமுயற்சியாகும்.
ஆக விட்டேற்றியாக எதையும் சொல்லி செல்வது என்பது, மட்டமான sci-fi படங்கள் போன்றவை. தற்பொழுதெல்லாம், அறிவியற்கதைகள் கொண்டப் படங்களையே/ இண்டர்ச்டெல்லார், நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியரை/கிப் தார்ன்– வைத்து எடுக்கிறார்கள், அதில் செய்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாகவும் வந்திருக்கிறது.
//நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//
அது நாம் மட்டும் வசிக்கும்வீட்டில் நடக்கலாம், நம்மோடு இன்னொருவர் இருந்தால் கூட நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் வளைக்கவேண்டி வரும். நம் பேச்சை நம் வீட்டு நாய் கூட எல்லாநேரமும் கேட்காது என்பதுதானே உண்மை. அதை உணரும்பட்சத்தில் நாம் சற்று நிதானிக்கலாம். பொதுவுண்மையாக ஏதோவொன்றைக் குறிப்பிட்டால் வரும் பிரச்சினையும் அதன் பின்னாலான விசயங்களும் நம்மை சார்ந்தது. சமூகம் வேறு அறிவியல் வேறல்ல, அறிவியல் வேகமாக செய்வதை, சமூகம் மெதுவாக செய்யலாம் அவ்வளவு தான் வித்தியாசம். ஆக நாம் குறிப்பிடுவது சரியானதெனில், சமூகமும் அங்கீகரிக்கவேச் செய்யும்.
// இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.//
ஒன்றேயொன்று தான், தக்கனப் பிழைக்கும் அவ்வளவே! இன்று நாம் தூக்கிவைத்துக்கொண்டாடும் சாதியை, 1400 வருடம் முன் நாம் செய்யவில்லையென்கிறார்கள், ஆங்கிலேயர் வரவுக்குப்பின்னும் மற்ற இனங்களின் வரவுக்குப்பின்னும் நடந்ததாகவும் கூறுகிறார்கள். ஆக நம் சமூகத்தில் இல்லாதது பெரிதாக வளர்ந்திருக்கிறது, ஆனால், அது தான் நம்மிடம் இல்லாதிருந்ததே, அப்படியானால் இல்லாதநிலைக்குப் போவோம் என்றும் கூட நாம் யோசிக்கலாம்.
நானும் நீங்களும் பேசுவதால் சிறுசிறுமாற்றங்கள் நிகழலாம், அதெல்லாம் தான் உண்மையாக நடந்துவிடும் என்றெல்லாம் கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம்.
மீண்டும் கூறுகிறேன் கோட்பாடுகள் வானத்திலிருந்து குதிப்பவை என்று நீங்கள் நினைத்திருந்தால், தத்துவார்த்தமாக நீங்கள் புரிந்திருப்பதில் மாறுபாடு தேவை.. இருப்பதைத்தான் தியரைஸ் பண்ணமுடியும், இல்லாததை அல்ல. நீங்கள் எப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் தியரி கூறமுடியாது, ஆனால், இப்படியெல்லாம் இருக்கிறீர்கள் என பிரதிபலிக்கும் கண்ணாடியே சமூக அறிவியற்கோட்பாடுகள். நம் கண்ணாடியின் அளவீட்டை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பம் அவ்வளவு தான், அது கண்ணாடியைப் பாதிக்காது.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய நம்பிக்கையைத்தானே தவிர்த்து, சமூகமாற்றத்திற்கான தத்துவமோ, அல்லது அறிவியலின் கட்டுமானம் சார்ந்த கேள்வியோ அல்ல. ஆனால், நான் பதிலளித்திருப்பது எல்லாநிலைக்கும் பொதுவான ஒன்று. இதை எந்த அடிப்படையில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். அதாவது கேள்விகள் கேளுங்கள், அதன் அடியாழம் வரை. இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்படித்தான் இருக்கிறோமாவெனவும் சோதிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.