குழந்தையுடனொருக் கற்றல்

எங்கள் வீட்டிலேயே மூன்றுக் குழந்தைகள் எனக்கடுத்து வளரக் கண்டிருக்கிறேன், அதுவும் நல்ல வயதுவித்தியாசங்களுடன். தவிர, சுற்றி எப்பொழுதும் குழந்தைகள் இருக்கும் மாதிரியானதொரு சூழல். பக்கத்திலேயே உறவினர்கள். பெரும்பாலும் குழந்தைகள் வளரும் விதம் ஒரேமாதிரி தான் இருக்கும். செய்யும் சேட்டைகள், கற்கும் விதம், பெரியவர்கள்போல் அவர்களாக உருவகப்படுத்தும் விதம் இதுமாதிரி பல்வேறு விசயங்கள்..

இதில் என் அம்மா எங்களின் கடைத்தம்பி சரவணன் செய்த சேட்டைகளை அவர்களின் நாட்குறிப்பில் தினம் எழுதிவைக்கத் தொடங்கினார்கள், பின்னர், அது நாங்கள் நித்தம் செய்யும் சேட்டைகளையும் சேர்த்து எழுதுவதாகவும் அமைந்தது. எதுவரை எழுதினார் எனத் தெரியவில்லை. அதேபோல், என் இரண்டேமுக்கால் வயது மகனார் சிவதண்டீசுவரர் பற்றி அவ்வாறு எழுதலாம் எனத்தோன்றும், ஏனோ செய்வதில்லை.

குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்…

சற்றுநேரம் முன், ஒரு இழைக்கோட்பாட்டு (string theory) ஆய்வுக்கூட்ட உரையில், K3-பரப்பையும் (surface) R^4 இரீமன் பரப்பின் (R4 Riemann Surface) துண்டையும் இடவியலைக் (Topology) கொண்டு இணைத்து ஒரு படத்தை ஒரு ஆய்வாளர் விவரித்துக் கொண்டிருந்தார். என் இரண்டே முக்கால் வயது சிவதண்டீசர் அதைப் பார்த்துவிட்டு “என்னப்பா இது நுங்கா?” எனக் கேட்டதும் அட ஆமா எனத் தோன்றிற்று. அச்சிறு கண்களுக்கும் இடவியல் கண்ணோட்டம் அத்தனைத் தெளிவாக இருப்பதைக் காணமுடிகிறது! போனவாரத்தில் தான் நுங்கு என்பதை முதன்முறைப் பார்த்தான்!  

இழைக்கோட்பாட்டு ஆய்வுரைக்கு சற்றுமுன், என் மனைவி வேலைசெய்யும் ஆய்வுக் குழுவுக்கு யாரையோ நேர்கண்டு பேட்டிக் கண்டிருக்க, நாங்கள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம், இவன் திடீர் என்று “எனக்கு கத்தி வேண்டும், தண்ணீர்ப்பழம் நறுக்க…” என்று ஒரே ஆர்ப்பாட்டம்– மதியம் அவன் அழுகையை திசைதிருப்ப அப்படிச்செய்தனர் போல. நான் சிறுபிள்ளை கத்தியை எடுக்கக்கூடாது என.. உடனே அம்மாவின் துணைநாடி அம்மாவெனக் கத்திகொண்டே மனைவியின் அலுவல் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தான். அங்கே சூம் மீட்டிங்கில் அவள் இருப்பதைப் பார்த்துவிட்டு, கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு, தலையில் கையைவைத்து “ஐய்யோ.. ” என சத்தம்போட்டு அழ.. எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

கொழுந்தியாளின் பிள்ளைகள் வந்திருக்கின்றனர், அவர்களில் சிறியவன் விசுவேசன் “பெரியப்பா.. சிவதண்டீசு, சேட்டைபண்ணுகிறான்” என்றான், “சேட்டைப் பண்ணாதே” என்றும் கூறினான், சிவதண்டீசர் ஏதோ யோசித்துக் கொண்டே, அவன் செய்ததை அவனைப் பார்த்துக்கொண்டே செய்துகொண்டிருந்தான். எனக்கு சிவதண்டீசருக்கு விசுவேசன் சொன்னது புரியவில்லையோ என சந்தேகம். பெரும்பாலும் நேராகச் சொன்னால் உடனே சரிசெய்துவிடுவான். அதனால், “நீ சேட்டையென்று எதைச் சொல்கிறாயோ, அதை, அவனிடம் சொல்லி அதைச் செய்யாதே என சொல்” என்றேன். காலை வைத்து இடித்துக் கொண்டே ஏதோ விளையாடி இருப்பான் போல, அது விளையாட்டு மும்முரத்தில், அவனுக்கேத் தெரியவில்லை, விசுவேசன் “காலை வைத்து இடிக்காதே” என்றதும், சிவதண்டீசர் தள்ளிப்படுத்துவிட்டான். போதாதென்று, அண்ணனுக்கு ஒரு முத்தம் வேறு.. அண்ணனை துன்புறுத்திவிட்டானாம்..

