குழந்தையுடனொருக் கற்றல்

எங்கள் வீட்டிலேயே மூன்றுக் குழந்தைகள் எனக்கடுத்து வளரக் கண்டிருக்கிறேன், அதுவும் நல்ல வயதுவித்தியாசங்களுடன். தவிர, சுற்றி எப்பொழுதும் குழந்தைகள் இருக்கும் மாதிரியானதொரு சூழல். பக்கத்திலேயே உறவினர்கள். பெரும்பாலும் குழந்தைகள் வளரும் விதம் ஒரேமாதிரி தான் இருக்கும். செய்யும் சேட்டைகள், கற்கும் விதம், பெரியவர்கள்போல் அவர்களாக உருவகப்படுத்தும் விதம் இதுமாதிரி பல்வேறு விசயங்கள்..

இதில் என் அம்மா எங்களின் கடைத்தம்பி சரவணன் செய்த சேட்டைகளை அவர்களின் நாட்குறிப்பில் தினம் எழுதிவைக்கத் தொடங்கினார்கள், பின்னர், அது நாங்கள் நித்தம் செய்யும் சேட்டைகளையும் சேர்த்து எழுதுவதாகவும் அமைந்தது. எதுவரை எழுதினார் எனத் தெரியவில்லை. அதேபோல், என் இரண்டேமுக்கால் வயது மகனார் சிவதண்டீசுவரர் பற்றி அவ்வாறு எழுதலாம் எனத்தோன்றும், ஏனோ செய்வதில்லை.

குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்…

சற்றுநேரம் முன், ஒரு இழைக்கோட்பாட்டு (string theory) ஆய்வுக்கூட்ட உரையில், K3-பரப்பையும் (surface) R^4 இரீமன் பரப்பின் (R4 Riemann Surface) துண்டையும் இடவியலைக் (Topology) கொண்டு இணைத்து ஒரு படத்தை ஒரு ஆய்வாளர் விவரித்துக் கொண்டிருந்தார். என் இரண்டே முக்கால் வயது சிவதண்டீசர் அதைப் பார்த்துவிட்டு “என்னப்பா இது நுங்கா?” எனக் கேட்டதும் அட ஆமா எனத் தோன்றிற்று. அச்சிறு கண்களுக்கும் இடவியல் கண்ணோட்டம் அத்தனைத் தெளிவாக இருப்பதைக் காணமுடிகிறது! போனவாரத்தில் தான் நுங்கு என்பதை முதன்முறைப் பார்த்தான்!  

இழைக்கோட்பாட்டு ஆய்வுரைக்கு சற்றுமுன், என் மனைவி வேலைசெய்யும் ஆய்வுக் குழுவுக்கு யாரையோ நேர்கண்டு பேட்டிக் கண்டிருக்க, நாங்கள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம், இவன் திடீர் என்று “எனக்கு கத்தி வேண்டும், தண்ணீர்ப்பழம் நறுக்க…” என்று ஒரே ஆர்ப்பாட்டம்– மதியம் அவன் அழுகையை திசைதிருப்ப அப்படிச்செய்தனர் போல. நான் சிறுபிள்ளை கத்தியை எடுக்கக்கூடாது என.. உடனே அம்மாவின் துணைநாடி அம்மாவெனக் கத்திகொண்டே மனைவியின் அலுவல் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தான். அங்கே சூம் மீட்டிங்கில் அவள் இருப்பதைப் பார்த்துவிட்டு, கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு, தலையில் கையைவைத்து “ஐய்யோ.. ” என சத்தம்போட்டு அழ.. எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

கொழுந்தியாளின் பிள்ளைகள் வந்திருக்கின்றனர், அவர்களில் சிறியவன் விசுவேசன் “பெரியப்பா.. சிவதண்டீசு, சேட்டைபண்ணுகிறான்” என்றான், “சேட்டைப் பண்ணாதே” என்றும் கூறினான், சிவதண்டீசர் ஏதோ யோசித்துக் கொண்டே, அவன் செய்ததை அவனைப் பார்த்துக்கொண்டே செய்துகொண்டிருந்தான். எனக்கு சிவதண்டீசருக்கு விசுவேசன் சொன்னது புரியவில்லையோ என சந்தேகம். பெரும்பாலும் நேராகச் சொன்னால் உடனே சரிசெய்துவிடுவான். அதனால், “நீ சேட்டையென்று எதைச் சொல்கிறாயோ, அதை, அவனிடம் சொல்லி அதைச் செய்யாதே என சொல்” என்றேன். காலை வைத்து இடித்துக் கொண்டே ஏதோ விளையாடி இருப்பான் போல, அது விளையாட்டு மும்முரத்தில், அவனுக்கேத் தெரியவில்லை, விசுவேசன் “காலை வைத்து இடிக்காதே” என்றதும், சிவதண்டீசர் தள்ளிப்படுத்துவிட்டான். போதாதென்று, அண்ணனுக்கு ஒரு முத்தம் வேறு.. அண்ணனை துன்புறுத்திவிட்டானாம்..

குழந்தைகளின் செயல்பாடும் எண்ணமும் நேர்கோட்டில் எளிமையாக இருப்பதால், அவன் கற்றுக்கொள்வது வேகமாகவும் தெளிவாகவும் இருக்கிறது போலும். அதைவிட, நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்ற பேரில், மொத்தமாக உழட்டுவதை இன்னும் தெளிவாகக் காணவியலுகிறது.

கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

எதிர்வினை: கற்றலும் சமூகமும் -7 சமூக தாக்கம்

என்னுடைய முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய ஒருவர் இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும். அடுத்து ஒரு பெண் என்பவளோ அல்லது ஓர் ஆண் என்பவனோ திருமணம் செய்து தான் வாழ வேண்டியது கட்டாயமில்லை. திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு. இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி. இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.

// குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.//

எப்படி??

//ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.//

ஆம், அப்படித்தான்.

// வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். //

தவறு. சமூகபிரசித்தி பெற்ற வெளிநாட்டு சினிமாக்காரர்களின் விளையாட்டுவீர்ர்களின் குடும்பங்களூம் அவர்களின் வாழக்கைமுறைமை மட்டும் அந்தந்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் காரணியாகா , எல்லா நாடுகளிலும் தாத்தாப்பாட்டியுடன் வாழும் குடும்பங்கள், குடும்பப் பிணைப்பு, பண்பாடு என்று ஏராளம் உண்டு, வளர்ச்சி சார்ந்த நகர்ப்புற வாழ்க்கை, நம்மூர் போலவே, குடும்பங்களைப் பிரிக்கிறது, அவ்வளவு தான். எல்லாநாடுகளிலும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை, பிள்ளைபெற்றுக்கொள்ளவில்லை என்றுகேட்கும் அதே கலாச்சாரம் இங்கேயும் உண்டு.

//இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். //

சாதிபோன்ற அமைப்பைத் தாண்டிவந்து பொருளாதார வளர்ச்சிக்காக வேலைசெய்து, அதுவே பின்பு சமூகவளர்ச்சியாக மேலைநாடுகள் மாற்றத்தான் செய்துள்ளது. என் மனைவி வசிக்கும் உற்றெச்ட் நகரில் நகரின் ஓரத்தில், மிகப்பெரிய மடு உண்டு. அம்மடு சாதியில்/மதத்தில் குறைந்தோராகக் கருதப்பட்ட மக்களை, காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று சாதியில் பெரியோர் சேர்ந்து அரசுக்குக் கூறி அம்மடுவை செயற்கையாக உருவாக்கினார்கள், இது நடந்தது இருநூறு வருடத்துக்கு முன்னர்.

சாதியை அறுத்தப்பின்னரும் அச்சமூகமும் வளரத்தான் செய்துள்ளது, இன்னும் பண்ணைவீடுகளில் இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் விஞ்ஞானிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

//அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும்.//

குழு என்றாலே அடக்குமுறை உண்டு. மென்மையானதா அல்லது கடுமையானதா என்பது அக்குழுவில் வாழும் மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது. பதின்பருவப்பிள்ளைகள் எம்மாதிரியானக் குடும்பத்தில் இருந்தாலும், புரட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. அதற்காக, நாம் பிள்ளைகளை அடக்குவதை அடக்குமுறை எனக் கருதுவோமா? ஆனால் அவர்கள் பார்வையில் பெற்றோர் அடக்குமுறையாளர்களே. ஆக என்ன நோக்கத்தில் நாம் செய்கிறோம் என்பதை சிந்தித்து செயல்படவேண்டும்.   மனிதர்கள் சமூகவிலங்குகள் என்பது இயற்கைவிதி, அது மாறினால் மட்டுமேக் குடும்பம் வேண்டாம் என்று கூறுவது மாறும்.

//திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. //

அதை நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தெளிவான சிந்தனைகொண்டிருக்கிறவர்கள் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை, சமூகவொழுங்கில் உண்டானது. அதற்காக சமூகவொழுங்கு மட்டுமே ஒருவரை வளர்த்தெடுததுவிடமுடியாது.
கிரேக்க தத்துவமேதைகளாகட்டும், தமிழ் சமற்கிருத தத்துவமேதைகளாகட்டும். அவர்கள் கொல்லப்பட்டதும் வணங்கப்பட்டதும், சிந்தியுங்க்ள் என்று சொன்னதற்காகத் தான். விதண்டாவாதத்தில் இது முன்னேற்றம் பகுத்தறிவு என்று யாராவது கூறுகிறார்கள் என்றால், அவர்களை அவர்களின் முடிவுகளை அவர்கள் வாழ்க்கையேப் பார்த்துக்கொள்ளும். அதையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது, கருத்துக்களை முன்வைக்கலாம், அதை அப்படியே பின்பற்றுக என்று வலியுறுத்துவது எதேச்சதிகாரம், சிறுபிள்ளைகளை அடித்துத் திருத்துவது, இக்காலத்தில் தவறாக ஆனது கூட இம்மாதிரிதான்.  வழிப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள், அது மட்டுமே நம் வேலை, மிச்சர் அவரவர் கைகளில் தான்.

 

//இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு.//

உங்களின் கேள்வியின் அடிப்படையேத் தவறானது.  இருப்பதை இருப்பதுபோல் படித்துச்சொல்வது தான் சமூக அறிவியலும், அதுசார்ந்த ஆட்டக்கோட்பாடும், இல்லாததைச் சொல்வது எதுவும் நிலைத்தும் நிற்காது, அறிவியலின் வேலையும் அதுவல்ல.  மேலும், எல்லாவிதமானக் கோட்பாடுகளும் நிலைத்துநிற்கும் என்றுக் குறிப்பிட்டது எப்படியெனத் தெரியவில்லை. அணுக்களைப் பற்றி நம்மவர்கள், சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னிருந்தகிரேக்கர்கள் முதற்கொண்டு பலபேர் உரைத்திருக்கின்றனர். இன்றும் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு அறிவியல் சார்ந்தும் அதைப்பற்றி சோதித்துவருகிறோம். அதேநேரம் அணுக்கொள்கைகளாகக் கூறப்பட்டப் பலவும் அறிவியலால் தூக்கியெறியப்பட்டுள்ளது.   அறிவியலல்லாதக் கோட்பாடுகளெல்லாம் பயன்படாவிட்டால் களையெடுக்கப்படும்..

ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையைக் கூறி நூறுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அவ்விதியை ஐன்ஸ்டைன பகன்று இருபது வருடங்களிலேயே புதன் கிரகத்தின் ஒளியை வளைப்பதில் இருந்து அவர் விதிசரிதான் என்று அறியப்பட்டது. ஆனால் அந்த ஒரேயொரு வாதத்தை மட்டும்  அவரின் விதி சரியென அறிவியல் ஒத்துக்கொள்ளாது.   நூறாண்டுகள் கடந்தப்பின்னும், இன்றுவரைக்கும் வெவ்வேறு சோதனைகளும் அதன்மேல் கட்டப்பட்ட வெவ்வேறுக்கோட்பாடுகளும் அவ்விதிகளை சந்து சந்தாக அறுத்து ஆய்வுசெய்கிறது.

நல்லவன் கெட்டவன் என கோட்பாடு சொல்வதாகக் குறிப்பிடவில்லை, நல்லவரும் கெட்டவருமாக முரணோடு சேர்ந்திருப்பதில் தான் சமூகத்தின் ஓட்டம் இருக்கும் என்பதாய் இருப்பதை இருப்பதாகவேக்கூறுகிறது.   இதுதான் நாம் அனைவரும் அறிந்ததேயென்றுக் கூறினாலும்,  அறிவியலின் வீச்சுஅதோடு நிற்பதிலில்லை, மாறாக மாற்றத்தில் எவ்வளவு வேகம், எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கும். இதற்கு எடுத்துக்காட்டு உலகப்போர்கள். இரண்டே இரண்டு உலகப்போர் உலகத்தின் வளர்ச்சியை திடீரென மாற்றியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு உலகப்போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடும் அளவுக்கு மாற்றிவிட்டது.

//இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

இப்படி ஒருக்கருத்தைக்கூறி மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள். இதற்கானப் பதில் முந்தைய கருத்திலிருந்தும் தங்களுக்குப் புரியும் என்றாலும், ஆட்டக்கோட்பாடோ/அறிவியலோ எப்படி இயங்குகிறது என்று கூறுவதற்கு உங்கள் கேள்வியை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறேன்.

எதையாவது எகனைமுகனையாகத் தங்கள் வீட்டில் பேசிவிட்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நம்வீட்டினரிடம் கூட கூறிவிடமுடியாதுதானே?    அப்படியிருக்க, அறிவியல் என்பது உங்கள் வீட்டுப்புழக்கடையில் வளரும் நாய்க்குட்டி போல் இருக்கும் த்வனியில் நீங்கள்கூறியுள்ளீர்கள். அறிவியலில் ஆய்வுசெய்யவேண்டும் என்று விரும்பும் மாணவன் கூட இம்மாதிரி உரைக்கமாட்டார்.    என்னப்பா, ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைபார்ப்பவர் நீங்கள், இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோமென அறிவியலைப் பற்றிப் பேசுவது?

ஒரு தியரி உருவாகும் கதையை உரைக்கும் முன்னர், முதலில் நீங்கள் கூறுவதுபோல் இமல் தியரி எனும் பெயரை நமக்கு நாமே தரவும்முடியாது பிரஸ்தாபிக்கவும் முடியாது என்பதை உணர்தல் நலம். அதன்படிநிலைகள் இவ்வாறு செல்லும்:

  1. உங்களின் கோட்பாட்டை உருவாக்கும் முன்னர், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து, அதைப் படிக்கும்போது ஏதோவொன்று உங்கள் மனதில் உதித்து, இதில் வேலைசெய்வோம் என்று ஏதோவொரு சின்னக் கேள்வியை எடுத்து, இதன் பின்னர், திரும்பவும் அக்கேள்வி சார்ந்த பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, அதில் நீங்கள் யோசித்ததை ஏற்கனவே செய்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவ்வாறெனில், நீங்கள் யோசிப்பது புதிதா பழையதா என்றுக் கண்டறிந்து, பழையதானால், திரும்பவும், முதலில் இருந்து துவங்குவீர்கள். இதற்கே பலவருடங்களாகலாம். பின்னர், நீங்கள் நினைத்ததை வடித்து, அதற்குரிய கணித அல்லது ஏரண/logic வடிவங்களை அமைத்த பின்னர், அதற்கான சரியான உதாரணங்களையும், சரியான வடிவங்களையும்/மாடல்கள் தரவேண்டும். இவையெல்லாம் உங்கள் திருப்திக்கு வளர்ந்தப்பின்னர், பொதுவில் உங்களுடையக் கருத்தை வைப்பீர்கள்.  முதலில்
  2.  உங்களின் ஆய்வு, அறிவுசார்பாக முக்கியமானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், முதலில் நீங்கள் வேலைபார்க்கும் பல்கலைக்கழக அல்லது ஆய்வுக்குழுவில் உரையாற்றுவீர்கள்.   ஒரு மனிதன் எல்லாவற்றையும் எல்லாநேரத்திலும் சரியாக செய்துவிடமுடியாது, ஆக சுற்றி வேலைபார்ப்பவர்கள், நீ சரியாகத்தான் கூறியுள்ளாய் என்றோ அல்லது, அவர்களுடைய அனுபவத்திலும் அறிவிலும் உதித்ததை சேர்க்க சொல்வார்கள். சரியானதென்றால் சேர்ப்பீர்கள், இல்லையென்றால் விடுவீர்கள்.   ஒரு வேளை யாருமே ஒத்துக்கொள்ளவில்லையெனினும், அடுத்தக்கட்டமாக.
  3.  நீங்கள் ஆய்வுசெய்யுந்துறையில் ஆய்விலுள்ளோர் அதிகம் வாசிக்கும் ஒரு நல்ல பனுவலுக்கு/journal அனுப்பிவிடுவீர்கள், அவர்கள் அதைத் தகுந்த அந்தந்த புலத்தில் வேலைசெய்யும் பெரிய ஆய்வாளர்கட்கு அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் கருத்தை ஒருவரி விடாமல் படித்து, நான் இப்பொழுது எழுதுகிறேனே, அது போல், ஒவ்வொரு வரிக்கும் கேள்விகளும் கருத்துகளுமாய் கொட்டித்தீர்ப்பார்கள்.
  4.  அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் ஒருவரி விடாமல் பதில் அனுப்பி, திரும்பவும் அவர்கள் நீங்கள் பதிலளித்ததிலிருந்து திரும்ப கேள்விகள் பல கேட்டு என 3, 4 முறையாவது தொடர்பாடல் நடந்தப்பின்னர், நீங்கள் அளித்த மொத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டால், அப்பனுவலில் பதிப்பார்கள்.
  5.  ஒரு வேளை, உங்களுடையப் பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனில், மொத்தமாக உங்கள் ஆய்வை ஒதுக்கிவிடுவார்கள், அப்படி பதிக்கமுடியாது என்றுக்கூறிவிட்டால், அடுத்த பனுவலுக்கு அனுப்பவேண்டியது, அங்குமில்லையென்றால், அடுத்தது, இப்படிப் போகும்.
  6.  ஒரு வேளை, நீங்கள் எழுதியது அறிவுசார்ந்து இருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர், உங்களின் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவர், இது பல வருடங்களுக்கு நடந்தால் மட்டுமே, இமல் தியரி என்று பெயர் வரும், அதையும் மற்றோர்தான் குறிப்பிடுவர்.

    விஞ்ஞானிகள் சிம்மங்கள் போன்றவர்கள், அவர்களிடம் போய் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனறெல்லாம் பேசமுடியாது. அக்குவேறு ஆணிவேராக நாம் உரைத்தவற்றை கீறிப்பார்த்து அதனுள் உண்மை இருக்கிறதா எனப் பார்க்கும் அதேநேரம், அவர்களுக்கு ஒன்றைத் தெரியவில்லையென்றால், தெரியவில்லையென்றும் கூறிக்கடந்துவிடுவர்.   அதே விஞ்ஞானிகளில் பலர், தங்களின் பெயரில் வெளியானக் கோட்பாட்டைக் குறிப்பிடும்போது, தன் பெயரை தவிர்த்து சொல்லும் பணிவுடனும் இருப்பர்.  இருக்கட்டும்!

  7.  ஒரு வேளை எங்குமேப் பதிக்கவில்லையெனில், நம் ஆய்வை, நம் டைரியில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டியது தான். அத்தனைவருடம் நாம் செய்த ஆராய்ச்சியும் வீண் என்று அர்த்தம்.

    இத்தனைபேர் குறிப்பிட்டும் நம் ஆய்வுப்புலமையை நாம் சந்தேகிக்கவில்லையெனில்… ஒரு உதாரணம், நானிருக்கும் கட்டிடத்துக்கு பக்கத்துக்கட்டிடத்தில் தான் நோபல் விஞ்ஞானி பேரா. எரார்ட் டூப்ட் /Gerard t’Hooft இருக்கிறார். அவருக்கு, பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததாகவோ ஐன்ஸ்டைன் போன்ற பெரிய விஞ்ஞானிகள் தவறிழைத்தார்கள் என்றோ, இயற்கை எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டேனென்றோ, கான்ஸ்பிரசி தியரியென்றோ குறிப்பிடும் ஆயிரம் கடிதங்கள் அனுதினமும் வரும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதுபோல் ஆகிவிடும்.

  8.  ஒரு வேளை, பெரியதாகப் பாராட்டப்பட்ட ஒரு கோட்பாடு, செயல்முறையில் தவறு என்றுத்தெரிந்தால், அதன் மேல் கட்டப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் தரம் என்ன, அதாவது சரியாக இருக்கிறதா என்று அப்பொழுதும் ஆய்வுகள் நடக்கும். அறிவியலும் அறிவியல்சார் ஆய்வுகளும் பெருமுயற்சியாகும்.

ஆக விட்டேற்றியாக எதையும் சொல்லி செல்வது என்பது, மட்டமான sci-fi படங்கள் போன்றவை. தற்பொழுதெல்லாம், அறிவியற்கதைகள் கொண்டப் படங்களையே/ இண்டர்ச்டெல்லார், நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியரை/கிப் தார்ன்– வைத்து எடுக்கிறார்கள், அதில் செய்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாகவும் வந்திருக்கிறது.

//நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

அது நாம் மட்டும் வசிக்கும்வீட்டில் நடக்கலாம், நம்மோடு இன்னொருவர் இருந்தால் கூட நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் வளைக்கவேண்டி வரும். நம் பேச்சை நம் வீட்டு நாய் கூட எல்லாநேரமும் கேட்காது என்பதுதானே உண்மை. அதை உணரும்பட்சத்தில் நாம் சற்று நிதானிக்கலாம். பொதுவுண்மையாக ஏதோவொன்றைக் குறிப்பிட்டால் வரும் பிரச்சினையும் அதன் பின்னாலான விசயங்களும் நம்மை சார்ந்தது.  சமூகம் வேறு அறிவியல் வேறல்ல, அறிவியல் வேகமாக செய்வதை, சமூகம் மெதுவாக செய்யலாம் அவ்வளவு தான் வித்தியாசம். ஆக நாம் குறிப்பிடுவது சரியானதெனில், சமூகமும் அங்கீகரிக்கவேச் செய்யும்.

// இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.//

ஒன்றேயொன்று தான், தக்கனப் பிழைக்கும் அவ்வளவே!  இன்று நாம் தூக்கிவைத்துக்கொண்டாடும் சாதியை, 1400 வருடம் முன் நாம் செய்யவில்லையென்கிறார்கள், ஆங்கிலேயர் வரவுக்குப்பின்னும் மற்ற இனங்களின் வரவுக்குப்பின்னும் நடந்ததாகவும் கூறுகிறார்கள்.  ஆக நம் சமூகத்தில் இல்லாதது பெரிதாக வளர்ந்திருக்கிறது, ஆனால், அது தான் நம்மிடம் இல்லாதிருந்ததே, அப்படியானால் இல்லாதநிலைக்குப் போவோம் என்றும் கூட நாம் யோசிக்கலாம்.

நானும் நீங்களும் பேசுவதால் சிறுசிறுமாற்றங்கள் நிகழலாம், அதெல்லாம் தான் உண்மையாக நடந்துவிடும் என்றெல்லாம் கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம்.

மீண்டும் கூறுகிறேன் கோட்பாடுகள் வானத்திலிருந்து குதிப்பவை என்று நீங்கள் நினைத்திருந்தால், தத்துவார்த்தமாக நீங்கள் புரிந்திருப்பதில் மாறுபாடு தேவை.. இருப்பதைத்தான் தியரைஸ் பண்ணமுடியும், இல்லாததை அல்ல. நீங்கள் எப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் தியரி கூறமுடியாது, ஆனால், இப்படியெல்லாம் இருக்கிறீர்கள் என பிரதிபலிக்கும் கண்ணாடியே சமூக அறிவியற்கோட்பாடுகள். நம் கண்ணாடியின் அளவீட்டை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பம் அவ்வளவு தான், அது கண்ணாடியைப் பாதிக்காது.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய நம்பிக்கையைத்தானே தவிர்த்து, சமூகமாற்றத்திற்கான தத்துவமோ, அல்லது அறிவியலின் கட்டுமானம் சார்ந்த கேள்வியோ அல்ல. ஆனால், நான் பதிலளித்திருப்பது எல்லாநிலைக்கும் பொதுவான ஒன்று. இதை எந்த அடிப்படையில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். அதாவது கேள்விகள் கேளுங்கள், அதன் அடியாழம் வரை. இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்படித்தான் இருக்கிறோமாவெனவும் சோதிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.

போகிறப்போக்கில்…

மாற்றங்கள் நம்மிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்றக் கருத்து மிகவலியது. அப்படித்தான் செய்யப்படுதல் வேண்டும், நம்மைச்சுற்றி எவ்வளவு அழகாக வைக்கமுடியுமோ அதிலேயே பெரிய மாற்றங்கள்நிகழும். பள்ளியிலிருந்து ஒழுக்கப்பாடங்களையும் தீண்டாமைப் பற்றி அறிவுறுத்த ஆரம்பிப்பதும் மிகவும் முக்கியமானது தான். ஆசிரியர் பெற்றோர் எல்லோரும் வாழ்க்கைவெற்றி என விரட்டும் அதே நேரம், கொஞ்சம் வேகத்தைக் குறைப்பது போல் அமைத்தால் சிறப்புற அமையும்.
மிகுந்த சாதித்தகராறுகள் நடைபெறும் இடத்தில் இருந்து வந்தவன், அதுவும் உட்சாதிகளுக்குள்ளேயே நடக்கும் சண்டைகள் நிறைய. ஆயினும் இப்பொழுது உள்ளது போல் சின்னப்பிள்ளைகளே சாதிகள் பேசும் தன்மை அக்காலத்தில் இல்லை. முதலியார் பெரியப்பாவும் கவுண்டர் அம்மாச்சியும் அரசின்பட்டியல் சாதிகளாகக் கருதப்படும் வீட்டைச்சார்ந்தவர்கள், என் அப்பாவினை சித்தப்பா என்று அழைப்பதுமாக இருந்தது,
உடனே அதற்காக பாலாறும் தேனாறும் ஓடியதாய் கூறவில்லை, குறைந்தபட்சம் ஒரு சிறுவனாக, நான் அவர்களை உறவினர்கள் என்றே நினைக்கும் அளவுக்கே ஒரு அன்னியோன்யம் இருந்தது. திடீரென பற்பல சாதிக்கட்சிகள் முளைக்க நிலைமை, ஒரே நாளில் அந்தலை சிந்தலையானது, சிறுசிறு சண்டைகளும் முரண்பாடுகளும் திடீரெனப் பெரிதாகத் தெரிய ஆரம்பித்துவிட்டன.
என் தந்தையார் “அவனெல்லாம் முன்னாடி நல்லாப்பேசுவாண்டா, இப்பெல்லாம் பார்த்தா அப்படியேப் பார்க்காதமாதிரி ஒதுங்கிப் போயிர்றான்” என்பார்கள். அதில் வருத்தங்களும் வேறுசில பதற்ற உணர்வுகளும் கூடத் தெரிகிறது. நான் எல்லாம் கூட என் சத்துக்கு வம்புசண்டைக்குப் போயிருக்கிறேன், ஆனால் அவர்கள் மிக அமைதியானவர்கள்.
மென்மையான கம்யூனிச சித்தாந்தம் பரவியிருந்த எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களே சாதிக்குழுக்களில் அங்கம்வகிக்கும் அளவுக்கு மாறிப்போனது. இப்பொழுது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி ஓரளவு தெளிந்தபின்னரே, சாதிய தளைப்பில் இருந்து வெளியேறும் நிலையும் வந்துவிட்டது.
பெற்றது வளர்த்தது என பல பேர் பலமாதிரி கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், உண்மையான முனனேற்றம் பயமில்லாது இருக்கவேண்டும் என்பதில் இருந்து யோசிக்கத் துவங்க வேண்டும். பிரிவுவந்துவிட்டாலே பயவுணர்வு மிகச்சாதாரணம் தானே.
 

போகிறப்போக்கில்…

போனவருடம் நான் ஊருக்குப் போயிருந்தபோது, ஏதோவொரு உரையாடலில், என் தங்கை விக்னேஷ் அரசின் ஏதோவொருக் கொள்கையைக் குறிப்பிட்டுப் பேசும்பொழுது “நம்ம மாப்பிள்ள அப்படித்தான் செய்யப்போறாரு” என்றுக்கூற, “யார்ரா அது” எனக்கேட்டதற்கு, எல்லாம் “நம்ம மோடி மாப்பிளதேன்” என்றாள்!
 
மாநில சட்டப்பேரவைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நீரிலிறங்கும் விமானத்தில் வந்திறங்கிய மோடி மாப்பிள்ளை “இவை அனைத்துமே 125 கோடி இந்திய மக்களுக்காகதான்” என்று குறிப்பிட்டுள்ளார்”
 
அதற்கு நான் “125 கோடியில் குமரிக் கோடியும் உண்டு தானே. அங்கும் இது மாதிரி ஒரு சேவையைத்தான் தேடுகிறார்கள்” என என் திராணிக்கு ஒரு கருத்துட்டிருந்தேன்!
 
மோடி ஆதரவர் ஒருவர், “இந்தாக் கண்டபயலும் சொல்லுவான்னு சொன்னேன், இந்தா நீ சொல்லிட்டல்ல” எனும் தொனியில், எங்கே எத்திட்டம் கொண்டாந்தாலும் ஊரைக்கூட்டி எதிர்த்தால் என்னசெய்வதென்றுக் கூறி, கூடங்குளத்தை தடுக்கிறாய்ங்க என்றுக் குறிப்பிட்டிருந்தார். எதை எதோடு ஒப்பிடுவது?
 
நான் வசிக்கும் கிராமத்திலுள்ள ஆய்வுக்கூடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அணுவாய்வுக்கூடம் இயங்கிக்கொண்டு இருந்தது, பல வருடங்களுக்கு முன்னரே அது முடிவுக்கு வந்தாலும், இன்னும், அதன் கழிவுகள் அகற்றப்படாதநிலையில் (நான் வசிக்கும் மாநிலச்சட்டத்தின் பிரகாரம் அணுக்கழிவை தொடர்வண்டியில் எடுத்துச்செல்லமுடியாது) அந்நிறுவனம் பாதுகாப்புக்காக செலவழிக்கும் தொகை, கொஞ்சம் நஞ்சமல்ல.
 
அணுவுலைகள் இயங்கும் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களுக்கும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அந்த கிராம ஆட்சிஅலுவலகம் எல்லோருக்கும் ஆபத்துக்காலத்தில் சாப்பிடவென மாத்திரைகள், என்னென்ன செய்யவேண்டும் என்றப் பயிற்சிகளையும் தந்திருக்கும். உண்மையில், கூடங்குளம் சுற்றியுள்ளப்பகுதிகளில் இம்மாதிரி ட்ரில்கள் நடக்கவேயில்லையென்றேக்குறிப்பிடுகிறார்கள்.
 
சர்வதேசத்தரம் என்று நாம் ஒப்புமைப்படுத்தும் அதே சர்வதேச நாட்டில், அணுமின்னிலையம் தூரத்தில் இருக்கும் போதே, ஆங்காங்கே கதிரியக்கக்கசிவு இருக்கலாமென எச்சரிக்கைப்பதாகைகள் உள்ளன. சர்வதேசத்தரம் என்று நாம் சொல்லிக்கொண்டே, ஆய்வுநிறுவனத்துக்குள்ளேயே, அணுக்கசிவு என்பதேக் கிடையாது என்றுக்கூறித்திரிகிறோம்.
நிறுவனத்தைச்சுற்றிலும் காவலைமட்டும் அதிகப்படுத்துகிறோம், இது என்ன கதிரியக்கவீச்சா, இல்லைத்திருடனா, பார்த்துப் பயந்து வெளியேவராமல் இருக்க. போதாதற்கு யாராவது எதாவது பேசினால் குறிப்பிட்ட நபர் காணாமல் போவதும், பணியாளர்கள் இறப்பு பற்றிய தெளிவில்லா நிலைகளும் இருக்கின்றன. (கல்பாக்கம் மருத்துவர் ஒருவர், சமீபத்தில் ஒரே நாளில் உடல்நலங்குன்றி இறந்துபோன பொறியாளர் ஒருவர்).
 
அதிகம் வேண்டாம், ஆதார் இயந்திரம், அதன் அட்டை, ஏ டி எம் இயந்திரம், என எந்த இயந்திரத்தை நாம் உளைச்சல் இல்லாமல் பயன்படுத்தமுடிகிறது, நம் நாட்டில், அடியிலிருந்து மேல்மட்டம் வரை எந்தவொருப் பிரச்சினையையும் சர்வசாதாரணமாக எடுக்கப்பழகிவிட்டோம். சரியானத் தீர்வுகள் வேண்டுமேத் தவிர்த்து, மின்னிலையத்துக்கும் அரசுக்கும் ஹவிர்பாகமாக ஊரையோ மாநிலத்தையோத் தரக்கூடாது, நாம் அரசர்கள் அரசாளும் யுகத்தில் இல்லை.
 
இப்பொழுதெல்லாம், மாப்பிள்ளையோ பெண்களோ எலியாப்டர்/helicopter-ல் கல்யாணத்திற்கு/விசேசங்களுக்கு வந்திறங்கவேண்டுமென ஏதோவொரு டிவி நிகழ்ச்சியில் பெண்கள் கூறினார்களென கொஞ்சநாள் முன்னர் படித்த ஞாபகம்! இச்செய்தியைப் பார்த்ததும் என் தங்கச்சியின் மோடி மாப்பிள்ளை கமெண்ட் சடுதியில் நினைவுக்கு வந்துவிட்டது.

கற்றலும் சமூகமும் – மூத்தோர்மொழி முதுநெல்லி! :-P

ஏன் புதிதாகக் கண்டுபிடிப்பனவற்றைப் பார்த்தவுடன், அன்றைக்கே முன்னோர் இவற்றையெல்லாம் அறிந்திருந்தனர் என்றுக்கூறும் போக்கு அதிகமாகவுள்ளது, மேலும் ஏன் பழமைவாதம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றக் கேள்விக்கும்…

இதில் ஒரு சின்ன பிரச்சினை ஒளிந்துள்ளது. உண்மையென்பது எப்பொழுதும் உள்ளது. ஒவ்வொரு பரிணாமப்படிநிலையும், பின்னர் தலைமுறையும் அவரவர்க்கு எட்டிய விதத்தில், அவர்கள் அனுபவம் அறிவைக்கொண்டு உண்மையையறியவும் மற்றோருக்கு உரைக்கவும் செய்கிறார்கள். அது வேதம், உபநிடதம், பௌத்த சுத்தாக்கள் போன்ற நமக்குத் தெரிந்த அல்லது மறைந்த நூல்களின் மூலம் அவ்வப்பொழுது சொல்லிவைக்கப்பட்டது.

இவையனைத்தும் தனிமனிதரின் சிந்தித்தலின் மூலம் உணர்ந்தது, ஆனால், ஒருவர் உணர்வதை மற்றொருவருக்குக் கடத்துவதில் ஏகப்பட்டப்பிரச்சினைகள். அதே நேரம், அதற்குப் பொதுவான ஒரு வடிவம் இருப்பின் சரியாக வரலாம் என்பதன் விளைவே, எழுதப்பட்ட வேதங்களும் சுவடிகளும், அதிலும் உணர்தலில் அறிந்துகொள்ளும் பார்வையில் பல இடர்கள், உருவாகின்றன. இதற்கிடையில் நாம் அறிவின் வளர்ச்சியால் நவீன அறிவியல் உண்டுபண்ணுகிறோம். ஆனால், நாம் அதை வேறொருபார்வையில், பார்ப்பவரின் அறிவு, காணும் உண்மையைப் பாதிக்காவண்ணம், மூன்றாம்நிலை கண்காணிகளைப் பயன்படுத்தும் நிலைக்கு செல்கிறோம், அவை உணர்விகள்/sensors-ஆக அமைகின்றன. இதில் பார்க்கும் முறைமைதான் வேறு, மனிதகுலம் அதன் ஆர்வத்தின் விளைவாலேயே பரிணமித்திருக்கவேண்டும்.

ஏன், நேற்றுநாம் கண்ட சீனோ விளைவு கூட சீனோவின் தோற்றமுரணிலிருந்து வந்தவை தாம். அதற்காக அங்கேயே நின்றிருந்தால், புதிதாக வந்திருக்காது, அதே நேரம் ஏற்கனவே இருந்ததை முன்னோர்களின் யோசிக்குந்திறனையும் கற்றறிந்தனவற்றையும் அறிந்திருப்பதும் நல்லவிசயந்தானே!

அறிவியல் வளர, குவாண்டம், சார்பு இயற்பியல் போன்ற நவீன அறிவியல், ஏற்கனவே நாம் பயன்படுத்தும் கண்காணிகளின் கண்களின் வழியாகக் காண்பதில் உள்ள தவறுகளை எடுத்துக்காண்பிக்க, அதை சரிசெய்ய நாமெல்லாம் உழைக்கிறோம் .. நமக்கும் வாழ்க்கை ஓடுகிறது, உண்மை அதன்போக்கில் அதுவாகவே உள்ளது!

ஆக, எதையும் வியத்தலும் இகழ்தலும் வேண்டாவென்று “எங்கள் முன்னோர்” அன்றைக்கேக் கண்டுபிடித்துவிட்டனர்!!

கற்றலும் சமூகமும் -3: கேள்விகளும் சான்றோர்குழாமும்- யார் ஆய்வாளர்?

என் வாழ்க்கைத்துணை அம்மு கூறினார், பேராசிரியர். க்ளௌஸ் சூல்டன் (Klaus Schulten) இறந்துவிட்டார் என.  எனக்கு யாரென்று உடனேத் தெரியவில்லை, அம்மு அவருடைய மூலக்கூறியக்கவியல் கோட்பாட்டை அவர்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்தியதாகக் கூறினார், பின்னர் தான் உணர்ந்தேன், குவாண்டவியற்பியலை உயிரிகளிடம்-உயிர்வேதியியற்பியல் (Biophysical chemistry), ஒளிச்சேர்க்கை (photosynthesis), மூலக்கூறியற்பியல் (molecular dyanmics and physics), மீத்திறன் கணியம் (High Performance Supercomputing)-காணும் முறைமையில், அவரும் ஒரு முன்னிலை ஆய்வாளர்.

சரி, ஒரு ஆய்வாளர் என்பார் எப்படியிருப்பார்?  ஆய்வாளருக்கு சிறுவயதில் கல்லூரியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல் இருப்பாரா?  1970கள் முடியப் பிறந்த, கிராமத்தின் சூழ்நிலையில் இருந்து வந்த என் போன்றவர்களுக்கு அடுத்து மிகப்படித்தவராகத் தெரிபவர் அவ்வூரில் உள்ள மருத்துவர்!  நன்றாகப் படித்தவர்கள் உண்மையில் எவ்வளவு தெளிவாக உள்ளார்கள்.  ஆயினும், எனக்கு இவ்விரு தொழில் பார்ப்பவர்களின் மீதும் எப்பொழுதும் கடுமையான வருத்தங்கள் இருந்ததுண்டு.

ஆசிரியப் பணியாற்றுபவர்கள் மாணவர்களைக் கேள்விகேட்கத் தூண்டுகிறார்களா?! நிசமாகவே, மாணவர்களுககு கல்வியென்றால் விவாதம் சார்ந்தது என்பதேக் காண்பிக்கப்படுவது இல்லை.

நோயாளியொருவர் ஒரு கேள்வியை மருத்துவரிடம் கேட்கும் போது அதற்கான பதில் எவ்வளவுத் தரப்படுகிறது அல்லது பதிலளிப்பதற்கு ஏற்ப கொஞ்சமாவது, மருத்துவர்கள் தயாராயிருக்கிறார்களா?

ஒரு கதை:
என் அப்பா ஒருமுறை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது,  அங்கிருந்த என் தங்கையிடம் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.  “என்ன? அவன் எந்திரித்துவிட்டானா” என ஒரு சத்தம் கேட்டது! அது அங்கு வந்த மருத்துவர்! கேட்டது என் அப்பாவை!!  அப்போது என் அப்பாவின் வயது 57, தமிழக அரசின் ஒரு பொறுப்பானப் பதவியில் அப்போது இருந்தார்கள். –பதவிக்குரிய மரியாதையென்பது நோக்கமல்ல– ஆயினும் மருத்துவர்களின் அதிகாரத்தோரணை. அங்கிருந்த மொத்தநாட்களும் இப்படித்தான் என் அப்பாவின் நான் எனும் அகங்காரத்தை உடைப்பதாகவேயிருந்திருக்கும். என்ன ஏது என்பதற்கு வழக்கம் போல் பதில் இல்லை.  எதேச்சதிகாரத்தில் வாழும் குடிமகனுக்குக் கூட ஏதோக் கொஞ்சம் மரியாதைக் கிடைக்கும் போல..

மற்றொரு கதை:
அம்முவின் அம்மா, கடந்த வருடம் தனியார் மருத்துவமனை இராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், பலக் குளறுபடிகளுக்கு மத்தியில், மருத்துவர்களை, என்ன பிரச்சினை என்று கேட்டதற்குக்கூட யாரும் பதிலளிக்கத் தயாராயில்லை.  மருத்துவர்களும் என்னப் பிரச்சினை என்பதை அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு பிரச்சினை.

ஒரே சோதனையைத் திரும்ப திரும்ப செய்துக் கட்டணத்தை வேறு ஏற்றிக் கொண்டே இருந்தார்கள்.   ஆனால் அங்கும் கேள்விக்கேட்டதற்கு சரியான பதிலில்லை. லட்சக்கணக்கில் செலவும் ஆகிவிட்டது, அப்பொழுது கூட கேட்பதற்கு உரிமையில்லையென்பதை சொல்லாமல் சொன்னார்கள்.  சரி மருத்துவர்கள் அவ்வாறெனில், வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பவர் முதற்கொண்டு கணக்கர் வரை, அவர்கள் கொடுக்கும் செலவினச்சிட்டையை வைத்துக் க்கொண்டு கேள்வியே கேட்காமல் கேட்கும் பணத்தைத் தரவேண்டும் என்கிறார்கள்!  கேட்டால், கடுமையாக இருக்கிறது அவர்களின் பதிலும் மற்ற செயல்பாடுகளும்.  யாரும் பதில்தரமாட்டார்கள் கேட்பதைத் தரவேண்டும்.  அப்படியானால் பதில்தரா மருத்துவர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு?
சரி, பதிலளிக்காத ஆசிரியர்களுக்கும் பதிலளிக்கவிரும்பா மருத்துவர்களுக்கும் என்ன பிரச்சினையாயிருக்கும்?  உனக்கு நான் சொன்னாலும் புரியாது என்பதா? அல்லது அடுத்த கேள்வி உன் வாயின்னுள்ளேயே அடக்கமாகிவிட வேண்டும் என்பதா?  இம்மனநிலை எங்கிருந்து வருகிறது?

இதில், நம்முடைய மக்களையும் குறைசொல்லாமல் இருக்கமுடியாது, எனக்கு இக்கேள்விக்கு பதில்தெரியாது என ஆசானோ, மருத்துவஞ்செய்யும் மருத்துவனோக்கூறினால், அவர்களை அடுத்து சுத்தமாக மதிப்பதில்லை.

ஆயினும், படித்தவர்கள் முற்றுமுதலாக அறிவதென்னவெனில், சாகும் தருவாயிலும் நான் ஏதும் அறிந்தேனில்லையென்பதாகத்தான் இருக்கும்.  சொல்லிக்கொடுக்கப்படும் அறிவியலும் தெரிந்த அறிவியிலும், அறிவியலின் ஒரு சிறுப்பகுதியே.

இன்னுமொரு கதை:
பகுத்தறிவை அறிவியல்தரும் எனும் போது அறிவியல் எப்படிப் போகுமோ அப்படிப் போய்த்தான் காணவேண்டும், எனக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, ஓரிடத்தில் நின்று கொண்டு, நான் பிடித்ததே சரியென்பது அறிவியலாளனின் போக்கு அல்ல, அது, ஒரு பக்கம் சார்ந்தக் கருத்தேயன்றி, உண்மையானத் தெளிவினையோ இயற்கையின் இயக்கத்தைப் பற்றிய அறிவையோத் தராது.  இன்று ஒரு விவாதத்தில், ஒரு மருத்துவரிடம் பேசும் போது இதுவே நிகழ்ந்தது,  குறிப்பிட்ட உணவுமுறை, பாடப்புத்தகம், குறிப்பிட்ட புள்ளியியல்முறை என்பதையும் தாண்டி, ஒரு போக்கு போய்க்கொண்டிருக்கிறதென்றால், அது என்னவெனக் காணவேண்டுமேயன்றி, நீ கூறுவதேத் தவறு என்பதும், எதிரில் பேசுபவரின் ஆய்வு அனுபவத்தின் அளவு எவ்வளவு என்பதையும் காணாமல் பிடித்தப்பிடியில் நிற்பதுவுமாக, “நீ பேசுவது தவறு, நான் பேசுவது மட்டுமே சரி” என்பதாக இருந்தது. அதே விவாதத்தில் வந்து கேள்விகள் கேட்ட உயிரியலாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கூட எனக்குக் கூறியப் பதிலே வந்தது.  ஒருவர் அவரை– மிகக்கடுமையாக, அனாவசியமாக — விமர்சித்திருந்தவிடத்தில் “நான் அறிவியல் பேசுகிறேன், நீ எதைப் பேசுகிறாய்” எனக்கேட்டிருந்தது மிகக்கடூரமான நகைமுரண்!!

இதில் பிரச்சினையென்னவெனில், பொதுவாகப் பேசுவோர்க்கும் விஞ்ஞானிகளுக்கும் தாங்கள் பேசும் போது தெரியும் வேறுபாட்டைக் கூட உணரவியலா அளவுக்கு இன்னொரு விஞ்ஞானம்பேசும் ஆளிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, அல்லது மற்ற எல்லோரும் மொண்ணையானவர்கள் என்ற பொதுக்கருத்தா எனவும் விளங்கவில்லை.

பகுத்தறிவு என்பதும் யாதெனவும் விளங்கவில்லை, எதையோவொன்றைப் பகுத்தறிவு எனப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  பேசிக்கொண்டேயிருப்பதால் மட்டுமே, எப்படி அது பகுத்தறிவாகப் பரிமளிக்கும் என நினைக்கிறார்கள் எனவும் விளங்கவில்லை.  அறிவியலின் சில விசயங்களைப் பேசினாலே பகுத்தறிவா?? அறிவியில் என்பது யாதொரு விசயத்தையும் அக்கக்காகக் கழற்றி, என் விருப்பம் நான் கண்டறிந்தது, பழங்கருத்து, புதுக்கருத்து, நோபல்பரிசு வாங்கியவர் கூறியது, என்பதையும் தாண்டியதாக இருந்தால் மட்டுமே அறிவியல்.

அதே போல், பொதுவெளியில் ஜிஎம் விதைகள் போன்ற விசயங்களை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதே அதன் வேலை.  தயவுசெய்து பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், சமூக மாற்றம் என்ற ஒன்று வேண்டுமெனில் அதற்காக உழையுங்கள்.  முடியவில்லையெனில், அரைகுறை அறிவியல் பேசுவதையும் பாரம்பரியம் பேசுவதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, வழக்கம் போல, ‘தென்னைமரத்தைக் கொண்டுவந்து பசுவோடு ஏன் கட்டினேன்’ எனில், சூல்டனைப் பற்றி ஆரம்பித்ததற்கு காரணம், கோட்பாட்டு இயற்பியலரான அவர், அதையும் தாண்டி உயிரியல், நேனோ உயிர்நுட்பம் சார்ந்து யோசித்ததற்கு கேள்விகளும் பாரம்பரிய அறிவியல் மற்றும் அறிவைத்தாண்டியத் தேடலுந்தான் காரணமாக இருக்கிறது. இங்கு பழங்கால அறிவியல் மாதிரி ஒன்றைப் பேசிக்கொண்டே, ஆனால், அறிவியலின் உயிர்நாடியை அடக்கிவிடும் வேலைகளைத் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.  தொழில்முறையில்லா அறிவியலாளர்கள் எனில் தங்களின் உண்மைநிலையைப்  புரிந்துகொண்டும் அறிவித்தும் அறிவியலை அணுகுவதே நலம்!

இதன் வரிசையில் முன்னால் எழுதப்பட்டவை:

  1. கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்
  2. கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்
  3. ஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்!
  4. மூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு