பொருளற்றவாழ்க்கை / nihilism – ஒரு எளிய வெள்ளோட்டம்

பொருளில்லாத் தத்துவத்தின்/nihilism மூலம் அன்றாடவாழ்வைக் காணுங்கால் சராசரி உணர்வுநிலைத்தாண்டிய முழுமையுணர்வை எப்படிக்காணலாம் என்பதையறிய விழைந்ததால் உண்டானது இக்கட்டுரை.

1. உள்ளுணர்ந்து ஒருவர் இயங்குகிறாரோ இல்லையோ, பொதுவாக, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய உள்ளம் மகிழ்வாகவோ துன்பமாகவோ, இல்லை, எந்தவுணர்வுநிலையையும் சாராமலோக் கூட இருக்கலாம்.

2. அல்லது இறந்தும் விடலாம்

3. அவரின் இருப்பும் இறப்பும், உணர்வுப்பூர்வமாக மற்றோருக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஏதும் தேங்குவதில்லை, தங்குவதுமில்லையென்று எல்லாரும் உணர்ந்திருந்தாலும், ஒரு உந்துதலைப் பெற்றிருப்பதனாலேயே வாழ்க்கையை வாழ்கிறோம்.

4அ. ஆயினும் அவ்வகையான உந்துதல் பெரும்பாலும் அர்த்தமற்றது அல்லது தொலைநோக்குப் பார்வையில்லாது, அந்தந்த நேரத்துக்குத் தேவைக்காக செயல்படுவது.

5. இதில், பிரச்சினையென்னவெனில், இவற்றையெல்லாம் கற்றோர் கல்லாதார் எந்த நிலையில் இருந்தாலும், ஒரே மாதிரியான, படிவத்திற்குள்ளேயே சிக்குண்டிருக்கிறோம்.

6. சில படிவங்கள் கவித்துவமானவை (artisitic interpretations மெய்ஞானப் புலம்பல் போல), சில பொதுவோட்டத்தில் இருப்பவை (சொந்தபந்தங்களிடம் புலம்புவது). எப்படியிருப்பினும், திரும்பவும் முதலாம் கருத்திலிருந்தே தொடர்ந்து ஓடும்.

7. இவ்வகையில் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

8. இடாய்ச்சு/(David Deutsch, a quantum physicist) அவர்கள் கூறியதாக சேது (@Sethu Subbar)க் (https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&reply_comment_id=1834432536638687&comment_tracking=%7B%22tn%22%3A%22R%2321%22%7D) குறிப்பிட்டிருந்தது போல், மொத்த சூரியக்குடும்பமும், பேருணர்வுப் பெற்று சத்யயுகம் போல் இருந்தாலும், இதே போன்றநிலையிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

9. இப்படியெல்லாம் பொருளற்றதாக இருப்பதனாலேயே, எதன்மீதும் பற்றற்று அன்பாக இருக்க வாய்ப்பு உண்டு. இடாய்ச்சுமுறையில் பேருணர்வு கொண்டு இயங்குவதாக இருந்தாலும் அன்பையுணராத் தன்மை சமூகத்தில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

(விட்கன்சுடைன்/Ludwig Wittgenstein போல ட்ரேக்டடஸ் போல கூற்றுவகையில் எழுதத் தலைப்பட்டேன். குழப்பங்களைத் தவிர்க்க, விளக்கித் தொடர்கிறேன்.)

இதற்கெல்லாம் மொத்த அர்த்தந்தான் என்ன? ஊழ்வினை போன்றவற்றை நம்பினாலும், நம் தேவைக்கேற்ப நடப்பில் அவரவர் வசதிக்கு வாழும் முறைமையும் உள்ளது. முழுமையுணர்வையெட்ட பலவழிகள் என்பதும் ஒருவழியென்பதும் அவரவரின் வரையறைகளைப் பொருத்தது. இங்குள்ளப் பெரும்பாலான பிரச்சினைகளுக்கானக் காரணம், வழிகள் இருக்கிறதா இல்லையா என்பதும், நாம் செய்வது சரிதானா என்ற ஒப்புமைக் குழப்பத்தினாலும் தான்.

ஓர்ந்த ஓர்நிலையென்றுக் (union) கூறிக்கொண்டே, ஈர்நிலைகளையோ (நான், மற்றவர்கள்), பல்நிலைகளையோ (நான், சார்ந்தோர், சாராதார்) தேவைக்கேற்பப் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கு பல்நிலைகள் என்பது, நான் என்பதற்கும் நான்-தவிர்த்த மற்றவர்களுக்கும் இடையேயானத் தொடர்பு. செய்யவேண்டியதற்கும், செய்யவியலாதநிலைகளுக்கும் இடையேயானத் தொடர்புகளையும் குறிக்கிறேன். இவ்வளவு விவாதம் நடைபெறும்போது, நாம் நம்முடைய உணர்வுகளை உருக்கி வார்க்கக்கூடிய வார்த்தையைத்தான் தேடுகிறோமேயொழிய அந்த ஓருணர்வைப் பெறுவதில்லை.

அதுபாட்டுக்கு இயங்குமொன்றுக்கு விளக்கங்கள் தந்து அதன் வடிவத்தைப் பெறமுயல்கிறோம்.

இதில் புறத்தில் உள்ளதா, அகத்தில் உள்ளதா என்பதும், இக்குழப்பங்களினால், இன்னும் பிரச்சினைகளையுண்டாக்கும் என்பதும் என் எண்ணம். வெளியெல்லாம் இழைகளாக/strings, ஆற்றற்றுடிப்புகளாக/vibrations இருக்கும் என இயற்பியல் கூறுகிறது. அவற்றைக் காணவும் இயலவில்லை, அதேநேரம் உணரவும் (lhc experiments) இயலவில்லை, ஆனால் அது இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

இருப்பதற்குவாய்ப்பேயில்லையெனினும், நானொரு தொடர்-பருப்பொருளில்லையென்பதையும் (continuous body) இவ்வுடலத்திற்கென ஒரு அணுக்கட்டமைப்பும், அக்கட்டமைப்பில் உள்ள அணுக்களுக்கிடையே இடைவெளியுள்ளது என்பதையும், ஓரளவு இயற்பியல் விளக்கமுடியும். அப்படியானால், ஒரு சல்லடைபோல், இந்த நேர-இடப்புள்ளிகளில் இயங்கித்திரிகிறேன். அதாவது, அணுக்களுக்குள்ளும் புறமும் வெளி/space உள்ளது. ஆக, நாம் நம்மை முப்பரிமாண சல்லடையெனலாம். (நம்மில், அதிகப்பரிமாணங்கள் மற்ற அடிப்படைத்துகள்களுக்குத் தெரியலாம், புரியவில்லையெனில் விட்டுவிடலாம்)

ஒருப்புள்ளியிலிருந்து இன்னொருப்புள்ளிக்கு நகரும் ஊடுருவக்கூடியக் கதிர்கள், நாமாக மாறி, பின் வெளியேறி வேறொன்றாக வெளியேறவும் இயலும், இதனாலேயே, எனக்கு எல்லோரும் ஒருவகையில் சம்பந்தப்படலாம் எனத் தோன்றும். என்னுடலில் நுழைந்து மற்றோர் உடலில் நுழைந்து வெளியேறும், இழைகளோ/strings அல்லது துகளோ/particles இவ்வாறுத் தொடர்பை உண்டாக்கலாம், அந்தத் தொடர்பு அதிகநேரமோ, குறைந்தநேரமோ இருக்கலாம். இதனாலேயேக் கூட, ஒரு வேளை, இடாய்ச்சு அப்படியொரு முடிவுக்கும் கூட வந்திருக்கலாம். (அல்லது, உயிர்பொறியியல், சைபர்னெடிக் உயிரினம் சார்ந்த ஆய்வுத்துறை வளர்ச்சியினால் கூட கூறியிருக்கலாம்)

அதாவது, ஆரம்பத்தில் இருந்தே, ஒரு விசயத்தைக்கூறிவருகிறேன், வைரஸ், வயிற்றிலுள்ள நுண்ணுயிர் பாதிப்பினால், ஏற்படும் உயிரியல் கொந்துதல்/hacking, வேதிக்கொந்துதல், வேறுவகையானத் தொழிற்நுட்ப கொந்துதல் மூலம் எந்நேரமும் நாம் நாமாக இருப்பதாக நினைக்கிறோம், செய்கிறோம், ஆனால், அது உண்மையில் நாமாக இல்லாமலும் இருக்கலாம் என்பது.

ஆக, நான் என்று யோசித்திருப்பதை சரிவர செய்கிறோமா என்பதே நமக்குத் தெரியவில்லையெனில். எது சரியாக இருக்கமுடியும்.

நாம் முழுமையுணர்வுபெறுவதற்கு பற்பல வழிகளையமைத்திருக்கிறோம், ஆனால், அவ்வழிகள் பெரும்பாலானோர்க்கு எதையும் காண்பிப்பதில்லை. நாம் முழுமையுணர்வுக்கான வழியில் இருக்கிறோம் என்பதும் இல்லையென்பதும், இயல்பில் ஒப்புமைப்படுத்துதலில் வருவது. மேலும், ஒருவேளை முழுமையுணர்வு பெறுவதற்கான வழிமுறைகளாக நாம் கொண்டிருக்கும் வழிமுறைகளைக் கடந்த வேறொன்றாகவும் இருக்கலாம்.

தவிர, எனக்கு முழுமையுணர்வு பெற்றவர்கள் ( புத்தர், சித்தர்கள்) எதையும் பெரிதாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுமில்லை. வாழ்வின் போக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது சரியானதாகத் தான் இருக்கிறது என்பதே அவர்களின் பதிலாக இருக்கும் எனத் தோன்றும், அவ்வாறே இதுவரை இருந்திருக்கிறது. சொடுக்கிடும் நேரத்தில் நம்மாலேயே பலவேலைகள் செய்யவியலும் போது, வல்லமையுள்ளவர்களால் இன்னும் பெரிதாகவே செய்யவியலும் என்பது, எந்தவொரு பாமரனின் கருத்தாகவேயிருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை, இல்லையெனில், மொத்தமாக, எல்லோருக்கும் மோட்சகதி அருளியிருக்கலாம்.

ஆக, சமூக வளர்ச்சி அதுபாட்டுக்குப் போகும், மாந்த உளப்போக்கு சீரடைவதும் அதுபாட்டுக்கு நடைபெறும், இந்த இடைவெளியில் நாம் தத்துவங்கள் பழகுவதெல்லாம், உளப்போக்கு மென்மேலும் சீராவதற்கும் சமூகத்தின் ஓட்டத்திற்கும்/நடைமுறைத் தேவைக்கும் இடையேயான இடைவெளியை சரிசெய்வதற்கென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, ஞானியருக்கு சரி தவறென்று ஏதுமில்லையென்பர். அதையொரு சமூகம் அல்லது சாதாரண மனிதர் ஒப்புக்கொள்ளமுடியாது, சரி தவறு பகுக்கப்படவேண்டியது முக்கியமானதாகவேக் கருதுவர்.

அதாவது, ஒரு சமூகம் தீங்குவிளைவிப்போருக்கென்று சட்டங்களை இயற்றியிருக்கும். அதற்கு நல்லதகெட்டதைத் தேர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும். அது சாதாரண மக்களுக்கும், ஒரு கொலைகாரருக்கும்/பெருஞ்சண்டைக்காரருக்கும் இடையேயான உளப்போக்கின் வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு, பெருஞ்சண்டைக்காரரினால், உண்டாகக்கூடிய கேடுகளிலிருந்துக் காப்பதற்கு விதியமைக்கும்.

விதிகளைப் படைத்ததனாலேயும், அதை எல்லோருக்கும் உணர்த்துவதன்மூலமும் சமூகம் சரியாக ஆகிறதா?! விதிகளை சரிவரக்கடைப்பிடித்தால் எல்லாம் சரியாகுமா?? ஒரு வேளை, சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் துறவியானால் எல்லாம் சரியாகுமா? இரண்டிலும் வழிதவறி அர்த்தமற்றதாகும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே, வாழும்வரையில் செய்யவேண்டியவை என நமக்கு உணர்த்தப்பட்டதையும், அந்நேரத்துக்கு ஆகவேண்டியதையுமேச் செய்கிறோம். அதாவது இயல்புநிலையிலேயே இருக்கிறோம்.

முழுமையுணர்வு வாய்த்திருக்கவேண்டியதொரு தருணத்தை ஒருவர் தவறவிட்டுவிட்டார் எனக் கொண்டால், அதற்கான தீர்வுதான் என்ன? கிரியா யோகம் போன்று மனத்தையும் உடலையும் தீட்டிவைத்தும், முழுமையுணர்வை எட்டாதக் கதைகளைக் கேட்டிருக்கிறோம் தானே. ஆதலால், கடவுளர் பத்தியென்பது எல்லாம், இவ்வளவுக் குழப்பங்களின் நடுவே நடத்தவேண்டியதை நடத்துவதற்கென்பது என் எண்ணம்.

அது சரியான நேரத்தில் தூங்காமல் சுகம்பெறுவதாகக்கூட இருக்கலாம், அல்லது வேறெதாவதாகவும் இருக்கலாம். இப்படி இருநிலைகளில்–அதாவது, 1. எனக்கு வழிமுறைத் தெரியும், 2. ஆனால் இன்னும் போய்ச்சேரவேண்டிய இடத்திற்குச் சென்றடையவில்லையென்று உணர்வது –இவ்விருநிலைகளினால் ஏற்படும், உடல்-உளத்தாக்குதல்களும் (affecting psychosomatically) பெரும்விளைவை உண்டுபண்ணக்கூடியவையென யோகசூத்திரங்கள் சொல்கின்றன.

இருப்பின் புதிருக்கானத் தீர்வுகள், மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலாமுறைகளிலும், அதாவது கட்டமைக்கப்பட்டவழிகளில் இல்லாமல், கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் பொருளற்றதாக ஆகும்போது எல்லாம் எளிதானதாகவும் ஆகும், அதாவது, தேவையற்றதைச் செய்வதால் முழுமையுணர்வுத் தருணம் தவிர்க்கப்படலாம், அது முழுமையுணர்விற்கானப் பயிற்சியென்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அது அதனாலேயே வாய்க்காமல் போகலாம்.

ஆக, சாதாரணமாக இருப்பதும், முழுமையுணர்வை அருளலாம். கடைசியாக, முழுமையுணர்வும் ஒன்றுமில்லாததாகப் பொருளற்றதாக இருக்கலாம்.

Reductionism and emergence – a naive argument

I do not understand why biologists consider physicists’ perception about the reality is so indifferent!!  I feel it is rather an opinionated point of view.

In a discussion, a friend quoted a work of Stuart Kauffman and his stance on the complexity theory and reductionist point of view.

Actually, we get to the reductionist results due to insufficiency and inability of available ‘computing’ resources, thus leads to the incompleteness in presenting the reality. So, the reduced reality give at least some understanding about the minimal system and interactions. It might not give the better description, however, not reducing it to the physical aspects of the system might not be possible. For example, assuming a biological cell as a function or functional, would not be ‘complete’ without the implications of theoretical chemistry, which incorporates the most of quantum&classical and statistical physics. It depends on what level they want to work out.

We try to describe the physical reality of natural phenomena, by adding complexity/ more details. Moreover, the macroscopic emergence and the critical phenomena occurred in the collection of atoms and molecules can not be ignored, could possibly infer a difference in the emergent behavior. In the “lovers on the banks of Seine” example, even an unintentional teasing (i.e., a word) can trigger and spoil the mood, ambience, etc. When one of the couple is, subjectively tolerant, this interaction would be still pleasant.

If one of them can be possibly affected by a trigger–pain,illness or anything affecting his/her ‘behavioral equilibrium’, same system-trigger composition would affect their state of mind.

If one of them is a practicing-yogi, the same composition of the interacting parts(system-environment-trigger) and the state of mind would not be affected.

I think the present state of the emergence problem is just due to the insufficient resources which we consider and most importantly how much of the reality we are interested in. When the couple wants to be happy, they just do the things which please them the most.

But if I want to be a trend-setter, I need to change the very basic ideas of the norms set. I could go deeper and deeper by adding additional levels and change the things in a completely newer level.

Sometimes, the natural process might be redundant or may contain voluminously unnecessary information. Therefore, picking the limits depend on which level I seek.

எ.ச. ஜார்ஜ் சுதர்சன்

எ. ச. ஜார்ஜ் சுதர்சன் சகக்காலத்தில் வாழ்ந்த மிகமுக்கியமான இந்திய இயற்பியலர். என்னை மிகவும் ஆழ்ந்துபாதித்த இயற்பியலர்களுள் இவரும் முக்கியமானவர். இன்று அவர் இறைத்திருவடிகளுடன் கலந்துவிட்டார்.

அவருடைய ஆய்வுப் பரம்பரையில் நேரடியாக வந்தவனாக என்னைக் கொள்ளவியலாது, ஆயினும் நான் சிறிதுகாலம் இணைந்து வேலைசெய்த இந்திய வானியற்பியற்கழகத்தின் பேராசிரியர் சிவராம் அவர்களின் ஆசிரியர் சுதர்சன் அவர்கள்.

(நோபல் பரிசு வழங்கப்பெற்ற) வலுவிலா இடைவினை/weak interaction, குவாண்டம் சீனோ விளைவு/Zeno effect, நோபல் பரிசு வழங்கப்பெற்ற சுதர்சன்-க்ளௌபர்/Sudarshan-Glauber representation குவாண்ட ஒளியியல் வழிமுறை, டாக்கியான்/tachyon எனப்படும் ஒளியினும் அதிதிசைவேகத்துகள், குவாண்ட நேரியல், ஆற்றல் தேய்வியல்/decoherence, dissipation போன்ற புலங்களில் ஆய்வை மேற்கொண்டும், மேற்குறிப்பிட்டப் பலமுறைகளையும் புதிதாக இயற்பியலில் கண்டறிந்தும் தந்தவர்.

இவரின் கண்டுபிடிப்புகளுக்காக ஒன்பதுமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பெற்றவர் எனக்கூறப்படுகிறது. ஆயினும் ஒருமுறைகூட வழங்கப்படவில்லை. கடைசியாக 2005ஆம் வருடம்- சுதர்சன் -க்ளௌபர் வழிமுறைக்காக, க்ளௌபருக்கு நோபல் பரிசு வழங்கிவிட்டு, இவரை விட்டதையடுத்து, இவரே நோபல் குழுமத்துக்கு மடலெழுதி தன் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

வேத, வேதாந்தங்கள் போன்ற இந்தியத் தத்துவங்களில் மிகவும் ஆழ்ந்து இயற்பியலை/உண்மையைத்தேடியவர். உலகளாவிய ஆய்வில் புகழ்மிக்கவராய்த் திகழ்ந்த அதேநேரம், இந்திய இயற்பியல் ஆய்விலும், தத்துவார்த்தத் தேடலுக்கும் மிகுந்தப் பங்கினை ஆற்றியவர்.

#நூலகத்தொடர் – 7: மூலமத்யமககாரிகா, Tractatus Logico-Philosophicus

Day 7 :
Mulamadyamakakarika – Acharya Nagarjuna
Tractatus Logico-Philosophicus – Ludwig Wittgenstein
Philosophical investigations: Ludwig Wittgenstein

இன்றைய நூல்கள்: பௌத்தமுனிவர் நாகார்ச்சுனர் எழுதிய மூலமத்தியமிககாரிகா மற்றும் தத்துவ-கணிதஏரண வல்லுனர்/logician லுட்விக் விட்கன்ஸ்டைன் வெளியிட்ட ஒரே புத்தகம், பின்னர் அவரின் இறப்பினுக்குப்பின்னர், இரண்டாம் நூல் அவருடைய மற்ற ஆய்வுவேலைகளில் இருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டன.

இறுக்கமுமல்லாது, தளர்வுமில்லாது நடுவழி செல்லும் பௌத்தவழியில் வந்த மாமுனியான நாகார்ச்சுனர், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். வெறுமையைப் பெரிதும் பேசியவர். வெறுமையில் இருந்து எப்படி இவ்வளவும் வந்தது என்பதைப் பேசியிருப்பார். அண்டம் பிறந்து வளர்ந்ததைப் போலவே இருப்பதுபோல், இது அடிக்கடித் தோன்றும். இது முற்றிலும் எனதுக் கருத்தானாலும், குவாண்டவியல் வழியாக இவரின் தத்துவத்தைக் காணவும், அது சார்ந்து உழைக்கவும் எனது விருப்பம்.

விட்கன்ஸ்டைனின் Tractatus Logico-Philosophicus/ஏரண ஆய்வுநூலைக் காணும்போதெல்லாம், அவரும் நாகார்ச்சுனர் பேசியது போல பேசியிருப்பதாலேயே இவற்றைக் கலந்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன்! ஆயினும் விட்கன்ஸ்டைன் பொருண்மைவாத ஏரணங்களிலேயே இருப்பது என்வரையிலான அனுபவம். எல்லோருக்கும் விட்கனஸ்டைனை அவருடைய ஏரண-மெய்யட்டவணை/truth table மூலமாகவும், வாத்து-முயல் தோற்றமயக்கப் படம்/duckrabbit illusion மூலமும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு, அவரே மெய்யட்டவணைமாதிரியான ஏரணவாதங்களை முதலில் பயன்படுத்தியவர். தனது இரண்டாவது நூலில், தான் எழுதிய முதலாம் நூலில் ஏற்பட்ட விவாதங்களில் உள்ளப் பலக்குறிப்புகளை, அவரே விமர்சித்திருப்பார். இவரது நூல்களில், மொழியின் வடிவம், சொற்பொருளியல்/semantics, விளையாட்டுப்புதிர்கள், ஏரண கணிதம் ஆகியவற்றைப் பெரும்பாலும் பேசியிருக்கிறார்.

எனக்குப் பிடித்த மற்றத்தத்துவவியலாளர்கள் நூல்களைப் பற்றியும் பேச ஆசை. தர்மகீர்த்தி, இரஸ்ஸல்/Betrand Russell, டெ கார்ட்/Rene Descartes, பாப்பர்/Karl Popper ஆகியோரின் தத்துவங்களைப்பற்றியும் நம்மூர் நூல்களான விவேக சம்ஹிதை, உபநிடதங்கள் போன்ற தத்துவங்களைப்பற்றியும் வேறொரு சமயத்தில் பார்க்கலாம்!

#நூலகத்தொடர்

No automatic alt text available.
Image may contain: 1 person, text
LikeShow more reactions

Comment

#நூலகத்தொடர் – 6: Snow Crash

Day 6: Snow Crash – Neal Stephenson – a science fiction speaks on science, philosophy politics, religion, cryptography, linguistics, psychology, anthropology, etc.

ஆகச்சிறந்த தொடக்ககால அறிவியற்புனைவுக்கதைகளைவடித்த ஐசக் அசிமோவ் போன்றோரின் கதையையெல்லாம் பெரிதாகப் படித்ததில்லை. திடீரென, அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலாம் எனும்போது, நண்பரொருவர், ஸ்னோ கிராஶை அறிமுகப்படுத்தினார். அதற்குள்ளே, முகநூல் நிறுவனர் நம் உளத்தைப் பிடிப்பதற்கு நம்முடைய வாயிலிருந்தே விசயங்களை வாங்கி அரசியலுக்குத் துணைபோனதுப் போன்றதே இக்கதையும்!

இக்கதையும் கோடல் எஷர் பாஹ் மாதிரி, பல விசயங்களைக் கலந்து கோணலான பெருமுதலாளித்துவத்துக்கான அடிமைச்சமூகத்தை உருவாக்குவதைப்பேசும் ஒன்று. இதில் கணினியியல், உளவியல், மொழியியல், வரலாறு, சேதிமறைவியல், தத்துவம், மதம், மக்களியல் என எல்லாவற்றையும் பேசியிருப்பார் ஆசிரியர்.

வியாபாரநிமித்தம் ஒருகுழு, மொத்த உலகத்துக்கும் snow crash எனும் உணர்வுவழியில்(கண், காது) கணினி வைரஸ் மாதிரியான ஒரு காணொலியைத் தொலைக்காட்சி, இணைய ஒளி/லிபரப்பு மூலம் செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயல்வார்கள். இங்கு வைரஸ் என்பது, கணினி வைரஸ் மாதிரியானதும், உயிரியல் வைரஸ் வழியும் சேதிப்பரிமாற்றத்தை நிகழ்த்தி, DNA-ல் நடைபெறும் உருமாற்றத்தால் விளையும் விசயமாகவும் இருக்கலாம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள், எப்பொழுதும் சமூகத்தில் நடப்பதே என்பதையும் உணர்த்தும்வகையில் வெவ்வேறு இடங்களில், காலங்களில் நடந்த விசயங்களை வைத்து குறிப்பிட்டுக் காட்டியிருப்பார். முன்பொருக் காலத்தில் வாழ்ந்த சுமேரியக்குடிகளின் கடவுளான எங்கி (Enki) தான் முதன்முதலில் தன் விந்தின் மூலம் தன்னுடைய தாத்பர்யத்தையும் குணத்தையும் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு வைரஸ் தற்பொழுது கணினிகளில் பரவுவது போல், பரப்பியதற்கான முன்னோடி என்பதில் ஆரம்பித்து, மதப்பரப்புரை வரை ஒப்பிட்டுப் பேசியிருப்பார். கதையினூடே வரலாறும் தத்துவமும் பின்னிப்பிணைந்திருக்கும்.

ஆசிரியரான நீல் ச்ஸ்டீன்பன்சன், அவதார், இணையம் போன்று இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை, இம்மாதிரியானப் பொருளில் முதலில் பயன்படுத்தினார் என்பர். இவர்க்கதைகளூம் வில்லியம் கிப்சன், அய்ன் ரேண்ட் (Objectivism-related) கதைகளும் எனக்கு ஒருகாலத்தில் பிடித்தமானவை, புனைவைப் பெரிதும் விரும்புவதில்லையெனினும்!
#நூலகத்தொடர்

Image may contain: text

#நூலகத்தொடர் – 5: Siddhartha

Day 5: Siddhartha – Hermann Hesse

நோபல் பரிசுபெற்ற ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய நூல் இது. முதுகலைப் படிக்கும்போதுதான் இந்நூலைப்பற்றியறிந்தேன்.

புத்தநிர்வாணநிலை, உளக்கட்டுப்பாடு, தியானம், யோகம், கம்யூனிசம், சாக்ரடீஸிற்கு முந்தைய தத்துவங்கள், தாந்திரீகமுறைகள், சம்சாரம் என உள்ளுக்குள் பலவிசயங்களைக் கேள்வியாக ஓட்டிக்கொண்டிருந்தகாலத்தில், சித்தார்த்தா எனப் பெயரைக் கேட்டதும் ஈர்த்த நூல், மேலும், மேற்கத்தியர் இதைப்பற்றியெழுதியிருக்கிறார் என்றவுடன் படிக்கத்தோன்றியது. ஹெஸ்ஸேயின் மற்றப்புதினங்களை விட இதுதான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும் என படித்தப்பின் தோன்றியது.

கிட்டத்தட்ட 10 நூலாவது வாங்கியிருப்பேன், இக்கதையைப் பற்றித் தெரியவில்லையெனின், உடனே நண்பர்களுக்குப் பெற்றுத்தர வைத்த நூல். திரும்பத்திரும்பவும் படிக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.

ஹெஸ்ஸே, இந்தியாவந்து சந்நியாசம் வாங்கிவாழ்ந்து பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டு, முதலில் இலங்கை வந்திருக்கிறார். பின்னர் அங்கு வாழ்ந்தக்காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தமட விசயங்கள் எல்லாம் சேர்ந்து, “சந்நியாசமே வெறுத்துப்போய்” சம்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். இதில் இந்தியா வராமலேயே, இந்தியாப் போகும் யோசனைக்கு முற்றாகப் பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!

கதைத்தலைவன் பிராமணன் சித்தார்த்தனுக்கும், கௌதமபுத்தருக்கும் கதையில் ஒரேயொரு இடத்தில் மட்டும் சம்பந்தம்வரும். மற்றபடி, சந்நியாச வாழ்க்கையை விரும்பிய, வேதபிராமணன் சமணனாகி, பௌத்தம்தொட்டு, சம்சாரியாகி நன்றாக வாழ்ந்து, பிரிவுத்துயரினைக் கற்று, மீனவரொருவரால், “நதிசொல்லித்தரும் பாடத்தைக் கற்று” முடிவில் ஞானமெய்துவதோடு, அடுத்தவரையும் ஞானம்பெறுவிக்கச் செய்து உய்விக்கும் நிலையையெட்டுவான்.

#நூலகத்தொடர்

Image may contain: 1 person, smiling

#நூலகத்தொடர் – 4: On Physics and Philosophy

Day 4:
On Physics and Philosophy – Bernard d’Espagnat.

உண்மையின் தன்மையென்ன, புலன்களின் தன்மையென்னவும் அளவுகோலின் அளவீட்டின் தன்மையென்ன என ஆழ்ந்துபேசிய நூல்.

உண்மையை உணர்தல் அரைகுறையாகயிருந்தால் என்னவாகும்? ஒரு மலரையெடுத்துக்கொண்டால், அதை, நாம் ஒரு நிறத்தில் காண்போம், பட்டாம்பூச்சி, வண்டுகள், தேனீகள் போன்ற ஒவ்வொருப்பூச்சியும் அதே மலரை வெவ்வேறுவண்ணத்தால் அறியவும் வாய்ப்புள்ளது. அப்படியானால் அளவீடு என்பது எதைவைத்து அளப்பது. அதைவிட, ஒரு மனிதர் பார்க்கும் நிறம் மற்றொரு மனிதருக்கும் அதேவாகத் தெரியவேண்டிய அவசியமுமில்லை.

நான்பார்க்கும் நிறத்தை என்னனுபவம் கற்றுத்தந்தது, ஆனால், என்னனுபவத்துக்கும் மற்றோரின் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அளவீடுகள் மூலம் எண்களைக் கொண்டுக் குறிப்பிடலாம். எண்களில் மாற்றம் வராது (ஓரளவுக்கு!). ஆனால், எண்களால் அளக்கமுடியாமல் போனால் என்னவாகும் என்பதே எல்லோருக்குமுள்ள கேள்வி. பொறியியலாளர்கள் பொருண்மையுலகில் இயந்திரங்கள் படைக்கும்போது பிரச்சினையில்லை. ஆனால், இன்னும் ஆழ்ந்து செல்லவேண்டிய நிலை உருவாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கட்டுமான அறிவியலின் தாத்பரியத்தை உணரவேண்டிய சமயமாக உள்ளக் காலகட்டத்தில் ( அதாவது குவாண்டக் கணினியியல், குவாண்ட இணையதள நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உள்ள நேரத்தில்), இந்நூல் நிறையபேருக்கு உதவலாம்.

#நூலகத்தொடர்

Image may contain: text

#நூலகத்தொடர் – 3: Sophie’s world

Day 3:
Sophie’s World: A Novel about History of philosophy
-Jostein Gaarder

இந்த நூலின் மூலம் என் குழந்தைத்தனம் வெளிப்பட்டுவிட்டிருக்குமே எனத்தோன்றினாலும், சும்மா தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள உகந்த நூல். பதின்ம வயதுப் பெண்ணான சோபிக்கு, யாரென்றுத் தெரியாத ஒரு “தத்துவவியலாளத்தாத்தா” தத்துவத்தைப் போதிப்பதுபோல புனைந்து எழுதியிருப்பார், தத்துவவியல் ஆசிரியரான யோஸ்டைன் கார்டர்.

இவ்வாறு தாத்தா அனுப்புங்கடிதங்களைக் கொண்டு அம்மாவிற்குந் தெரியாமல், படிப்படியாக தத்துவவியலின் வரலாறு மற்றும் சிறுசிறு விசயங்களைக் கற்று வளர்வாள். “நீ யார்?” எனக்கேட்கும் முதல்கேள்வியிலிருந்து, சாக்ரடீஸிற்கு முந்தைய எகிப்திய இந்தியச் சிந்தனைகள் முதற்கொண்டு, கிரேக்க தத்துவத்தின் தத்துவவியலர்கள் பற்றியக்குறிப்புகளையும், அப்படியேக் காலத்தில் வளர்ந்து, நடுவாந்தர ஐரோப்பியத் தத்துவவழி வந்து, புதுக்காலம் வரைக்கும் உள்ள தத்துவவியலாளர்களின் பொருண்மைவாதம், இருப்பியல், என எல்லாவற்றையும் பற்றியுணர்த்தக்கூடிய நூல். சுவாமி விவேகானந்தர், சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் போன்றோரையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

#நூலகத்தொடர்

எதிர்வினை: கற்றலும் சமூகமும் -7 சமூக தாக்கம்

என்னுடைய முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய ஒருவர் இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும். அடுத்து ஒரு பெண் என்பவளோ அல்லது ஓர் ஆண் என்பவனோ திருமணம் செய்து தான் வாழ வேண்டியது கட்டாயமில்லை. திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு. இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி. இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.

// குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.//

எப்படி??

//ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.//

ஆம், அப்படித்தான்.

// வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். //

தவறு. சமூகபிரசித்தி பெற்ற வெளிநாட்டு சினிமாக்காரர்களின் விளையாட்டுவீர்ர்களின் குடும்பங்களூம் அவர்களின் வாழக்கைமுறைமை மட்டும் அந்தந்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் காரணியாகா , எல்லா நாடுகளிலும் தாத்தாப்பாட்டியுடன் வாழும் குடும்பங்கள், குடும்பப் பிணைப்பு, பண்பாடு என்று ஏராளம் உண்டு, வளர்ச்சி சார்ந்த நகர்ப்புற வாழ்க்கை, நம்மூர் போலவே, குடும்பங்களைப் பிரிக்கிறது, அவ்வளவு தான். எல்லாநாடுகளிலும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை, பிள்ளைபெற்றுக்கொள்ளவில்லை என்றுகேட்கும் அதே கலாச்சாரம் இங்கேயும் உண்டு.

//இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். //

சாதிபோன்ற அமைப்பைத் தாண்டிவந்து பொருளாதார வளர்ச்சிக்காக வேலைசெய்து, அதுவே பின்பு சமூகவளர்ச்சியாக மேலைநாடுகள் மாற்றத்தான் செய்துள்ளது. என் மனைவி வசிக்கும் உற்றெச்ட் நகரில் நகரின் ஓரத்தில், மிகப்பெரிய மடு உண்டு. அம்மடு சாதியில்/மதத்தில் குறைந்தோராகக் கருதப்பட்ட மக்களை, காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று சாதியில் பெரியோர் சேர்ந்து அரசுக்குக் கூறி அம்மடுவை செயற்கையாக உருவாக்கினார்கள், இது நடந்தது இருநூறு வருடத்துக்கு முன்னர்.

சாதியை அறுத்தப்பின்னரும் அச்சமூகமும் வளரத்தான் செய்துள்ளது, இன்னும் பண்ணைவீடுகளில் இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் விஞ்ஞானிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

//அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும்.//

குழு என்றாலே அடக்குமுறை உண்டு. மென்மையானதா அல்லது கடுமையானதா என்பது அக்குழுவில் வாழும் மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது. பதின்பருவப்பிள்ளைகள் எம்மாதிரியானக் குடும்பத்தில் இருந்தாலும், புரட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. அதற்காக, நாம் பிள்ளைகளை அடக்குவதை அடக்குமுறை எனக் கருதுவோமா? ஆனால் அவர்கள் பார்வையில் பெற்றோர் அடக்குமுறையாளர்களே. ஆக என்ன நோக்கத்தில் நாம் செய்கிறோம் என்பதை சிந்தித்து செயல்படவேண்டும்.   மனிதர்கள் சமூகவிலங்குகள் என்பது இயற்கைவிதி, அது மாறினால் மட்டுமேக் குடும்பம் வேண்டாம் என்று கூறுவது மாறும்.

//திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. //

அதை நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தெளிவான சிந்தனைகொண்டிருக்கிறவர்கள் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை, சமூகவொழுங்கில் உண்டானது. அதற்காக சமூகவொழுங்கு மட்டுமே ஒருவரை வளர்த்தெடுததுவிடமுடியாது.
கிரேக்க தத்துவமேதைகளாகட்டும், தமிழ் சமற்கிருத தத்துவமேதைகளாகட்டும். அவர்கள் கொல்லப்பட்டதும் வணங்கப்பட்டதும், சிந்தியுங்க்ள் என்று சொன்னதற்காகத் தான். விதண்டாவாதத்தில் இது முன்னேற்றம் பகுத்தறிவு என்று யாராவது கூறுகிறார்கள் என்றால், அவர்களை அவர்களின் முடிவுகளை அவர்கள் வாழ்க்கையேப் பார்த்துக்கொள்ளும். அதையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது, கருத்துக்களை முன்வைக்கலாம், அதை அப்படியே பின்பற்றுக என்று வலியுறுத்துவது எதேச்சதிகாரம், சிறுபிள்ளைகளை அடித்துத் திருத்துவது, இக்காலத்தில் தவறாக ஆனது கூட இம்மாதிரிதான்.  வழிப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள், அது மட்டுமே நம் வேலை, மிச்சர் அவரவர் கைகளில் தான்.

 

//இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு.//

உங்களின் கேள்வியின் அடிப்படையேத் தவறானது.  இருப்பதை இருப்பதுபோல் படித்துச்சொல்வது தான் சமூக அறிவியலும், அதுசார்ந்த ஆட்டக்கோட்பாடும், இல்லாததைச் சொல்வது எதுவும் நிலைத்தும் நிற்காது, அறிவியலின் வேலையும் அதுவல்ல.  மேலும், எல்லாவிதமானக் கோட்பாடுகளும் நிலைத்துநிற்கும் என்றுக் குறிப்பிட்டது எப்படியெனத் தெரியவில்லை. அணுக்களைப் பற்றி நம்மவர்கள், சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னிருந்தகிரேக்கர்கள் முதற்கொண்டு பலபேர் உரைத்திருக்கின்றனர். இன்றும் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு அறிவியல் சார்ந்தும் அதைப்பற்றி சோதித்துவருகிறோம். அதேநேரம் அணுக்கொள்கைகளாகக் கூறப்பட்டப் பலவும் அறிவியலால் தூக்கியெறியப்பட்டுள்ளது.   அறிவியலல்லாதக் கோட்பாடுகளெல்லாம் பயன்படாவிட்டால் களையெடுக்கப்படும்..

ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையைக் கூறி நூறுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அவ்விதியை ஐன்ஸ்டைன பகன்று இருபது வருடங்களிலேயே புதன் கிரகத்தின் ஒளியை வளைப்பதில் இருந்து அவர் விதிசரிதான் என்று அறியப்பட்டது. ஆனால் அந்த ஒரேயொரு வாதத்தை மட்டும்  அவரின் விதி சரியென அறிவியல் ஒத்துக்கொள்ளாது.   நூறாண்டுகள் கடந்தப்பின்னும், இன்றுவரைக்கும் வெவ்வேறு சோதனைகளும் அதன்மேல் கட்டப்பட்ட வெவ்வேறுக்கோட்பாடுகளும் அவ்விதிகளை சந்து சந்தாக அறுத்து ஆய்வுசெய்கிறது.

நல்லவன் கெட்டவன் என கோட்பாடு சொல்வதாகக் குறிப்பிடவில்லை, நல்லவரும் கெட்டவருமாக முரணோடு சேர்ந்திருப்பதில் தான் சமூகத்தின் ஓட்டம் இருக்கும் என்பதாய் இருப்பதை இருப்பதாகவேக்கூறுகிறது.   இதுதான் நாம் அனைவரும் அறிந்ததேயென்றுக் கூறினாலும்,  அறிவியலின் வீச்சுஅதோடு நிற்பதிலில்லை, மாறாக மாற்றத்தில் எவ்வளவு வேகம், எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கும். இதற்கு எடுத்துக்காட்டு உலகப்போர்கள். இரண்டே இரண்டு உலகப்போர் உலகத்தின் வளர்ச்சியை திடீரென மாற்றியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு உலகப்போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடும் அளவுக்கு மாற்றிவிட்டது.

//இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

இப்படி ஒருக்கருத்தைக்கூறி மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள். இதற்கானப் பதில் முந்தைய கருத்திலிருந்தும் தங்களுக்குப் புரியும் என்றாலும், ஆட்டக்கோட்பாடோ/அறிவியலோ எப்படி இயங்குகிறது என்று கூறுவதற்கு உங்கள் கேள்வியை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறேன்.

எதையாவது எகனைமுகனையாகத் தங்கள் வீட்டில் பேசிவிட்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நம்வீட்டினரிடம் கூட கூறிவிடமுடியாதுதானே?    அப்படியிருக்க, அறிவியல் என்பது உங்கள் வீட்டுப்புழக்கடையில் வளரும் நாய்க்குட்டி போல் இருக்கும் த்வனியில் நீங்கள்கூறியுள்ளீர்கள். அறிவியலில் ஆய்வுசெய்யவேண்டும் என்று விரும்பும் மாணவன் கூட இம்மாதிரி உரைக்கமாட்டார்.    என்னப்பா, ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைபார்ப்பவர் நீங்கள், இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோமென அறிவியலைப் பற்றிப் பேசுவது?

ஒரு தியரி உருவாகும் கதையை உரைக்கும் முன்னர், முதலில் நீங்கள் கூறுவதுபோல் இமல் தியரி எனும் பெயரை நமக்கு நாமே தரவும்முடியாது பிரஸ்தாபிக்கவும் முடியாது என்பதை உணர்தல் நலம். அதன்படிநிலைகள் இவ்வாறு செல்லும்:

  1. உங்களின் கோட்பாட்டை உருவாக்கும் முன்னர், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து, அதைப் படிக்கும்போது ஏதோவொன்று உங்கள் மனதில் உதித்து, இதில் வேலைசெய்வோம் என்று ஏதோவொரு சின்னக் கேள்வியை எடுத்து, இதன் பின்னர், திரும்பவும் அக்கேள்வி சார்ந்த பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, அதில் நீங்கள் யோசித்ததை ஏற்கனவே செய்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவ்வாறெனில், நீங்கள் யோசிப்பது புதிதா பழையதா என்றுக் கண்டறிந்து, பழையதானால், திரும்பவும், முதலில் இருந்து துவங்குவீர்கள். இதற்கே பலவருடங்களாகலாம். பின்னர், நீங்கள் நினைத்ததை வடித்து, அதற்குரிய கணித அல்லது ஏரண/logic வடிவங்களை அமைத்த பின்னர், அதற்கான சரியான உதாரணங்களையும், சரியான வடிவங்களையும்/மாடல்கள் தரவேண்டும். இவையெல்லாம் உங்கள் திருப்திக்கு வளர்ந்தப்பின்னர், பொதுவில் உங்களுடையக் கருத்தை வைப்பீர்கள்.  முதலில்
  2.  உங்களின் ஆய்வு, அறிவுசார்பாக முக்கியமானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், முதலில் நீங்கள் வேலைபார்க்கும் பல்கலைக்கழக அல்லது ஆய்வுக்குழுவில் உரையாற்றுவீர்கள்.   ஒரு மனிதன் எல்லாவற்றையும் எல்லாநேரத்திலும் சரியாக செய்துவிடமுடியாது, ஆக சுற்றி வேலைபார்ப்பவர்கள், நீ சரியாகத்தான் கூறியுள்ளாய் என்றோ அல்லது, அவர்களுடைய அனுபவத்திலும் அறிவிலும் உதித்ததை சேர்க்க சொல்வார்கள். சரியானதென்றால் சேர்ப்பீர்கள், இல்லையென்றால் விடுவீர்கள்.   ஒரு வேளை யாருமே ஒத்துக்கொள்ளவில்லையெனினும், அடுத்தக்கட்டமாக.
  3.  நீங்கள் ஆய்வுசெய்யுந்துறையில் ஆய்விலுள்ளோர் அதிகம் வாசிக்கும் ஒரு நல்ல பனுவலுக்கு/journal அனுப்பிவிடுவீர்கள், அவர்கள் அதைத் தகுந்த அந்தந்த புலத்தில் வேலைசெய்யும் பெரிய ஆய்வாளர்கட்கு அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் கருத்தை ஒருவரி விடாமல் படித்து, நான் இப்பொழுது எழுதுகிறேனே, அது போல், ஒவ்வொரு வரிக்கும் கேள்விகளும் கருத்துகளுமாய் கொட்டித்தீர்ப்பார்கள்.
  4.  அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் ஒருவரி விடாமல் பதில் அனுப்பி, திரும்பவும் அவர்கள் நீங்கள் பதிலளித்ததிலிருந்து திரும்ப கேள்விகள் பல கேட்டு என 3, 4 முறையாவது தொடர்பாடல் நடந்தப்பின்னர், நீங்கள் அளித்த மொத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டால், அப்பனுவலில் பதிப்பார்கள்.
  5.  ஒரு வேளை, உங்களுடையப் பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனில், மொத்தமாக உங்கள் ஆய்வை ஒதுக்கிவிடுவார்கள், அப்படி பதிக்கமுடியாது என்றுக்கூறிவிட்டால், அடுத்த பனுவலுக்கு அனுப்பவேண்டியது, அங்குமில்லையென்றால், அடுத்தது, இப்படிப் போகும்.
  6.  ஒரு வேளை, நீங்கள் எழுதியது அறிவுசார்ந்து இருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர், உங்களின் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவர், இது பல வருடங்களுக்கு நடந்தால் மட்டுமே, இமல் தியரி என்று பெயர் வரும், அதையும் மற்றோர்தான் குறிப்பிடுவர்.

    விஞ்ஞானிகள் சிம்மங்கள் போன்றவர்கள், அவர்களிடம் போய் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனறெல்லாம் பேசமுடியாது. அக்குவேறு ஆணிவேராக நாம் உரைத்தவற்றை கீறிப்பார்த்து அதனுள் உண்மை இருக்கிறதா எனப் பார்க்கும் அதேநேரம், அவர்களுக்கு ஒன்றைத் தெரியவில்லையென்றால், தெரியவில்லையென்றும் கூறிக்கடந்துவிடுவர்.   அதே விஞ்ஞானிகளில் பலர், தங்களின் பெயரில் வெளியானக் கோட்பாட்டைக் குறிப்பிடும்போது, தன் பெயரை தவிர்த்து சொல்லும் பணிவுடனும் இருப்பர்.  இருக்கட்டும்!

  7.  ஒரு வேளை எங்குமேப் பதிக்கவில்லையெனில், நம் ஆய்வை, நம் டைரியில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டியது தான். அத்தனைவருடம் நாம் செய்த ஆராய்ச்சியும் வீண் என்று அர்த்தம்.

    இத்தனைபேர் குறிப்பிட்டும் நம் ஆய்வுப்புலமையை நாம் சந்தேகிக்கவில்லையெனில்… ஒரு உதாரணம், நானிருக்கும் கட்டிடத்துக்கு பக்கத்துக்கட்டிடத்தில் தான் நோபல் விஞ்ஞானி பேரா. எரார்ட் டூப்ட் /Gerard t’Hooft இருக்கிறார். அவருக்கு, பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததாகவோ ஐன்ஸ்டைன் போன்ற பெரிய விஞ்ஞானிகள் தவறிழைத்தார்கள் என்றோ, இயற்கை எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டேனென்றோ, கான்ஸ்பிரசி தியரியென்றோ குறிப்பிடும் ஆயிரம் கடிதங்கள் அனுதினமும் வரும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதுபோல் ஆகிவிடும்.

  8.  ஒரு வேளை, பெரியதாகப் பாராட்டப்பட்ட ஒரு கோட்பாடு, செயல்முறையில் தவறு என்றுத்தெரிந்தால், அதன் மேல் கட்டப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் தரம் என்ன, அதாவது சரியாக இருக்கிறதா என்று அப்பொழுதும் ஆய்வுகள் நடக்கும். அறிவியலும் அறிவியல்சார் ஆய்வுகளும் பெருமுயற்சியாகும்.

ஆக விட்டேற்றியாக எதையும் சொல்லி செல்வது என்பது, மட்டமான sci-fi படங்கள் போன்றவை. தற்பொழுதெல்லாம், அறிவியற்கதைகள் கொண்டப் படங்களையே/ இண்டர்ச்டெல்லார், நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியரை/கிப் தார்ன்– வைத்து எடுக்கிறார்கள், அதில் செய்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாகவும் வந்திருக்கிறது.

//நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

அது நாம் மட்டும் வசிக்கும்வீட்டில் நடக்கலாம், நம்மோடு இன்னொருவர் இருந்தால் கூட நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் வளைக்கவேண்டி வரும். நம் பேச்சை நம் வீட்டு நாய் கூட எல்லாநேரமும் கேட்காது என்பதுதானே உண்மை. அதை உணரும்பட்சத்தில் நாம் சற்று நிதானிக்கலாம். பொதுவுண்மையாக ஏதோவொன்றைக் குறிப்பிட்டால் வரும் பிரச்சினையும் அதன் பின்னாலான விசயங்களும் நம்மை சார்ந்தது.  சமூகம் வேறு அறிவியல் வேறல்ல, அறிவியல் வேகமாக செய்வதை, சமூகம் மெதுவாக செய்யலாம் அவ்வளவு தான் வித்தியாசம். ஆக நாம் குறிப்பிடுவது சரியானதெனில், சமூகமும் அங்கீகரிக்கவேச் செய்யும்.

// இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.//

ஒன்றேயொன்று தான், தக்கனப் பிழைக்கும் அவ்வளவே!  இன்று நாம் தூக்கிவைத்துக்கொண்டாடும் சாதியை, 1400 வருடம் முன் நாம் செய்யவில்லையென்கிறார்கள், ஆங்கிலேயர் வரவுக்குப்பின்னும் மற்ற இனங்களின் வரவுக்குப்பின்னும் நடந்ததாகவும் கூறுகிறார்கள்.  ஆக நம் சமூகத்தில் இல்லாதது பெரிதாக வளர்ந்திருக்கிறது, ஆனால், அது தான் நம்மிடம் இல்லாதிருந்ததே, அப்படியானால் இல்லாதநிலைக்குப் போவோம் என்றும் கூட நாம் யோசிக்கலாம்.

நானும் நீங்களும் பேசுவதால் சிறுசிறுமாற்றங்கள் நிகழலாம், அதெல்லாம் தான் உண்மையாக நடந்துவிடும் என்றெல்லாம் கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம்.

மீண்டும் கூறுகிறேன் கோட்பாடுகள் வானத்திலிருந்து குதிப்பவை என்று நீங்கள் நினைத்திருந்தால், தத்துவார்த்தமாக நீங்கள் புரிந்திருப்பதில் மாறுபாடு தேவை.. இருப்பதைத்தான் தியரைஸ் பண்ணமுடியும், இல்லாததை அல்ல. நீங்கள் எப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் தியரி கூறமுடியாது, ஆனால், இப்படியெல்லாம் இருக்கிறீர்கள் என பிரதிபலிக்கும் கண்ணாடியே சமூக அறிவியற்கோட்பாடுகள். நம் கண்ணாடியின் அளவீட்டை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பம் அவ்வளவு தான், அது கண்ணாடியைப் பாதிக்காது.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய நம்பிக்கையைத்தானே தவிர்த்து, சமூகமாற்றத்திற்கான தத்துவமோ, அல்லது அறிவியலின் கட்டுமானம் சார்ந்த கேள்வியோ அல்ல. ஆனால், நான் பதிலளித்திருப்பது எல்லாநிலைக்கும் பொதுவான ஒன்று. இதை எந்த அடிப்படையில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். அதாவது கேள்விகள் கேளுங்கள், அதன் அடியாழம் வரை. இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்படித்தான் இருக்கிறோமாவெனவும் சோதிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.

தத்துவக்கூடை: இருப்பு/existence, அறியொணாமை/agnosticism, வெறுமை/emptiness and a physicist! :-p

நேற்று இராமசாமி செல்வராஜ் மற்றும் சுந்தர் இலட்சுமணன் அண்ணன்களின் மிக அழகான  ஆழமானத் தத்துவார்த்தப் பேச்சின் கருவைக் காணநேர்ந்தது.

“”வணக்கம் வணக்கம். எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்து ஒரு சுழற்காற்றில் ஏறியமர்ந்துகொண்டால், அப்படியே சென்று வாழ்வியல் மெய்யியல் சமூகவியல் தத்துவவியல் உடலியல் உள்ளத்தியல் தமிழியல் மொழியியல் இலக்கணவியல் என்று ஒரு பெருஞ்சுற்றே வந்துவிடலாம். இன்னும்கூட இருக்கலாம். நம் வடிகட்டியில் சிக்கியது இவ்வளவுதான்.”

“ஏன் இங்கு இருக்கிறோம் சுந்தர்? இதற்கான விடை இல்லையே”, என்றேன்.
“இன்னும் ஒருபடி மேலே போங்க. இங்கு நாம் மெய்யாகவே இருக்கிறோமா?”, என்கிறார்.
ஆகா.
தின்ற உணவு செரிக்கக் குடித்த இஞ்சியெலுமிச்சைச் சாறும், மசாலாத் தேநீரும் கூட நமது இருப்புக்குச் சான்று தானே.” —

அதில் கலக்கமுடியவில்லையே என்ற நினைப்புடனேயே என்கருத்துக்களையிட்டிருந்தேன், பின்பு அவர்களின் கருத்தைத்தொடர்ந்து என்கருத்தை நாலேநாலு வரியில் எழுத ஆசைப்பட்டேன் ஆனால், “இம்புட்டுப் பெரிசையெல்லாம் போடமுடியாது போவென”, ஃபேஸ்புக்கே உமிழும் அளவுக்கு மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது.  எனக்கும் வலைப்பூவில் எழுதினால் டைரிக்கு வசதிதான்!

சிசிறிது நேரத்திற்கு முன்பு, என்னுடையப்பதிவில் தங்களின் கருத்துக்கு கருத்திடும்போது, தற்செயலாக என்ற வார்த்தையை, எழுதும் போது, பல விசயங்கள் தோன்றியது. என்னுடைய அனைத்துப்பதிவுகளுக்கும் காரணங்களான, ஏனிந்தப்பதிவு என்றுக்கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு “தற்செயலான” காரணமிருக்கும்.   அதைப் பெரும்பாலும் என்னுடையக் கட்டுரைகளில் ஏனெழுதினேன் என குறிப்பிடவும்செய்வேன், தங்களுக்கு குறிப்பிட்டதுபோல்–நேரம், குவாண்டம் சீனோவிளைவு, வெப்பியக்கவிதிகள்! அவையனைத்தும் ஏதோவொரு கோணத்தில் இருப்பைக்கேள்விப்படுத்துவதைச்சார்ந்தே இருக்கும், ஆனால் ஏனிந்த இருப்பு, என்பதன் ஆழம் கொஞ்சம் அதிகமானாலும் பிடித்துவிடலாம் என்பது நம்பிக்கை, ஒருவேளை ஏனிந்த இருப்பு என்பது உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்!

ஒரு நிலையில் நின்றுகொண்டு காரணந்தேடின் அந்நிலைக்கு பதில்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதை தற்செயல் விளைவாகக்கொள்ளலாம், ஆனால், நாம் நிற்குமிடம் எல்லாவற்றுக்கும் மேலேயென்றிருந்தால் அனைத்து நிகழ்வுகளும் காரணகாரியத்தைச்சார்ந்தவையாகிவிடும் அல்லது அப்படியாகத்தோன்றக்கூடச் செய்யலாம், அல்லது ஒற்றையடிப்பாதையில் நான் மிதிக்கும் அந்த புல்லுக்கு காலையில் நீர்கிடைத்திருக்குமா என்பதிலிருந்து என் துன்பம் தொடங்கிவிடும் .

ஆழமான பக்தியோகத்திலும் கடவுளையும் கடந்துபோகவே வழிப்படுத்துகிறார்கள். கேள்விகள் கேட்காமல் ஞானயோகம் துவங்காதென்பதிலிருந்தே நாத்திகத்தின் ஆணிவேர் அங்கிருந்து உடனேக் கிளைக்கும். ஆக, ஏதோவொரு நம்பிக்கைபோல் தெரிந்திருக்கும் விசயங்களே மற்றொருஏதோவொரு நம்பிக்கையினின்று அகலச்செய்வனவாகவாகத்தானிருக்கிறது. அப்படியானால், நம்பிக்கையென்பது அன்றைக்கானத் துன்பத்தினின்று மேலேறுவதற்காக போலத்தான் தெரிகிறது.

கவித்துவம், அறிவு எல்லாம் அவ்வகையைச்சார்ந்தவைபோலத்தான் தோன்றுகிறது. அதாவது, என்னுடைய வலிக்கானக் காரணம், மூளையின் உணர்வுவாய்க்காலில் உண்டாகும் மின்னழுத்தவேறுபாடோ அல்லது வேதிவினையோதான் என்பதுத் தெரிந்தப்பின்னரும் எனக்கு வலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் முதன்முதலில் நான் அதை அறியும்போது, வலியில் மாற்றம் இல்லாது இல்லை, அதே விசயம், நன்கு பரிட்சயம் ஆனப்பின்னர், அதன் அறிவு எனக்கு துணைபுரிவதில்லை. ஆக, துன்பமானத்தருணத்தில் நம்பிக்கைசார் அந்த அறிவால் நாம் நம்மை சற்று ஏமாற்றிக்கொள்வதுபோல் இருக்கிறது, அதற்கான ஆணிவேரின் ஞானம் கேட்பதோடு நிற்கவில்லையெனினும், இருப்பில் இருந்து / சாதாரண வாழ்க்கைமுறையிலிருந்தே பெறுவதைப்போலத்தான் ஆதிசங்கரர், நாகார்ச்சுனர், தர்மகீர்த்திப் போன்றோரும் கூறுகிறார்கள்.

== “உங்கள் பின்னூட்டத்தின் கருத்துச் செறிவு அடர்த்தியாகவும் ஆழமாகவும் இருக்கிறது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துச் சிந்தித்தால் தான் முறையாக என்னால் உள்வாங்க முடியும் போலிருக்கிறது 🙂
ஆழத்தை அறிந்துகொள்ள முடிந்தால், ‘அன்றைக்கான துன்பம்’ என்னும் ஒன்று இல்லாமல் போய்விடும் அல்லவா?

ஆம் ஆம் அதேதான்! அறிவானது வலிக்கு மாத்திரை செய்கிறது; மருத்துவம் பார்க்கிறது; அது சைபோர்க்/cyborg மாதிரியோ குருத்தணுக்கள்/stem cells dynamics மாதிரியோ எனவளர்ந்துகொண்டே சென்றாலும், அன்றைக்கானத்துன்பத்தைத்தீர்க்கும் அளவிலேயே நிற்கவேண்டியிருக்கிறது, ஆய்வாளர்கட்கு இதை ஒத்துக்கொள்ளவொப்பாது என்பது ஒரு விசயமானாலும், அவர்களின் தீர்க்கதரிசன- நீண்டகால ஆய்வுத்திட்டங்களுங்கூட, அன்றன்றைக்கான அல்லது பின்னாளில் ஒருநாளுக்கான விசயத்தின் தீர்வாகவேயிருக்கிறது. ஆனால், நாம் நினைப்பதும் வேலைசெய்வதும் நம்பிக்கையுடன் இருப்பதும், ஒரே நொடியில் என் துன்பங்களை அகற்றமுடியுமா என்பதை எட்டுவதற்காகத்தான், ஆனால் இந்த ஆசையை இரகசியமாகவே வைத்துக்கொள்கிறோமெனத் தோன்றுகிறது.   ஏனெனில் ஒருநொடியில் வலிநிவாரணியென்பது எல்லாநேரத்திலும் சாத்தியப்படுவதில்லை, இந்தமாதிரியானமருத்துவப் புள்ளியியல் இடர்களால், உடனடிநிவாரணம் உண்டு என்றுகூறுவதற்கு அஞ்சவேண்டிவருகிறது.  ஆக நம் புள்ளியியல் அறிவு இதை ஒத்துக்கொள்வதுமில்லை மனமொப்புவதுமில்லை, பெரும்பாலும்!  ஆனால், இது பொதுவான அறிவு, நமக்குநாமே நாம் அவ்வளவு நம்பிக்கையுடன் (பகுத்தறிவுடனும்) இருக்கிறோமா?

ஒரு எடுத்துக்காட்டு, நமக்காக ஒருவர் எல்லாவேலையையும் செய்கிறார் எனவைத்துக்கொள்வோம், நமக்கு எதையுமே செய்யவேண்டிய அவசியமேயில்லையென்ற நிலையில் இருந்தால், நாம் அந்நிலையை ஒத்துக்கொள்வோமா?! கேட்கும்போது இனிமையாகத்தோன்றினாலும், நாம் கர்த்தத்துவம் என்றவொன்றுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறோம்!  இதில் இன்னொரு சிக்கலென்னனவென்றால், நமக்கு அந்த கர்த்தத்துவம் என்பது, சாதாரணமாய் கிடைத்தாலும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறோம், ஒரு துன்பம் வந்து, அது நம்மை துவைத்துக்காயப்பட்டப் பின்னர், மீண்டெழுந்து அதைக் கைப்பற்றவேண்டும் என்ற மனனிலையேப் பெரும்பாலும் இருப்பதுபோலும் தெரிகிறது.

மிக எளிமையான “வெற்றிக்கான முதற்படிதோல்வி” என்பதாகட்டும், ஆழ்ந்த புத்தரின் ஞானத்தையறிவதாகட்டும், இம்மனனிலையிலேயேதான் நாம் இருப்பதுபோலும் தெரிகிறது, இம்மனனிலை மிகவும் ஆச்சரியமானவொன்றல்லவா?!  நமக்குவேண்டியதொன்று, ஆனால், நாம் விருப்பப்படுவது முற்றிலும் எதிரானவொன்றைப்பெற்று அதில் சாதித்து நமக்குவேண்டியதை அடைவதுபோன்ற மனனிலை.

பெரும்பாலும், ஆழ்ந்த அறிவையெட்டிப்பிடிக்க முயலும்போது, சொந்தபந்தங்கள் காலைப்பிடித்து இழுப்பதை மனம் உடனே ஒத்துக்கொள்ளும் என்றால், நம்முடைய சொந்த அறிவும் அதைத்தடுத்து, எட்டவிடுவதில்லையென்பது நகைமுரண்,, அதை எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்றும் அறிந்துகொண்டால் சிறப்பாயிருக்கும்.

இன்னொரு எடுத்துக்காட்டாக, ஒருவேளை, எதோவொரு விசயத்தில் அதிசயத்தை எதிர்பார்க்கிறோமெனில், அதிசயம் நடந்தபின்னரும், நிசமாவா என்று புத்தி தீவிரமாகத் தெரிந்துகொள்ளமுயலும். ஒருவேளை என்னால் அதிசயத்தைக் கண்டுகொண்டே, அதிசயத்தின் காரணத்துக்கான (நாமறியாத ஒரு) பரிமாணத்தைப் புரிந்துகொள்ளமுடிவதற்கு என்னுடைய மூளையை அனுமதித்தால் மட்டுமே அதையெட்டமுடியும், அதற்கு நாம் கற்றவற்றை சற்று மறக்கவேண்டியிருக்கிறது, உதாரணத்துக்கு மந்திரத்தில் மாங்காய் விளையாது, காரணகாரியமில்லாத (அது உண்மையில் நாம் அறியமுடியாத) தற்செயல்விளைவுகள் என்பதுபோன்றவை.

ஆக அன்றையத்துன்பத்தைத்தாண்டி நாம் யோசிக்கிறோம் என்பதும், ஒரு நம்பிக்கை போலத்தானேயிருக்கும்,  ஏனெனில் நம்முடைய சொந்த அறிவே நம்மைத்தடுக்கிறது எனப் பார்த்தோம், மேலும் நமக்கு சுதந்திரமானப் பார்வையுண்டு என்று நம்புவதும் சற்றுயோசிக்கவேண்டியிருக்கிறது,  சமீபத்தைய ஆய்வொன்றில் பூனையினங்கள் தான்தோன்றித்தனமாய் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட வைரஸ்கள் எனக் குறிப்பிடப்படுகிறது,  மேலும் சில உளவியல் ஆய்வுகள் (மருத்துவப்புள்ளியியலையும் இதில் கணக்கில் கொள்ளவேண்டும்!) பூனையை வளர்ப்பவர்கள் சமூகவிலங்காக இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு எனக் கூறுகிறது.  பூனையைப் போலவேப் பூனைப்பிரியர்களூம் இருப்பதற்கு காரணம், அதே வைரஸாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.   இதில் நான் என்பது உண்மையில் அவரா, அல்லது அந்த வைரஸின் பின்னூட்டமா?!

சராசரி மனிதரின் நிலையிலேயே  மறந்தும் நினைத்தும் சிந்தித்தும் சிந்திக்காமலும் இருந்தால் எப்படியிருக்கும்?! பார்க்க கொஞ்சம் கிறுக்கு சாமியார் போலத் தெரியுமென நினைக்கிறேன். அதனாலேயே, இப்படிக்குறிப்பிட்டேன், அடியாழம் எட்டியபின்னர் இருப்பு என்பதே உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்.

நாகார்ச்சுனர் அவருடைய மூலமத்யமககாரிகாவில் இப்படி வினவுகிறார், வெறுமையைப்/emptiness பற்றிப்பேசும்போது, ஒன்றுமில்லாததிலிருந்து எப்படி ஒரு பொருள் தோன்றியிருக்கும், அப்படியானால், பொருட்களுங்கூட ஒன்றுமில்லாதவையா?! இதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு இயற்பியல் ஞானம் உதவியதென்றாலும், இதையெழுதுவதற்கு பொருட்களை ஒன்றுமில்லாதவகையாக யோசிப்பதற்கு, பொருள் அல்லது பொருளின் தன்மையென்றால் இன்னதுதான் என்ற அடிப்படைஞானத்தை நான் மறந்தால் மட்டுமே இப்படியோசித்திருக்க முடியும்.

மன்னிக்கவும் அண்ணன், நான்குவரிகளில் முடித்துவிடவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன், மீண்டும் பெரிதாகிவிட்டது. ஆனால், தங்களுடைய இருவரின் அறிவார்ந்த உரையாடலையும் அங்கில்லாமல் தவறவிட்டுவிட்டேனேயென்று நேற்று இப்பதிவைப்பார்த்ததும் யோசித்தேன், அப்படி நினைத்ததிலேயே பேச்சு வளர்ந்துவிட்டது என நினைக்கிறேன். தங்களிருவரின்/மற்ற தத்துவவியலாளர்கள் கருத்துக்களையும் அறிய விழைகிறேன்!