வானியற்பியலர் சந்திராவின் தமிழ் கையெழுத்து!

 
பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் அவர்கள் இவ்வார வல்லமையாளராக, கணித நோபலான ஏபல் பரிசை வென்ற பேராசிரியர் சீனிவாச வரதனாரைவல்லமை” பக்கத்துக்காகத் தேர்வு செய்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது வந்த விவாதத்தில் வரதன் அவர்கள் தமிழைப் போற்றுவதையும் அவர்தம் தமிழிலக்கிய ஆர்வத்தையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். விவாதத்தில் கணிதவியலர் இராமானுஜனையும் மற்ற தமிழ் அறிவியலறிஞர்களைப் பற்றியும் பேசியிருந்தனர். அப்பொழுது தான், எனக்கு சந்திரசேகர் அவர்களின் கையெழுத்தைப் பற்றியும் அவர் ஏட்டில் தமிழில் எழுதியிருந்ததாய் குறிப்பிடப்பட்டதும் நினைவு வந்தது, அதை அவர்கள் பக்கத்தில் குறிப்பிட்டதையடுத்து, அதை தனியிடுகையாக இடும்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

புகழ்பெற்ற நோபலியர் சந்திரசேகரின் விண்மீன் காலவரையறையைக் குறிக்கும் படம்! எரிந்து முடிந்த விண்மீன்களின் ஆரத்திற்கும், சூரியனின் ஆரத்திற்குமான விகிதத்திற்கும், விண்மீன்-சூரிய நிறை விகிதத்திற்கும் ஆனத் தொடர்பு. விண்மீன் இறப்பு “பிண்டம்” எனக் குறிக்கப்பட்டுள்ளது!
அந்த ஏட்டின் “கையெழுத்துப் பிரதியின்” ஒரு பக்கத்தை, இயற்பியலர் பேரா. ஜி, வெங்கடராமன், அவர்களின் “Vignettes in Physics” நூல்கள் வரிசையில் வெளிவந்த ஒரு நூலான “Chandrasekhar and His Limits” (Univ. Press)-ல் அட்டைப்படத்தில் உபயோகித்திருந்தார்!
உண்மையில், அந்தப் படம் புகழ்பெற்ற இயற்பியலரான கியார்கி கேமௌ (George Gamow) அவர்கள், சந்திரசேகரின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்ததை வைத்து, கேமௌ அவர்களாலேயேத் திரும்பவும் “வரையப்பட்டது”! (ருஷ்யர் தமிழ் வார்த்தைகளை வரைந்திருப்பதால் தான் விட்டார்த்தம் பார்க்க வித்தியாசமாக உள்ளது!) அவரின் நூலிலிருந்து எடுத்ததைத் தான் வெங்கடராமன் தனது நூலில் பயன்படுத்தியிருந்தார்.
ஆயினும், இலக்கியமாக, வரலாறாக இல்லாமல், தமிழை கணித, இயற்பியல்– சேதியியல், வெப்பவியக்கவியல் , நரம்பியல் வழியாக அணுகியவர்கள் மிகக் குறைவாக இருந்தது/இருப்பது வருத்தமானது. எனக்குத் தெரிந்தவரை, கிஃப்ட் சிரோமணி மற்றும் அவருடன் உழைத்தவர்களின் ஆய்வுகளும் எனக்குப் பிடித்தமானவை! பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் போன்றோரின் அணுகுமுறையும் கணினிமொழியியலில் வேலை செய்வோரின் ஆய்வுகளும் மொழி-அறிவியலின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிப்பதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!