குழந்தைகளின் செயல்பாடும் எண்ணமும் நேர்கோட்டில் எளிமையாக இருப்பதால், அவன் கற்றுக்கொள்வது வேகமாகவும் தெளிவாகவும் இருக்கிறது போலும். அதைவிட, நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்ற பேரில், மொத்தமாக உழட்டுவதை இன்னும் தெளிவாகக் காணவியலுகிறது.

வட்டாரமொழிவழக்கும் நுரைக்கும் நுரையின் இயக்கமும்!

சிறுவயதில் ஆர்வத்தை அள்ளியள்ளித்தரும் சிலவிசயங்களைச் சார்ந்து, இந்த ஆராய்ச்சியின்[1] சில அம்சங்கள் அமைந்ததால் என கவனத்தை மிகவும் ஈர்த்துவிட்டது!   அச்சிலவிசயங்கள்: சோப்பு நீரில் நுரைக்கும் விதம், நுரைத்த வாளியில் நுரைகளைப் பிரித்துவிட்டாலும் ஒன்றையொன்று கூடும் விதம், நீர்மம் பாயும் விதம், வெட்டிபோட்ட சிறு சிறுக்குழாய்களை இணைத்து, நீரோட்டத்தை உண்டுபண்ணி சுழிகளை உண்டுபண்ணுவது,  பின்னர் என்னைச்சுற்றிப்பேசப்பட்ட வட்டாரமொழிவழக்குகள்! இவையெல்லாவற்றையும் ஒன்றாகக்கூட்டி ஆய்வுசெய்திருக்கிறார் ஆய்வாளர்.

வட்டாரவழக்குகள்கூட பரவாயில்லை, ஒரு மாநிலத்திலிருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ இன்னொரு நாட்டிற்கு மாநிலத்திற்கு செல்லும்போது, சட்டென மொழிமாறுவது எப்படியிருக்கும் எனப் பார்க்க ஆசைகொண்டிருக்கிறேன். அவ்வாறு நிஜமாகவேக் காணநேரும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில் கூட, செர்மன் – நெதர்லாந்து எல்லையைக்கடக்கும் போது எப்படி சட்டென மொழிமாறுகிறதென்பதை வழக்கம்போல பார்த்துக்கொண்டேக் கடந்தேன். பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் முறைமை, கலாச்சாரப் பரிமாறுதல்கள் என எல்லாமும் யோசிக்க யோசிக்க சிக்கல்கள் கலந்த இனிமையாக இருக்கும் என்பது என் மனவோட்டம்!

ஒரு ஊரின்/மாநிலத்தின்/நாட்டின்எல்லைக்கோடு ஏதோவொரு வீட்டின் வழியாகப் போகுமாவென்பது எனக்கு சிறுவயதில் தோன்றியக்கேள்வி, இம்மாதிரியானக் கேள்வியை நிலஅளவைத்துறையில் வேலைசெய்த என் அப்பாவிடமும் அடிக்கடிக் கேட்பேன்.   என் அப்பாவும் சலிக்காமல் எப்படி (ஒரு இடத்தில்) நேரத்தை வரையறுக்கிறோம், எப்படி எல்லையை வரையறுக்கிறோம் என எதுவானாலும் சிறுபையனுக்கு புரியும் என்பது போலேயே விளக்குவார்கள், (abstract understanding?!) எனக்கும், பள்ளிக்கூடத்தில் வாத்தியார், ஆயிரம் அடியடித்து ஆயிரம் முறைசொன்னாலும் நினைவில் வாராத அளவுக்கான எனக்கு,  இம்மாதிரி புரியாத பரிபாசையில் பேசுவதுமட்டும், ஒரு மாதிரி சொல்மாறாமல் ஞாபகம் இருக்கிறது.  இருக்கட்டும், அப்படி எல்லைக்கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரிக்குங்கால், எல்லைக்கோட்டுக்கு அப்பக்கமும் இப்பக்கமும் தாண்டும் போதெல்லாம் என்ன மொழி பேசுவார்கள் என்பதெல்லாம், சிறுபிள்ளைத்தனமான ஆர்வங்களும் கேள்விகளும்!

 

மொழிகளில் உண்டாகும் திரிபையும் வட்டாரவழக்குகளிற்கிடையேயான வேறுபாட்டையும் ஒரு இயற்கை மாதிரிப்படிவமான (physical model) நீர்மத்தின் நுரைத்தல் பண்பைக் கொண்டு விளக்கவியலுமாவென (பரப்பிழுவிசை – ஆர்டர் பேராமீட்டர் மாதிரி கொள்ளலாமென நினைக்கிறேன் (?)), இந்தாய்வில் பேசியுள்ளார், ஆய்வாளர். இரண்டு நுரைக்கூட்டம் இருக்கிறதெனக் கொண்டால், அருகிலேயே இருந்தாலும், பரப்பிழுவிசையினால் மட்டும்,  அது ஒன்றையொன்றுக்கூடிவிடும் என சொல்லிவிடமுடியாது,  பள்ளி-வேதியியற்பியல், சோப்பிலிருந்து அயனிகள் உருவாகும் எனப்படித்தபோது, மின்னூட்டப்பண்பினாலும் ஏற்படுவதால் கூட இப்படியிருக்குமோவெனத் தோன்றும்.  இங்கு பரப்பிழுவிசை பண்பினால் நுரைக்கூடுவது போல வட்டாரவழக்கில் எப்படிமொழியானது பரிணமிக்கிறது என்றும், எப்படி சுற்றியுள்ள வழக்குகளையும் தன்னகத்தே உட்கொண்டு வளர்கிறதுஎனவும் இயற்பியல் மாதிரிகளைக் கொண்டு விளக்கியுள்ளார்.

 

கிட்டத்தட்ட மதுரை, தேனி, விருதுநகர், நெல்லைப்பக்கத்தின் உச்சரிப்பு விதத்தைக்கூட, இதன் (handwaving, qualitative)உதாரணமாகக் காண இயலும் எனத் தோன்றுகிறது.  என்னுடைய மாப்பிள்ளையொருவன், தேனிக்காரன், அவன் பேசும் வார்த்தைகளின் விகுதிகளில் தேனிவழக்கு நன்றாக ஒலிக்க்கும், (நானும் கிட்டத்தட்ட அவ்வாறுதான் பேசுவேன், ஆயினும் என்னுடையது சற்றுக்கலவையானது), உதாரணத்துக்கு
தேனி: என்னடா -> என்றியா (அதில் ‘றியா’ ஒலிப்பு மெலிதாக இருக்கும், என்றா) என ஒலிக்கும். அதே வார்த்தைக்கு மற்ற ஊர்களில்
விருதுநகர்/தூத்துக்குடி- என்னவே,
நெல்லை -> என்னலே,
சிவகங்கை -> என்னாஞ்ச (இருபாலருக்கும்).

மதுரையைச்சுற்றியுள்ள ஊர்களில் பேசப்படும் தமிழைப் புரிந்துகொள்ளவும், ஓரளவு மாறாத தொனியின்ஏற்ற இறக்கங்களும் விகற்பத்தை உண்டுபண்ணாது.  ஆனாலும், நெல்லைத்தமிழிலுள்ள ஏற்றவிறக்கங்கள் சற்று வேறுதிசையில் செல்வதை உணரலாம், அதிலும் கன்னியாகுமரி தமிழ் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுவதாகவே உணர்கிறேன். ஆயினும் விருதுநகரில், சுற்றியிருக்கும் மாவட்டங்களின் தமிழ் மொத்தமாகக் கலந்து, அனைத்துவிதமாகவும் பேசப்படுவதுபோல் உணர்ந்திருக்கிறேன். இவை என்னுடையத் தனிப்பட்டக் கருத்து, மொழியியல் வல்லுநர்களின் கருத்து எப்படியெனத் தெரியவில்லை. எனினும் இந்த ஆய்வு சொல்வதைக் காணும்போது, அப்படித்தானோவென்றேத் தோன்றுகிறது.

 

இதில் எனக்குத்தோன்றும் ஒரு Conjecture/கணிப்பு: (என் அப்பா எனக்குக்கூறியவை)
நான் முன்னர் குறிப்பிட்டது போல், இருவேறு நபர்களுக்கிடையே அறிவளவில் வேறுபாடு இருக்கும்போது, ஒருவர்கூறும் விசயத்தை, மற்றொருவர் புரிந்துகொள்ளும் விதத்தை abstract understanding என்று கொண்டால், அதையும் கூட நுரைப்பரப்பு ஒன்றையொன்றுசேர்ந்து பூசிமெழுகியமாதிரி (rounded, without edges) உருவாகும் வடிவம் போல் எனத் தோன்றுகிறது.  நம் முன் அனுபவங்களும்-பின் அறிவு பரிணமிக்கும் விதமும் நுரைபோன்ற மாதிரிவடிவாலேயே விளக்கப்படலாம் என நினைக்கிறேன்.
ஆய்வுக்கட்டுரையைப்படிக்கவிரும்புபவர்களுக்கு : (அது இலவசம், யார் வேண்டுமானாலும் தரவிறக்கலாம்)
https://journals.aps.org/prx/pdf/10.1103/PhysRevX.7.031008

வெகுசனத்தோருக்கான சேதியிணைப்பு:
https://phys.org/news/2017-07-physics-language-patterns.html

 

கற்றலும் சமூகமும் -3: கேள்விகளும் சான்றோர்குழாமும்- யார் ஆய்வாளர்?

என் வாழ்க்கைத்துணை அம்மு கூறினார், பேராசிரியர். க்ளௌஸ் சூல்டன் (Klaus Schulten) இறந்துவிட்டார் என.  எனக்கு யாரென்று உடனேத் தெரியவில்லை, அம்மு அவருடைய மூலக்கூறியக்கவியல் கோட்பாட்டை அவர்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்தியதாகக் கூறினார், பின்னர் தான் உணர்ந்தேன், குவாண்டவியற்பியலை உயிரிகளிடம்-உயிர்வேதியியற்பியல் (Biophysical chemistry), ஒளிச்சேர்க்கை (photosynthesis), மூலக்கூறியற்பியல் (molecular dyanmics and physics), மீத்திறன் கணியம் (High Performance Supercomputing)-காணும் முறைமையில், அவரும் ஒரு முன்னிலை ஆய்வாளர்.

சரி, ஒரு ஆய்வாளர் என்பார் எப்படியிருப்பார்?  ஆய்வாளருக்கு சிறுவயதில் கல்லூரியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல் இருப்பாரா?  1970கள் முடியப் பிறந்த, கிராமத்தின் சூழ்நிலையில் இருந்து வந்த என் போன்றவர்களுக்கு அடுத்து மிகப்படித்தவராகத் தெரிபவர் அவ்வூரில் உள்ள மருத்துவர்!  நன்றாகப் படித்தவர்கள் உண்மையில் எவ்வளவு தெளிவாக உள்ளார்கள்.  ஆயினும், எனக்கு இவ்விரு தொழில் பார்ப்பவர்களின் மீதும் எப்பொழுதும் கடுமையான வருத்தங்கள் இருந்ததுண்டு.

ஆசிரியப் பணியாற்றுபவர்கள் மாணவர்களைக் கேள்விகேட்கத் தூண்டுகிறார்களா?! நிசமாகவே, மாணவர்களுககு கல்வியென்றால் விவாதம் சார்ந்தது என்பதேக் காண்பிக்கப்படுவது இல்லை.

நோயாளியொருவர் ஒரு கேள்வியை மருத்துவரிடம் கேட்கும் போது அதற்கான பதில் எவ்வளவுத் தரப்படுகிறது அல்லது பதிலளிப்பதற்கு ஏற்ப கொஞ்சமாவது, மருத்துவர்கள் தயாராயிருக்கிறார்களா?

ஒரு கதை:
என் அப்பா ஒருமுறை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது,  அங்கிருந்த என் தங்கையிடம் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.  “என்ன? அவன் எந்திரித்துவிட்டானா” என ஒரு சத்தம் கேட்டது! அது அங்கு வந்த மருத்துவர்! கேட்டது என் அப்பாவை!!  அப்போது என் அப்பாவின் வயது 57, தமிழக அரசின் ஒரு பொறுப்பானப் பதவியில் அப்போது இருந்தார்கள். –பதவிக்குரிய மரியாதையென்பது நோக்கமல்ல– ஆயினும் மருத்துவர்களின் அதிகாரத்தோரணை. அங்கிருந்த மொத்தநாட்களும் இப்படித்தான் என் அப்பாவின் நான் எனும் அகங்காரத்தை உடைப்பதாகவேயிருந்திருக்கும். என்ன ஏது என்பதற்கு வழக்கம் போல் பதில் இல்லை.  எதேச்சதிகாரத்தில் வாழும் குடிமகனுக்குக் கூட ஏதோக் கொஞ்சம் மரியாதைக் கிடைக்கும் போல..

மற்றொரு கதை:
அம்முவின் அம்மா, கடந்த வருடம் தனியார் மருத்துவமனை இராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், பலக் குளறுபடிகளுக்கு மத்தியில், மருத்துவர்களை, என்ன பிரச்சினை என்று கேட்டதற்குக்கூட யாரும் பதிலளிக்கத் தயாராயில்லை.  மருத்துவர்களும் என்னப் பிரச்சினை என்பதை அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு பிரச்சினை.

ஒரே சோதனையைத் திரும்ப திரும்ப செய்துக் கட்டணத்தை வேறு ஏற்றிக் கொண்டே இருந்தார்கள்.   ஆனால் அங்கும் கேள்விக்கேட்டதற்கு சரியான பதிலில்லை. லட்சக்கணக்கில் செலவும் ஆகிவிட்டது, அப்பொழுது கூட கேட்பதற்கு உரிமையில்லையென்பதை சொல்லாமல் சொன்னார்கள்.  சரி மருத்துவர்கள் அவ்வாறெனில், வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பவர் முதற்கொண்டு கணக்கர் வரை, அவர்கள் கொடுக்கும் செலவினச்சிட்டையை வைத்துக் க்கொண்டு கேள்வியே கேட்காமல் கேட்கும் பணத்தைத் தரவேண்டும் என்கிறார்கள்!  கேட்டால், கடுமையாக இருக்கிறது அவர்களின் பதிலும் மற்ற செயல்பாடுகளும்.  யாரும் பதில்தரமாட்டார்கள் கேட்பதைத் தரவேண்டும்.  அப்படியானால் பதில்தரா மருத்துவர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு?
சரி, பதிலளிக்காத ஆசிரியர்களுக்கும் பதிலளிக்கவிரும்பா மருத்துவர்களுக்கும் என்ன பிரச்சினையாயிருக்கும்?  உனக்கு நான் சொன்னாலும் புரியாது என்பதா? அல்லது அடுத்த கேள்வி உன் வாயின்னுள்ளேயே அடக்கமாகிவிட வேண்டும் என்பதா?  இம்மனநிலை எங்கிருந்து வருகிறது?

இதில், நம்முடைய மக்களையும் குறைசொல்லாமல் இருக்கமுடியாது, எனக்கு இக்கேள்விக்கு பதில்தெரியாது என ஆசானோ, மருத்துவஞ்செய்யும் மருத்துவனோக்கூறினால், அவர்களை அடுத்து சுத்தமாக மதிப்பதில்லை.

ஆயினும், படித்தவர்கள் முற்றுமுதலாக அறிவதென்னவெனில், சாகும் தருவாயிலும் நான் ஏதும் அறிந்தேனில்லையென்பதாகத்தான் இருக்கும்.  சொல்லிக்கொடுக்கப்படும் அறிவியலும் தெரிந்த அறிவியிலும், அறிவியலின் ஒரு சிறுப்பகுதியே.

இன்னுமொரு கதை:
பகுத்தறிவை அறிவியல்தரும் எனும் போது அறிவியல் எப்படிப் போகுமோ அப்படிப் போய்த்தான் காணவேண்டும், எனக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, ஓரிடத்தில் நின்று கொண்டு, நான் பிடித்ததே சரியென்பது அறிவியலாளனின் போக்கு அல்ல, அது, ஒரு பக்கம் சார்ந்தக் கருத்தேயன்றி, உண்மையானத் தெளிவினையோ இயற்கையின் இயக்கத்தைப் பற்றிய அறிவையோத் தராது.  இன்று ஒரு விவாதத்தில், ஒரு மருத்துவரிடம் பேசும் போது இதுவே நிகழ்ந்தது,  குறிப்பிட்ட உணவுமுறை, பாடப்புத்தகம், குறிப்பிட்ட புள்ளியியல்முறை என்பதையும் தாண்டி, ஒரு போக்கு போய்க்கொண்டிருக்கிறதென்றால், அது என்னவெனக் காணவேண்டுமேயன்றி, நீ கூறுவதேத் தவறு என்பதும், எதிரில் பேசுபவரின் ஆய்வு அனுபவத்தின் அளவு எவ்வளவு என்பதையும் காணாமல் பிடித்தப்பிடியில் நிற்பதுவுமாக, “நீ பேசுவது தவறு, நான் பேசுவது மட்டுமே சரி” என்பதாக இருந்தது. அதே விவாதத்தில் வந்து கேள்விகள் கேட்ட உயிரியலாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கூட எனக்குக் கூறியப் பதிலே வந்தது.  ஒருவர் அவரை– மிகக்கடுமையாக, அனாவசியமாக — விமர்சித்திருந்தவிடத்தில் “நான் அறிவியல் பேசுகிறேன், நீ எதைப் பேசுகிறாய்” எனக்கேட்டிருந்தது மிகக்கடூரமான நகைமுரண்!!

இதில் பிரச்சினையென்னவெனில், பொதுவாகப் பேசுவோர்க்கும் விஞ்ஞானிகளுக்கும் தாங்கள் பேசும் போது தெரியும் வேறுபாட்டைக் கூட உணரவியலா அளவுக்கு இன்னொரு விஞ்ஞானம்பேசும் ஆளிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, அல்லது மற்ற எல்லோரும் மொண்ணையானவர்கள் என்ற பொதுக்கருத்தா எனவும் விளங்கவில்லை.

பகுத்தறிவு என்பதும் யாதெனவும் விளங்கவில்லை, எதையோவொன்றைப் பகுத்தறிவு எனப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  பேசிக்கொண்டேயிருப்பதால் மட்டுமே, எப்படி அது பகுத்தறிவாகப் பரிமளிக்கும் என நினைக்கிறார்கள் எனவும் விளங்கவில்லை.  அறிவியலின் சில விசயங்களைப் பேசினாலே பகுத்தறிவா?? அறிவியில் என்பது யாதொரு விசயத்தையும் அக்கக்காகக் கழற்றி, என் விருப்பம் நான் கண்டறிந்தது, பழங்கருத்து, புதுக்கருத்து, நோபல்பரிசு வாங்கியவர் கூறியது, என்பதையும் தாண்டியதாக இருந்தால் மட்டுமே அறிவியல்.

அதே போல், பொதுவெளியில் ஜிஎம் விதைகள் போன்ற விசயங்களை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதே அதன் வேலை.  தயவுசெய்து பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், சமூக மாற்றம் என்ற ஒன்று வேண்டுமெனில் அதற்காக உழையுங்கள்.  முடியவில்லையெனில், அரைகுறை அறிவியல் பேசுவதையும் பாரம்பரியம் பேசுவதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, வழக்கம் போல, ‘தென்னைமரத்தைக் கொண்டுவந்து பசுவோடு ஏன் கட்டினேன்’ எனில், சூல்டனைப் பற்றி ஆரம்பித்ததற்கு காரணம், கோட்பாட்டு இயற்பியலரான அவர், அதையும் தாண்டி உயிரியல், நேனோ உயிர்நுட்பம் சார்ந்து யோசித்ததற்கு கேள்விகளும் பாரம்பரிய அறிவியல் மற்றும் அறிவைத்தாண்டியத் தேடலுந்தான் காரணமாக இருக்கிறது. இங்கு பழங்கால அறிவியல் மாதிரி ஒன்றைப் பேசிக்கொண்டே, ஆனால், அறிவியலின் உயிர்நாடியை அடக்கிவிடும் வேலைகளைத் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.  தொழில்முறையில்லா அறிவியலாளர்கள் எனில் தங்களின் உண்மைநிலையைப்  புரிந்துகொண்டும் அறிவித்தும் அறிவியலை அணுகுவதே நலம்!

இதன் வரிசையில் முன்னால் எழுதப்பட்டவை:

  1. கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்
  2. கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்
  3. ஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்!
  4. மூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு