குழந்தையுடனொருக் கற்றல்

எங்கள் வீட்டிலேயே மூன்றுக் குழந்தைகள் எனக்கடுத்து வளரக் கண்டிருக்கிறேன், அதுவும் நல்ல வயதுவித்தியாசங்களுடன். தவிர, சுற்றி எப்பொழுதும் குழந்தைகள் இருக்கும் மாதிரியானதொரு சூழல். பக்கத்திலேயே உறவினர்கள். பெரும்பாலும் குழந்தைகள் வளரும் விதம் ஒரேமாதிரி தான் இருக்கும். செய்யும் சேட்டைகள், கற்கும் விதம், பெரியவர்கள்போல் அவர்களாக உருவகப்படுத்தும் விதம் இதுமாதிரி பல்வேறு விசயங்கள்..

இதில் என் அம்மா எங்களின் கடைத்தம்பி சரவணன் செய்த சேட்டைகளை அவர்களின் நாட்குறிப்பில் தினம் எழுதிவைக்கத் தொடங்கினார்கள், பின்னர், அது நாங்கள் நித்தம் செய்யும் சேட்டைகளையும் சேர்த்து எழுதுவதாகவும் அமைந்தது. எதுவரை எழுதினார் எனத் தெரியவில்லை. அதேபோல், என் இரண்டேமுக்கால் வயது மகனார் சிவதண்டீசுவரர் பற்றி அவ்வாறு எழுதலாம் எனத்தோன்றும், ஏனோ செய்வதில்லை.

குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்…

சற்றுநேரம் முன், ஒரு இழைக்கோட்பாட்டு (string theory) ஆய்வுக்கூட்ட உரையில், K3-பரப்பையும் (surface) R^4 இரீமன் பரப்பின் (R4 Riemann Surface) துண்டையும் இடவியலைக் (Topology) கொண்டு இணைத்து ஒரு படத்தை ஒரு ஆய்வாளர் விவரித்துக் கொண்டிருந்தார். என் இரண்டே முக்கால் வயது சிவதண்டீசர் அதைப் பார்த்துவிட்டு “என்னப்பா இது நுங்கா?” எனக் கேட்டதும் அட ஆமா எனத் தோன்றிற்று. அச்சிறு கண்களுக்கும் இடவியல் கண்ணோட்டம் அத்தனைத் தெளிவாக இருப்பதைக் காணமுடிகிறது! போனவாரத்தில் தான் நுங்கு என்பதை முதன்முறைப் பார்த்தான்!  

இழைக்கோட்பாட்டு ஆய்வுரைக்கு சற்றுமுன், என் மனைவி வேலைசெய்யும் ஆய்வுக் குழுவுக்கு யாரையோ நேர்கண்டு பேட்டிக் கண்டிருக்க, நாங்கள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம், இவன் திடீர் என்று “எனக்கு கத்தி வேண்டும், தண்ணீர்ப்பழம் நறுக்க…” என்று ஒரே ஆர்ப்பாட்டம்– மதியம் அவன் அழுகையை திசைதிருப்ப அப்படிச்செய்தனர் போல. நான் சிறுபிள்ளை கத்தியை எடுக்கக்கூடாது என.. உடனே அம்மாவின் துணைநாடி அம்மாவெனக் கத்திகொண்டே மனைவியின் அலுவல் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தான். அங்கே சூம் மீட்டிங்கில் அவள் இருப்பதைப் பார்த்துவிட்டு, கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு, தலையில் கையைவைத்து “ஐய்யோ.. ” என சத்தம்போட்டு அழ.. எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

கொழுந்தியாளின் பிள்ளைகள் வந்திருக்கின்றனர், அவர்களில் சிறியவன் விசுவேசன் “பெரியப்பா.. சிவதண்டீசு, சேட்டைபண்ணுகிறான்” என்றான், “சேட்டைப் பண்ணாதே” என்றும் கூறினான், சிவதண்டீசர் ஏதோ யோசித்துக் கொண்டே, அவன் செய்ததை அவனைப் பார்த்துக்கொண்டே செய்துகொண்டிருந்தான். எனக்கு சிவதண்டீசருக்கு விசுவேசன் சொன்னது புரியவில்லையோ என சந்தேகம். பெரும்பாலும் நேராகச் சொன்னால் உடனே சரிசெய்துவிடுவான். அதனால், “நீ சேட்டையென்று எதைச் சொல்கிறாயோ, அதை, அவனிடம் சொல்லி அதைச் செய்யாதே என சொல்” என்றேன். காலை வைத்து இடித்துக் கொண்டே ஏதோ விளையாடி இருப்பான் போல, அது விளையாட்டு மும்முரத்தில், அவனுக்கேத் தெரியவில்லை, விசுவேசன் “காலை வைத்து இடிக்காதே” என்றதும், சிவதண்டீசர் தள்ளிப்படுத்துவிட்டான். போதாதென்று, அண்ணனுக்கு ஒரு முத்தம் வேறு.. அண்ணனை துன்புறுத்திவிட்டானாம்..

குழந்தைகளின் செயல்பாடும் எண்ணமும் நேர்கோட்டில் எளிமையாக இருப்பதால், அவன் கற்றுக்கொள்வது வேகமாகவும் தெளிவாகவும் இருக்கிறது போலும். அதைவிட, நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்ற பேரில், மொத்தமாக உழட்டுவதை இன்னும் தெளிவாகக் காணவியலுகிறது.

பழைய அறிவியற்கூறுகளை நவீன அறிவியலர் காண்கையில்…

பதினொன்றாம் வகுப்பு NCERT பாடங்களை பல்வேறு அறிஞர்களைக்கொண்டு மொழிமாற்றம் செய்துவருகிறோம், இதை வெறும் மொழிமாற்றமாக இல்லாமல், அனுபவங்களில் பெற்றதையும் உள்ளிட்டு எழுதுகிறோம். அதில், தற்சமயம், நானும் வரிசைத்தொடர்களைப்/sequences and series பற்றி ஒரு பாடம் எழுதிவருகிறேன். அதில் அவ்வப்போது இந்திய அறிஞர்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். அனேகமாக, கீழ்க்காணும் இச்சேதியும் அவ்வரிசையில் உவப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

எதேச்சையாக, நேற்று ஒரு இயற்பியலர் நண்பர் இரகு மகாசன், மாதவன் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்திய கணிதவியலர் மாதவர் கேரளத்தில் 14/15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், கேரளக்கணித மற்றும் வானியற்பள்ளியை நிறுவியவர். அப்பள்ளியில் அல்லது சிந்தனைக்கோட்டத்தில் நுண்கணிதம் உருவானதாக— அதாவது, இலெய்பினிச்சு, நியூட்டனுக்கும் 300/200 வருடங்களுக்கும் முந்தியே — தரவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவை அவ்வப்போது கணிதப்பனுவல்களில் அங்கீகரிக்கப்படுவதையும் காணவியலுகிறது.

இரகு குறிப்பிட்டிருந்தது, \pi/4 = 1 - 1/3 + 1/5 -1/7 + \ldots என்பதை மாதவரும் அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ஆதலால் இத்தொடர் மாதவர்-இலெய்பினிச்சு தொடர் என்று அறியப்படுகிறதாம்.

கணிதத்தில், யாதொரு முடிவுறாவட்டம் வகையிடக்கூடிய (இடைவெளியிலா, வழவழப்பான/smooth, continuous) வளைக்கோட்டுச் சார்பையும், அச்சார்பின் மாறியின் வகையீட்டு வரிசைகளை 0,1,2,3, … முடிவிலி தடவைகள், a எனும் புள்ளியில் வகையிட்டுப் பெறும் வகைக்கெழுக்களின் முடிவிலாக்கூட்டுத்தொகையாக விரித்து எழுதிவிடமுடியும். இது ஒரு பொதுவான சார்புக்கு எழுதப்பட்ட இடெய்லர் தொடர் எனலாம்.

f(x-a) = \sum_{n = 0 }^{\infty}\frac{f^{n}(a) (x-a)^n }{ n!} இதில் (n) என்பது வகையீட்டுவரிசையின் எண். முன்பேக் குறிப்பிட்டதுபோல், இது பொதுவான சார்பிற்கு எழுதப்பட்டது.

மாதவர் இதே மாதிரியான அடுக்குத்தொடரை முக்கோணச்சார்புகளுக்கு சைன், கோசைன், நேர்மாறு-டான் சார்புகளுக்கு சூத்திரம் பாடியிருக்கிறார், அப்பாடலின் விளக்கம் இந்த அடுக்குத்தொடர்களாக விரிகிறது.

இச்சார்புகளுக்கானத் தொடர்கள் மாதவரின் பிற்காலத்தில் மேலைத்தேய அறிவியலர்களான நியூட்டன், இலெய்பினிச்சு, கிரிகோரி ஆகியோரால் தனித்தனியேக் கண்டறியப்பட்டது. இத்தொடர்கள், அண்மைக்காலங்களில், மாதவா-நியூட்டன், மாதவா-இலெய்பினிச்சு, மாதவா-கிரிகோரி என மாதவருக்கான அங்கீகாரத்தோடு பெயர்பெற்று விளங்குகின்றன.

ஆயினும், மிகவும் புகழ்பெற்ற இளம் கோட்பாட்டியற்பியலரான சுவரத் இராஜூ, இவ்வங்கீகாரங்கள் வேறுவழியில்லாமல் தரப்படுகின்றன, மேலும் இன்னும் பல இந்திய, ஆப்பிரிக்க, பெர்சிய பழங்கால கணித அறிவியலாய்வுகள் கிரேக்கத்துள் திணிக்கப்பட்டு அதன் ஆரம்பத்தை மறைத்து கிரேக்கவழிவந்ததாகக் குறிப்பிட முயல்வதாகக் கூறுகிறார்.

பிதாகோரசின் தேற்றத்தின் மாற்று/பொதுவடிவான பெர்மா (Fermat)வின் தேற்றம் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

a^n + b^n = c^n , இச்சமன்பாட்டில் n>2 க்கு சரியான a, b, c எனும் எண்கள் அமையாது. என்பது பெர்மாவின் ஊகமாக (conjecture) 350 வருடங்களுக்கும் மேல் அறியப்ப்பட்டிருந்தது , பின்னர் ஆன்ரூ வைல்சு இக்கணிப்பை சரியென நிரூபித்தார்.

சைமன் சிங் அவருடைய நூலில் பெர்மாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் சீண்டலுக்குப் பெயர்போன அரசு ஊழியர் என குறிப்பிடுகிறார். அதுவும் ஆங்கிலேயக் கணிதவியலர்களை வம்புக்கிழுப்பதில் மிக அலாதியான இன்பம் கண்டதாகவும் குறிப்பிட்டிருப்பார், அவர்தம் பெர்மாவின் கடைசித்தேற்றம் நூலில்! பெர்மா தனது கண்டுபிடிப்புகளை பிரசுரிப்பதை ஒருபொருட்டாக எண்ணியதே இல்லை, அவருடைய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அவருடைய கடிதத்தொடர்பாடலிலேயே இருந்து அறியப்பட்டது. பெர்மாவின் கடைசித்தேற்றம் கூட அவர் இறந்து 30 வருடங்களுக்கு அப்புறமேத் தெரிந்ததாம்.

இதேமாதிரியான மற்றொரு கணக்கு பெல்லின் சமன்பாடு என்று அறியப்படும் a^2 - n b^2 =1 சமன்பாட்டின் தீர்வானது பெர்மாவால் யாரிடமோக் கேட்கப்பட்டிருந்தது போல் தெரிகிறது. இக்கணக்கின் விடை மிகவும் அரிதான மீப்பெரும் எண்களைக் கொண்டது a = 1766319049, b = 226153980, n = 61 .

இதே கணக்கை இந்திய வானியலர் கணிதவியலர் பாசுகரர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவிழ்த்ததாக/தீர்த்ததாகத் தெரிகிறது. ஆக இவ்வளவு குறிப்பிட்டத்தீர்வைக் கொண்டிருக்கும் ஒரு சமன்பாட்டை பெர்மா எப்படியோ அறிந்திருக்கலாம், ஆனால், அவர் பாசுகரரை மேற்கோளிடாமல் தவிர்த்திருக்கிறார் என ஐரோப்பிய வரலாற்றாளர்கள் குறிப்பிடுவதாக சுவரத் இராஜூ குறிக்கிறார். தற்பொழுது இச்சமன்பாடு பெல்லின் சமன்பாடு (Pell’s equation) என சம்பந்தமில்லாமல் யாரோவொருவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. நுண்ணரசியல்கள், உயர்த்திப்பிடித்தல் எனப் பல்வேறு வீணானக் காரணிகள் பல அறிவியல்விசயங்களையும் உழப்பிவிட்டுவிடுகிறது.

மனித இனம் அல்லது நம் முன்னோர்கள், தான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் தத்தம் சூழ்நிலையை உணர்ந்தும், அதை சமாளித்தும் இருந்ததாலேயே நாம் இன்று உயிரோடிருக்கின்றோம். ஆக அறிவியல் என்பது நம்மைப் பொருத்தவரை மிக இயற்கையானது. எது அறிவியல் என்பது கலாச்சாரத்தையும் நவீன அறிவியற்போக்கின்படியும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியெண்ணமும் நுணுங்கி ஆய்ந்துத்தேர்வதும் அறிவியலை வளர்த்தெடுக்கும். இதை கூறுதற்கான அவசியம், பழம்பெருமை வேண்டாம், ஆனால் பழையக் கண்டுபிடிப்புகளை பிறர் அறிய விளக்குதல் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்கே. இன மொழி பண்பாட்டு உயர்வுதாழ்ச்சி சொல்லாது, அறிவை அறிவாகக் காண்போம்.

பீல்ட்சு மெடல் வாங்கிய பேரா. மஞ்சுள் பார்கவ் இந்திய கணிதவியலர்களைப் பற்றிப் பேசிய ஒரு விரிவுரையைக் காணலாம். https://www.youtube.com/watch?v=EcjHccvahHk

கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

புல்வாமா தொடர்ந்த நிகழ்வுகள் – ஒரு சாதாரணனின் பார்வை

(நேற்று எழுதியது) இந்திய விமானங்கள் பாகிசுதான் எல்லைக்குள் சென்று அடித்த இச்சூழ்நிலையில்,  கருத்தைக் கூறி ஏதும் செய்யவியலாது. இந்நேரத்தில், முரட்டடி அடித்ததால், அவர்களுக்கும் இதேமாதிரியான சூழ்நிலையை நாம் உருவாக்கிக்கொகொடுத்துவிட்டோம் என்பதை உணரவேண்டும், அதன் விளைவால், எல்லாவற்றுக்கும் அணியமாய் இருக்கவேண்டும்.  அவர்கள் நாட்டிலும் மக்கள்-அவர்தம் விருப்பம், அவர்களைத் திருப்திப்படுத்துதலுக்கான அரசியல் என கொடுக்கல்வாங்கல் கணக்குகள் உண்டென்பதையும் நாம் உணர்ந்தாலே போரைப் பற்றி நினைக்கவேமாட்டோம்.

விஞ்ஞானிகள் பெரும்பாலானோர் போருக்கு ஆதரவளிப்பதில்லை, விஞ்ஞான வளர்ச்சி உலகப்போர்களின் போதே அசுரத்தனமாக இருந்தது, ஆனால் அது மானுடத்துக்கு ஏற்படுத்தியப் பாதிப்பு அதைவிட அசுரத்தனமானது.  எனக்கும் எல்லைகள், போர்களில் விருப்பமில்லையெனினும், அடித்த தீவிரவாத அமைப்பு,  இவ்வளவு தீர்க்கத்தை உணர்ந்தே இந்தியவீரர்களின் மேல் தாக்குதல் நடத்தியதாவெனத் தெரியவில்லை– அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் பெரியக் கருத்திருந்திருக்கும் எனத்தோன்றவுமில்லை.   மேலும், பதிலுக்கு நாமும் சண்டைக்கிழுத்தப் பின்னர், இதில் பேசி ஏதும் ஆகப்போவதுமில்லை.

இருப்பினும், இந்த காசுமீரத்தின் மீதானக் கருத்தும், ஐக்கியதேசங்களின் நாடான இந்தியத்தின் மீதானக் கருத்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையில் மாறுபடும் என்பதை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன். இவ்வளவு ஏன், இந்தியப்பழங்குடியினர் காட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான, உச்சநீதிமன்றத்தின் நேற்றுவந்தத் தீர்ப்பைக் கவனியுங்கள்.  இந்தியர்களான நாமே தான், இந்தியப் பழங்குடிகளான அவர்களை அவர்களின் இடத்திலிருப்பதற்குரிய உரிமையை மறுக்கிறோம்,  அதே நேரம் இன்று ஆக்கிரக்கப்பட்ட-காசுமீரத்தில் அடித்ததை,  இறந்த இந்திய வீரர்களுக்காகப் பழிவாங்கும் தாக்குதல் என்கிறோம். ஆக, நாம் யாருக்காகத் தான் போராடுகிறோம்? தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினால் துயரம் என்பது, பலவருடப்பிரச்சினை, இதற்கும் சரியானத் தீர்வுக்கு வழியில்லை.

ஐஐடி, ஐஐஎஸ்சி காலங்களில் வெவ்வேறுவகையான தேசிய, கம்யூனிச குழுமங்களுடன் வெவ்வேறுவகைகளில் தொடர்புடைய நண்பர்களுடன் எப்போதும் கருத்துகளைப் பகிர்ந்துவந்திருக்கிறேன். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், அவர்தம் கருத்துகளையும் அனுபவங்களையும் முன்வைக்கும்போது, அவர்கள் வருந்திக்கூறும் இராசரீக வழிமுறைகள் கேட்பதற்குக் கூட மிகவும் உவப்பானதாக இருந்ததில்லை.

அதே நேரத்தில்-இடத்தில், எனக்கு குவாண்ட இயற்பியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் தேசுமுக் போன்றோர்களின் காசுமீர முயற்சிகளையும் கண்டிருக்கிறேன். காசுமீரம் ஏன் இந்தியாவுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க பாராளுமன்றம் மூலம், அவர் எடுத்த முயற்சிகள். மேலும், பேராசிரியர் அனிதா போசு (நேதாஜி அவர்களின் மகள் – அவர் ஒரு செர்மானியர்) போன்றோரைக் கொண்டு மாநாடு அமைத்து, தேசியம்சார்–பெரும்பாலும் காசுமீரம் சார்ந்த– விவாதங்களை அரங்கேற்றியது என எனக்குத் தெரிந்தவைசில. இதனால், அவருக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல்கள் இருந்ததாகவும் கூறுவர்.

இம்மாதிரி ஒரே இடத்திலுள்ள மக்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதும், அதனால் விளையும் போராட்டங்களும், அவரவர் தரப்பு நியாயங்களும் கோரிக்கைகளும் என இவையெல்லாம் ஒருபக்கமென்றால், இவற்றையெல்லாம், எப்பொழுதும் தீர்க்கவியலாப் பிரச்சினை போலவே வைத்திருப்பதைக் காணும் போது, இவையெல்லாம் நம் வீடுகளில் ஏற்படும் உறவினர்களுக்கிடையேயானப் பிரச்சினைகள் போல் தீர்க்கவே முடியாத் தன்மையவையோ எனத் தோன்றும்.

வடகிழக்குமாநில நண்பர்களின் கருத்தையொத்த காசுமீர நண்பர்களின் ஒருங்கிணைந்த இந்தியதேசம் சார்ந்த பார்வையைக் கேட்கும்போது இந்தியம், தேசியவுணர்வு என்பதெல்லாம், துயர் அனுபவிப்பவர்களுக்கு வேறுமாதிரியானது என்பதெல்லாம் எனக்கு விளங்கியது, ஏன் நமக்கே, ஈழமக்களின் நிலை, மீனவர்களின் நிலையைக் கண்டால் குறைந்தபட்சம் பதறவாவது செய்கிறது.  இங்கு இவையெல்லாம் அரசியல் சார்ந்த விசயம் என்பதால், இதற்குத் தீர்வு என்பது சற்றுக்கடினமானது. அதேநேரத்தில், நமக்கே ஏதாவது ஒருதலைப்பட்டத் தீர்வை நோக்கித்தான் நகரமுடியும் என்பதைப்போல் தான் நிலைமையுள்ளது.

உதாரணத்துக்கு, நமக்குக் கற்றுத்தரப்பட்ட தேசியமானது நமக்கு காசுமீரம் வேண்டும் என்று சொல்லும்; நம்முடையத் தமிழுணர்வு நமக்கு ஈழம் வேண்டும் என்றும் சொல்லும்.  ஈழவிடுதலையும், காசுமீரத்துமக்கள் விரும்பும் இந்திய-பாகிசுதான் தலையீடற்ற சுதந்திரமும் ஒரேமாதிரியானவை, அது மிகுதியான காசுமீரத்து மக்களின் நிலைப்பாடும் கூட.  அப்படிக் காண்கையில் நம்முடைய பெரும்பாலான (தமிழர்களின்) உள்ளக்கிடக்கையான இவ்விருவிசயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது என்பதெல்லாம், கொஞ்சம் யோசித்தாலே விளங்கிவிடும்.

போரும் அதன் தாக்கமும், தமிழ்நாட்டுக்கு கடந்த 100 ஆண்டுகளில் பெரிதாக இருந்ததில்லை, இரண்டாம் உலகப்போரின்போது, எம்டன் (Emden) கப்பல் வீசிய குண்டு/கள் கூட எவ்விதப்பாதிப்பையும் உருவாக்கவில்லை. ஆக, நமக்கு போரின் தாக்கம் நேரிடைப் பாதிப்பை உருவாக்கவில்லை, ஈழப்போரிலும் நம்மால் உணர்ச்சிவசப்படமுடிந்ததேத் தவிர, எவ்விதத்திலும் தமிழ்மக்கள் ஒருசேர ஈழவர்களுக்கு உதவவோ, ஆதரவு தரவோக் கூட முடியவில்லை.

தீவிரவாதத்துக்கு எதிரானத் தாக்குதல் என்று இன்றையப் பதிலடிக்குக் கூறுவதும், நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரை அழிக்கலாம் என்பது மாதிரி மற்ற உள்நாட்டுப்பிரச்சினைகளில் கூறுவதும், வெவ்வேறுதரப்பட்ட மக்களின் பார்வையைப் பொறுத்தது.  இருப்பினும், போரைப்பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பார்வையில்லாதவர்கள் (குறிப்பாக, எவ்விதத்திலும் போரைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள்), விட்டேற்றியாக போரைப்பற்றிப்பேசுதலும், சுற்றியிருப்பவர்களைத் தியாகம் செய்யத் தூண்டிவிடுதலுமாக நடப்பதுபோல் தெரிகிறது. தன்னால் முடிந்தததை தியாகம் செய்கிறேன் என்றுவேண்டுமானால் கூறினால் பரவாயில்லை, போரையும் உயிரிழப்பையும் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல் பேசுவது நம் போன்ற பண்பட்ட சமூகத்துக்கு நல்லதில்லை. சமூகம் என்றொரு அமைப்பே, நாம் எல்லோரும் சமவுரிமையோடு, நன்றாக வாழவேண்டும் என்பதற்கு தான் உருவாக்கிவைத்திருக்கிறோம். ஆனால், எல்லாம் வெவ்வேறுவகைகளில் சென்றுகொண்டிருக்கிறது. சரியானவற்றுக்கு சரியானபடி குரலெழுப்பினாலே, நடப்பதில்லையென்பது வருத்தத்திற்குரியது.

ம்ஹூம் என பெருமூச்செறிந்து… எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.

இன்று: இரு நாடுகளும் ஒவ்வொன்றையும் குற்றஞ்சாட்டி இருபக்கமும் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. இப்படித்தான், போரென்றால் எல்லாப்பக்கமும் களேபரங்கள் நிகழவே செய்யும், இதை பேச்சுவார்த்தைகளால் சரிசெய்யமுடியாது என நினைப்பவர்களுக்கு, போரினாலும் சரிசெய்யமுடியாது என்று ஒத்துக்கொள்ளமுடிவதில்லை,  எல்லோரும் காலில் சுடு எண்ணெயை ஊற்றிக்கொண்டு பரபரவென இருக்கவேண்டும் என நினைப்பவர்களாகவேத் தோன்றுகிறது.

சமூகம் வளர, வித்தியாசங்களும் வேறுபாடுகளும் ஏதோவொருவகையில் இருக்கவேண்டும் என்பது, திரும்பத் திரும்ப நிரூபணம் ஆவதுபோல் தோன்றுகிறது.

பொருளற்றவாழ்க்கை / nihilism – ஒரு எளிய வெள்ளோட்டம்

பொருளில்லாத் தத்துவத்தின்/nihilism மூலம் அன்றாடவாழ்வைக் காணுங்கால் சராசரி உணர்வுநிலைத்தாண்டிய முழுமையுணர்வை எப்படிக்காணலாம் என்பதையறிய விழைந்ததால் உண்டானது இக்கட்டுரை.

1. உள்ளுணர்ந்து ஒருவர் இயங்குகிறாரோ இல்லையோ, பொதுவாக, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய உள்ளம் மகிழ்வாகவோ துன்பமாகவோ, இல்லை, எந்தவுணர்வுநிலையையும் சாராமலோக் கூட இருக்கலாம்.

2. அல்லது இறந்தும் விடலாம்

3. அவரின் இருப்பும் இறப்பும், உணர்வுப்பூர்வமாக மற்றோருக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஏதும் தேங்குவதில்லை, தங்குவதுமில்லையென்று எல்லாரும் உணர்ந்திருந்தாலும், ஒரு உந்துதலைப் பெற்றிருப்பதனாலேயே வாழ்க்கையை வாழ்கிறோம்.

4அ. ஆயினும் அவ்வகையான உந்துதல் பெரும்பாலும் அர்த்தமற்றது அல்லது தொலைநோக்குப் பார்வையில்லாது, அந்தந்த நேரத்துக்குத் தேவைக்காக செயல்படுவது.

5. இதில், பிரச்சினையென்னவெனில், இவற்றையெல்லாம் கற்றோர் கல்லாதார் எந்த நிலையில் இருந்தாலும், ஒரே மாதிரியான, படிவத்திற்குள்ளேயே சிக்குண்டிருக்கிறோம்.

6. சில படிவங்கள் கவித்துவமானவை (artisitic interpretations மெய்ஞானப் புலம்பல் போல), சில பொதுவோட்டத்தில் இருப்பவை (சொந்தபந்தங்களிடம் புலம்புவது). எப்படியிருப்பினும், திரும்பவும் முதலாம் கருத்திலிருந்தே தொடர்ந்து ஓடும்.

7. இவ்வகையில் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

8. இடாய்ச்சு/(David Deutsch, a quantum physicist) அவர்கள் கூறியதாக சேது (@Sethu Subbar)க் (https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&reply_comment_id=1834432536638687&comment_tracking=%7B%22tn%22%3A%22R%2321%22%7D) குறிப்பிட்டிருந்தது போல், மொத்த சூரியக்குடும்பமும், பேருணர்வுப் பெற்று சத்யயுகம் போல் இருந்தாலும், இதே போன்றநிலையிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

9. இப்படியெல்லாம் பொருளற்றதாக இருப்பதனாலேயே, எதன்மீதும் பற்றற்று அன்பாக இருக்க வாய்ப்பு உண்டு. இடாய்ச்சுமுறையில் பேருணர்வு கொண்டு இயங்குவதாக இருந்தாலும் அன்பையுணராத் தன்மை சமூகத்தில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

(விட்கன்சுடைன்/Ludwig Wittgenstein போல ட்ரேக்டடஸ் போல கூற்றுவகையில் எழுதத் தலைப்பட்டேன். குழப்பங்களைத் தவிர்க்க, விளக்கித் தொடர்கிறேன்.)

இதற்கெல்லாம் மொத்த அர்த்தந்தான் என்ன? ஊழ்வினை போன்றவற்றை நம்பினாலும், நம் தேவைக்கேற்ப நடப்பில் அவரவர் வசதிக்கு வாழும் முறைமையும் உள்ளது. முழுமையுணர்வையெட்ட பலவழிகள் என்பதும் ஒருவழியென்பதும் அவரவரின் வரையறைகளைப் பொருத்தது. இங்குள்ளப் பெரும்பாலான பிரச்சினைகளுக்கானக் காரணம், வழிகள் இருக்கிறதா இல்லையா என்பதும், நாம் செய்வது சரிதானா என்ற ஒப்புமைக் குழப்பத்தினாலும் தான்.

ஓர்ந்த ஓர்நிலையென்றுக் (union) கூறிக்கொண்டே, ஈர்நிலைகளையோ (நான், மற்றவர்கள்), பல்நிலைகளையோ (நான், சார்ந்தோர், சாராதார்) தேவைக்கேற்பப் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கு பல்நிலைகள் என்பது, நான் என்பதற்கும் நான்-தவிர்த்த மற்றவர்களுக்கும் இடையேயானத் தொடர்பு. செய்யவேண்டியதற்கும், செய்யவியலாதநிலைகளுக்கும் இடையேயானத் தொடர்புகளையும் குறிக்கிறேன். இவ்வளவு விவாதம் நடைபெறும்போது, நாம் நம்முடைய உணர்வுகளை உருக்கி வார்க்கக்கூடிய வார்த்தையைத்தான் தேடுகிறோமேயொழிய அந்த ஓருணர்வைப் பெறுவதில்லை.

அதுபாட்டுக்கு இயங்குமொன்றுக்கு விளக்கங்கள் தந்து அதன் வடிவத்தைப் பெறமுயல்கிறோம்.

இதில் புறத்தில் உள்ளதா, அகத்தில் உள்ளதா என்பதும், இக்குழப்பங்களினால், இன்னும் பிரச்சினைகளையுண்டாக்கும் என்பதும் என் எண்ணம். வெளியெல்லாம் இழைகளாக/strings, ஆற்றற்றுடிப்புகளாக/vibrations இருக்கும் என இயற்பியல் கூறுகிறது. அவற்றைக் காணவும் இயலவில்லை, அதேநேரம் உணரவும் (lhc experiments) இயலவில்லை, ஆனால் அது இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

இருப்பதற்குவாய்ப்பேயில்லையெனினும், நானொரு தொடர்-பருப்பொருளில்லையென்பதையும் (continuous body) இவ்வுடலத்திற்கென ஒரு அணுக்கட்டமைப்பும், அக்கட்டமைப்பில் உள்ள அணுக்களுக்கிடையே இடைவெளியுள்ளது என்பதையும், ஓரளவு இயற்பியல் விளக்கமுடியும். அப்படியானால், ஒரு சல்லடைபோல், இந்த நேர-இடப்புள்ளிகளில் இயங்கித்திரிகிறேன். அதாவது, அணுக்களுக்குள்ளும் புறமும் வெளி/space உள்ளது. ஆக, நாம் நம்மை முப்பரிமாண சல்லடையெனலாம். (நம்மில், அதிகப்பரிமாணங்கள் மற்ற அடிப்படைத்துகள்களுக்குத் தெரியலாம், புரியவில்லையெனில் விட்டுவிடலாம்)

ஒருப்புள்ளியிலிருந்து இன்னொருப்புள்ளிக்கு நகரும் ஊடுருவக்கூடியக் கதிர்கள், நாமாக மாறி, பின் வெளியேறி வேறொன்றாக வெளியேறவும் இயலும், இதனாலேயே, எனக்கு எல்லோரும் ஒருவகையில் சம்பந்தப்படலாம் எனத் தோன்றும். என்னுடலில் நுழைந்து மற்றோர் உடலில் நுழைந்து வெளியேறும், இழைகளோ/strings அல்லது துகளோ/particles இவ்வாறுத் தொடர்பை உண்டாக்கலாம், அந்தத் தொடர்பு அதிகநேரமோ, குறைந்தநேரமோ இருக்கலாம். இதனாலேயேக் கூட, ஒரு வேளை, இடாய்ச்சு அப்படியொரு முடிவுக்கும் கூட வந்திருக்கலாம். (அல்லது, உயிர்பொறியியல், சைபர்னெடிக் உயிரினம் சார்ந்த ஆய்வுத்துறை வளர்ச்சியினால் கூட கூறியிருக்கலாம்)

அதாவது, ஆரம்பத்தில் இருந்தே, ஒரு விசயத்தைக்கூறிவருகிறேன், வைரஸ், வயிற்றிலுள்ள நுண்ணுயிர் பாதிப்பினால், ஏற்படும் உயிரியல் கொந்துதல்/hacking, வேதிக்கொந்துதல், வேறுவகையானத் தொழிற்நுட்ப கொந்துதல் மூலம் எந்நேரமும் நாம் நாமாக இருப்பதாக நினைக்கிறோம், செய்கிறோம், ஆனால், அது உண்மையில் நாமாக இல்லாமலும் இருக்கலாம் என்பது.

ஆக, நான் என்று யோசித்திருப்பதை சரிவர செய்கிறோமா என்பதே நமக்குத் தெரியவில்லையெனில். எது சரியாக இருக்கமுடியும்.

நாம் முழுமையுணர்வுபெறுவதற்கு பற்பல வழிகளையமைத்திருக்கிறோம், ஆனால், அவ்வழிகள் பெரும்பாலானோர்க்கு எதையும் காண்பிப்பதில்லை. நாம் முழுமையுணர்வுக்கான வழியில் இருக்கிறோம் என்பதும் இல்லையென்பதும், இயல்பில் ஒப்புமைப்படுத்துதலில் வருவது. மேலும், ஒருவேளை முழுமையுணர்வு பெறுவதற்கான வழிமுறைகளாக நாம் கொண்டிருக்கும் வழிமுறைகளைக் கடந்த வேறொன்றாகவும் இருக்கலாம்.

தவிர, எனக்கு முழுமையுணர்வு பெற்றவர்கள் ( புத்தர், சித்தர்கள்) எதையும் பெரிதாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுமில்லை. வாழ்வின் போக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது சரியானதாகத் தான் இருக்கிறது என்பதே அவர்களின் பதிலாக இருக்கும் எனத் தோன்றும், அவ்வாறே இதுவரை இருந்திருக்கிறது. சொடுக்கிடும் நேரத்தில் நம்மாலேயே பலவேலைகள் செய்யவியலும் போது, வல்லமையுள்ளவர்களால் இன்னும் பெரிதாகவே செய்யவியலும் என்பது, எந்தவொரு பாமரனின் கருத்தாகவேயிருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை, இல்லையெனில், மொத்தமாக, எல்லோருக்கும் மோட்சகதி அருளியிருக்கலாம்.

ஆக, சமூக வளர்ச்சி அதுபாட்டுக்குப் போகும், மாந்த உளப்போக்கு சீரடைவதும் அதுபாட்டுக்கு நடைபெறும், இந்த இடைவெளியில் நாம் தத்துவங்கள் பழகுவதெல்லாம், உளப்போக்கு மென்மேலும் சீராவதற்கும் சமூகத்தின் ஓட்டத்திற்கும்/நடைமுறைத் தேவைக்கும் இடையேயான இடைவெளியை சரிசெய்வதற்கென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, ஞானியருக்கு சரி தவறென்று ஏதுமில்லையென்பர். அதையொரு சமூகம் அல்லது சாதாரண மனிதர் ஒப்புக்கொள்ளமுடியாது, சரி தவறு பகுக்கப்படவேண்டியது முக்கியமானதாகவேக் கருதுவர்.

அதாவது, ஒரு சமூகம் தீங்குவிளைவிப்போருக்கென்று சட்டங்களை இயற்றியிருக்கும். அதற்கு நல்லதகெட்டதைத் தேர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும். அது சாதாரண மக்களுக்கும், ஒரு கொலைகாரருக்கும்/பெருஞ்சண்டைக்காரருக்கும் இடையேயான உளப்போக்கின் வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு, பெருஞ்சண்டைக்காரரினால், உண்டாகக்கூடிய கேடுகளிலிருந்துக் காப்பதற்கு விதியமைக்கும்.

விதிகளைப் படைத்ததனாலேயும், அதை எல்லோருக்கும் உணர்த்துவதன்மூலமும் சமூகம் சரியாக ஆகிறதா?! விதிகளை சரிவரக்கடைப்பிடித்தால் எல்லாம் சரியாகுமா?? ஒரு வேளை, சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் துறவியானால் எல்லாம் சரியாகுமா? இரண்டிலும் வழிதவறி அர்த்தமற்றதாகும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே, வாழும்வரையில் செய்யவேண்டியவை என நமக்கு உணர்த்தப்பட்டதையும், அந்நேரத்துக்கு ஆகவேண்டியதையுமேச் செய்கிறோம். அதாவது இயல்புநிலையிலேயே இருக்கிறோம்.

முழுமையுணர்வு வாய்த்திருக்கவேண்டியதொரு தருணத்தை ஒருவர் தவறவிட்டுவிட்டார் எனக் கொண்டால், அதற்கான தீர்வுதான் என்ன? கிரியா யோகம் போன்று மனத்தையும் உடலையும் தீட்டிவைத்தும், முழுமையுணர்வை எட்டாதக் கதைகளைக் கேட்டிருக்கிறோம் தானே. ஆதலால், கடவுளர் பத்தியென்பது எல்லாம், இவ்வளவுக் குழப்பங்களின் நடுவே நடத்தவேண்டியதை நடத்துவதற்கென்பது என் எண்ணம்.

அது சரியான நேரத்தில் தூங்காமல் சுகம்பெறுவதாகக்கூட இருக்கலாம், அல்லது வேறெதாவதாகவும் இருக்கலாம். இப்படி இருநிலைகளில்–அதாவது, 1. எனக்கு வழிமுறைத் தெரியும், 2. ஆனால் இன்னும் போய்ச்சேரவேண்டிய இடத்திற்குச் சென்றடையவில்லையென்று உணர்வது –இவ்விருநிலைகளினால் ஏற்படும், உடல்-உளத்தாக்குதல்களும் (affecting psychosomatically) பெரும்விளைவை உண்டுபண்ணக்கூடியவையென யோகசூத்திரங்கள் சொல்கின்றன.

இருப்பின் புதிருக்கானத் தீர்வுகள், மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலாமுறைகளிலும், அதாவது கட்டமைக்கப்பட்டவழிகளில் இல்லாமல், கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் பொருளற்றதாக ஆகும்போது எல்லாம் எளிதானதாகவும் ஆகும், அதாவது, தேவையற்றதைச் செய்வதால் முழுமையுணர்வுத் தருணம் தவிர்க்கப்படலாம், அது முழுமையுணர்விற்கானப் பயிற்சியென்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அது அதனாலேயே வாய்க்காமல் போகலாம்.

ஆக, சாதாரணமாக இருப்பதும், முழுமையுணர்வை அருளலாம். கடைசியாக, முழுமையுணர்வும் ஒன்றுமில்லாததாகப் பொருளற்றதாக இருக்கலாம்.

குறுக்கியற்பார்வை, அறிவியல் நடைமுறைகள்…

https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&comment_tracking=%7B%22tn%22%3A%22R%22%7D  விவாதத் தொடர்ச்சி..

இயற்பியலின் ஆய்வுவரையறையென்று பொதுவாக, நாம் குறிப்பிடுவது போல், அதுவொரு எல்லைக்குள் அலகிடப்பட்டதல்ல, ஆய்வுநடைமுறையில்! இங்கே குழந்தைகளுக்கான ஊடாடலுக்காக இதை சேது எழுதியிருப்பதால், வரையறைக் குளறுபடிகளுண்டாகா வண்ணம் இருக்க இதையிங்கேக் குறிப்பிடுகிறேன்.

நாம் உணர்ந்த இயற்பியலேக்கூட, சமூக, உள, உயிரியற்றளங்களில் நடக்கும் இயக்கங்களையும் காண்பிக்கிறது. ஆனால், இன்னும் சமன்பாடுகளால் உணர்த்தமுடியாத நிகழ்வுகளை விளக்கமுடியாவிட்டாலும், அவற்றை, நாம் அறிந்த அறிவியலோடு நிற்பதில்லை. குறுக்கியப்பார்வையானாலும், அது படிப்படியாக விசாரங்களின் மூலம் வளரும். அறிவியல்/இயற்பியல் விசாரங்கள் இருவகையானவை, 1. சோதனையின் மூலம் அறிவது. 2. கோட்பாட்டுமுறைமையின், அறிவியற்கட்டமைப்பின் மூலம். கோட்பாட்டுமுறைமை, புதிய இயற்பியலுக்கும் கணிதத்துக்கும்–அதாவது, நிகழ்கால இயற்பியலையும், கணிதத்தையும் தாண்டும் முயற்சிகள்– வழிவகுக்கும்.

இவ்வாறு சோதனையின் மூலம் காணவியலாத, புதிதாகப் படைத்தவற்றை, இயற்பியல், கணித கட்டமைப்பின்/foundation of physics and maths, வாதங்களின் மூலமும், தெரிந்த, தெரியாதக்கோட்பாடுகளின் மூலமும் அலசி ஆராய்ந்து வழிகளை உருவாக்குவார்கள். தக்கது நிற்கும், சிலசமயம் ஒரு புதியக் கோட்பாட்டை வெளியிட்டும் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, வருடாவருடம் இப்படி பல வருகின்றது! ஆயினும் திடீரென, சில கோட்பாடுகள், 50, 60 வருடத்திற்கப்புறம் ஏதாவது புதியக் கோட்பாட்டின் மூலமாகவோ அல்லது சோதனையின் மூலமோ பெரிதாக வளர்ந்து நிற்கும்.

இப்படி ஒருவர் செயல்பாடாக இல்லாமல், பலரின் செயல்முறையாக சமூகவளர்ச்சிக்காக வளர்ந்தாலும், நிறைய ஆய்வாளர்கள், உள்ளுக்குள் ஒரு யோகியைப் போல் கேள்விகள்கேட்டுத் தேடினாலும், வெளிக்காட்டிக்கொள்வதில்லை, பலநேரங்களில்ன தேடலுக்கும், கண்டுபிடித்ததற்கும் இடைவெளி சிறிதாக இருந்தாலும், நிரூபணம் தெளிவானால் தான் வெளியிடுவதென்பது, அவர்களின் வழக்கமாகக் கொள்வதால், வெளியில் பெரிதாகப் பேசுவதில்லையென்பதாகத் தான் நான் காண்கிறேன். சில சமயங்களில் வேறொருவர் அதேமாதிரியானத் தேடலைக் கொண்டிருந்தால், அவர்களின் வெளியிடாப் பரிமாணங்கள் வெளிவரும்.

உணர்வுநிலையாலானக் கலைஞர்கள், உணர்ந்ததை வெளியிடுவதற்கான வரையறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை. யோகிகள் அதையும் தாண்டியநிலையிலுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது என் அனுமானம். யோகியர்நிலைபோன்றவொன்றின் மூலம், இயற்பியலை அதாவது, இயற்கையைக் காணுங்கால், இன்னும் நிறைவான அறிவைப் பெறவியலும் என்பதும் என் அனுமானம். அதை நோக்கி தெரிந்த ஆய்வாளர்கள் பலர் நகர்கிறார்கள்.

இது எப்பொழுது வெவ்வேறுவகைப்பட்டத் துறைசார்வல்லுநர்கள் அனைவரையும், எல்லாவகையான அறிவியலையும் பிணைக்க ஆரம்பித்தோமோ, அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒருவகையில் இதுவொரு சிறப்பான செயல்பாடுதான், தத்துவவாதிகள் இடையில் புறந்தள்ளப்பட்டார்கள் என உணரவும் ஆரம்பித்திருக்கிறோம், இப்படி உணர்வதே மிகப்பெரிய மாற்றந்தான்.

இதுதான் வழியென்று ஆன்மீகவழியில் கூட ஒருவழியில்லையென்கிறார்கள். சிலர் உள்ளில் நீள்கிறார்கள், சிலர் கர்மத்திலுறைகிறார்கள். இது ஆன்மீக-அறிவியல் விவாதம் எனக்கொண்டாலும் ஆன்மீகத்திற்குள்ளேயே முரண்படுகிறார்கள் (இதில் தனியாகப் பேசவேண்டியது நிறைய உண்டென்றாலும்), தன்னையறிதல் போன்றவை எனக்கு பிரச்சினையில்லை. நானொரு காளியம்மையின் பத்தன் தான். ஆக, முழுமையானவுணர்வு போன்றவற்றை, இப்படி எல்லாவற்றையும் சார்ந்த ஆய்வை உருவாக்கும்போது, பொதுசனப்படுத்த முடியலாம், தங்களின் வரையறைகளும் அலகுகளும் மாறலாம்! David Bohm-JK கிருட்டிணமூர்த்தி கூட்டுவிவாதங்களும் கூட இதுபோன்றதொரு ஒரு உந்துதல் தான். ஆக நீங்கள் விரும்புவதுபோல் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆயினும், இது போதாது. எல்லாவழியிலும் அறிந்தால் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் ஆகும்! பார்க்கலாம்! 

Reductionism and emergence – a naive argument

I do not understand why biologists consider physicists’ perception about the reality is so indifferent!!  I feel it is rather an opinionated point of view.

In a discussion, a friend quoted a work of Stuart Kauffman and his stance on the complexity theory and reductionist point of view.

Actually, we get to the reductionist results due to insufficiency and inability of available ‘computing’ resources, thus leads to the incompleteness in presenting the reality. So, the reduced reality give at least some understanding about the minimal system and interactions. It might not give the better description, however, not reducing it to the physical aspects of the system might not be possible. For example, assuming a biological cell as a function or functional, would not be ‘complete’ without the implications of theoretical chemistry, which incorporates the most of quantum&classical and statistical physics. It depends on what level they want to work out.

We try to describe the physical reality of natural phenomena, by adding complexity/ more details. Moreover, the macroscopic emergence and the critical phenomena occurred in the collection of atoms and molecules can not be ignored, could possibly infer a difference in the emergent behavior. In the “lovers on the banks of Seine” example, even an unintentional teasing (i.e., a word) can trigger and spoil the mood, ambience, etc. When one of the couple is, subjectively tolerant, this interaction would be still pleasant.

If one of them can be possibly affected by a trigger–pain,illness or anything affecting his/her ‘behavioral equilibrium’, same system-trigger composition would affect their state of mind.

If one of them is a practicing-yogi, the same composition of the interacting parts(system-environment-trigger) and the state of mind would not be affected.

I think the present state of the emergence problem is just due to the insufficient resources which we consider and most importantly how much of the reality we are interested in. When the couple wants to be happy, they just do the things which please them the most.

But if I want to be a trend-setter, I need to change the very basic ideas of the norms set. I could go deeper and deeper by adding additional levels and change the things in a completely newer level.

Sometimes, the natural process might be redundant or may contain voluminously unnecessary information. Therefore, picking the limits depend on which level I seek.

எ.ச. ஜார்ஜ் சுதர்சன்

எ. ச. ஜார்ஜ் சுதர்சன் சகக்காலத்தில் வாழ்ந்த மிகமுக்கியமான இந்திய இயற்பியலர். என்னை மிகவும் ஆழ்ந்துபாதித்த இயற்பியலர்களுள் இவரும் முக்கியமானவர். இன்று அவர் இறைத்திருவடிகளுடன் கலந்துவிட்டார்.

அவருடைய ஆய்வுப் பரம்பரையில் நேரடியாக வந்தவனாக என்னைக் கொள்ளவியலாது, ஆயினும் நான் சிறிதுகாலம் இணைந்து வேலைசெய்த இந்திய வானியற்பியற்கழகத்தின் பேராசிரியர் சிவராம் அவர்களின் ஆசிரியர் சுதர்சன் அவர்கள்.

(நோபல் பரிசு வழங்கப்பெற்ற) வலுவிலா இடைவினை/weak interaction, குவாண்டம் சீனோ விளைவு/Zeno effect, நோபல் பரிசு வழங்கப்பெற்ற சுதர்சன்-க்ளௌபர்/Sudarshan-Glauber representation குவாண்ட ஒளியியல் வழிமுறை, டாக்கியான்/tachyon எனப்படும் ஒளியினும் அதிதிசைவேகத்துகள், குவாண்ட நேரியல், ஆற்றல் தேய்வியல்/decoherence, dissipation போன்ற புலங்களில் ஆய்வை மேற்கொண்டும், மேற்குறிப்பிட்டப் பலமுறைகளையும் புதிதாக இயற்பியலில் கண்டறிந்தும் தந்தவர்.

இவரின் கண்டுபிடிப்புகளுக்காக ஒன்பதுமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பெற்றவர் எனக்கூறப்படுகிறது. ஆயினும் ஒருமுறைகூட வழங்கப்படவில்லை. கடைசியாக 2005ஆம் வருடம்- சுதர்சன் -க்ளௌபர் வழிமுறைக்காக, க்ளௌபருக்கு நோபல் பரிசு வழங்கிவிட்டு, இவரை விட்டதையடுத்து, இவரே நோபல் குழுமத்துக்கு மடலெழுதி தன் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

வேத, வேதாந்தங்கள் போன்ற இந்தியத் தத்துவங்களில் மிகவும் ஆழ்ந்து இயற்பியலை/உண்மையைத்தேடியவர். உலகளாவிய ஆய்வில் புகழ்மிக்கவராய்த் திகழ்ந்த அதேநேரம், இந்திய இயற்பியல் ஆய்விலும், தத்துவார்த்தத் தேடலுக்கும் மிகுந்தப் பங்கினை ஆற்றியவர்.

மறுகல்வியமைப்பு – 0 இன்றையக் கல்விச்சூழல், “நீட்” …

மாற்று கல்வியமைப்புகளுக்கான சூழல்கள் அமைகிற நேரமாக எனக்குத்தோன்றுகிறது.  இருக்கும் பள்ளிக் கல்லூரிக் கல்விநடைமுறைகளும் அதன்பின்னான அரசியல்களூம், மிகவும் உறுத்துகிறது. போதாதற்கு நீட் தேர்வின் விளைவுகள்.

போனவருடமும், இவ்வருடமும் நீட் தேர்வின் அடாவடிகள், மாணவர்களுக்கு தேர்வுபயத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருப்பதைக் காணமுடிகிறது. விட்டால் மாணவர்களின் மூளையையும் வெளியேவைத்துவிட்டு எழுதச்சொல்வார்கள் போல, தேர்வில் தவறு நடவாமல் பார்த்துக்கொள்வது முக்கியமே, அதற்காக அரக்கத்தனமாக, எல்லாவற்றையும் கழற்றி, யாருடைய மாண்பை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் இம்முட்டாள்கள் எனத் தெரியவில்லை. ஆகமொத்தம், மாணாக்கர்களை அலைக்கழித்ததிலிருந்து மதுரையில் இந்தியில் தேர்வுத்தாள் கொடுத்தது வரை, நீட் மடமைத்தனமும் பேய்த்தனமான நிராகரிப்பும் அதற்கான அரசியல் சமாளிப்புமாக வளர்கிறது.

*****

இன்று ஒருப்பெண்ணின் நுழைவுச்சீட்டில், தேர்வு நடக்குமிடமாக இரு கல்லூரிகள் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அதில் ஒன்றுக்கு அந்தப் பெண்ணாகவே செல்ல, தேர்வெழுதுவோர்ப்பட்டியலில் பெயரில்லையென மறுத்திருக்கிறார்கள், அங்கிருந்த மற்றப் பெற்றோர்கள் விசயமறிந்து போராட்டம் செய்திருக்கிறார்கள். இதில் மிகவும் கோபமூட்டும்படியாக, தேர்வு உயரலுவலர், இது மாதிரி பிரச்சினை வேறெங்கும் இது வரை, எங்கள் பார்வைக்குவரவில்லை, ஆதலால் இம்மாணவி போலிநுழைவுச்சீட்டு கொண்டுவந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்கள் எந்த நம்பிக்கையில் தவறே நடக்க வாய்ப்பில்லையெனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வையெழுதுமாறு வந்ததற்கு, கணினிக்குளறுபடி எனக்கூறும் இவர்கள், இம்மாதிரி ஊடகத்தில் விட்டேற்றியாக அந்த பெண் மேல் போலிநுழைவுச்சீட்டுக் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால், இவர்களால், காவல்நிலையத்தில் இதன்பேரில் புகார் சார்த்தமுடியுமா?

ஒருவேளை, அந்தப் பெண், இவர் பேரில், தன்பெயரைக் கெடுத்துவிட்டாரென ஒரு வழக்கைப்போட்டால் நன்றாக இருக்கும். வாய்க்குவந்ததைப் பேசக்கொஞ்சமேனும் தயங்குவார்கள்.

*****

சேது தன் தமிழ்க்கல்விக் கட்டுரைகளின் மூலம் (https://sethusubbar.wordpress.com/2018/05/04/tamileducation2/) அடுத்தடுத்த கல்விமுறை மாற்றம் சார்ந்த உவப்பானப் பார்வையை வைத்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தினார், அது சார்ந்து யோசித்துவரும் இவ்வேளையில், இன்றையக் கல்விச்சூழலின் சமூகவோட்டத்தின் எண்ணங்களை வெளியிலிருந்து எட்டிப்பார்க்க எத்தனிக்கிறேன்.

பெரும்பாலும் அவரவர் வாழ்க்கையனுபவங்களில் இருந்தே விசயங்களைக் கற்று, அதன்வழி தீர்வுகளையமைப்போம். ஆயினும் பிறருடையப் பார்வையைப் பெறுவதன்மூலம் இன்னும் நலமான சமூகத்தை உருவாக்கமுடியும். ஆனால், நிகழ்காலக் கல்லூரி பள்ளி நடைமுறைகளும், கல்விக்கற்பிக்கும் ஆசிரியர்களின் சிரத்தையின்மையும், கல்விநிலையங்களின் அரசியலும் கொள்ளை இலாபம் வைத்து கல்வியைவிற்கும் முறைமைகளும் மிகுந்த அழுத்தம் உண்டாக்குகின்றன.

எனக்கிருந்த பள்ளி-கல்லூரி அனுபவத்தில், சிறுவயதிலேயே நான் வளர்ந்தப்பின்னர் என்னுடையப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவில்லையென்று சொன்னால் பரவாயில்லையென்றே அடிக்கடி யோசிப்பேன், இத்தனைக்கும், அப்படியொன்றும் மோசமான அனுபவங்களை நான் பெற்றிருக்கவில்லை.

பின்னர், சமூக அறிவியலின் தத்துவங்களையும் ஆட்டக்கோட்பாட்டையும் படித்தப்பின்னர், அந்த எண்ணம் கொஞ்சம் சீர்பட்டது என்றாலும் இருக்கும் கல்வியமைப்புகள் மேல் பெரியப்பிடிப்பு இல்லை,  அதனாலேயே, நான் ஒரு வெள்ளோட்ட ஆய்வுநிறுவனத்தை (Institute for Natural Philosophy/அறிவியற்குடில்) ஆரம்பித்தேன், அதில் நண்பர்களையிணைத்து, சில திட்டங்களை செயல்படுத்தினேன், பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லையெனினும், ஆய்வாளர்களின் செயல்பாடுகள் குறித்த திட்டவரையறையைக் கொண்டுசெல்லும்விதம் என ஓரளவுக் கற்றுக்கொண்டேன், அந்நேரத்தில் நாங்கள் அனைவரும் ஆய்வின் தொடக்கத்தில் இருந்தோம், ஒரு 4, 5 ஆண்டுகள் சிறப்பாகப் போனது, பிறகு பெரிதாக ஆரம்பிப்பதற்கு நேரம் வரும்போது ஆரம்பிக்கலாம் என நிறுத்தப்பட்டது.   அதுபற்றி பிறகுப் பேசுகிறேன்.

ஆனால், தற்காலத்திய கல்வித்துறையின் நடவடிக்கைகளைக் கண்டால், இனிவரும் சமூகத்தில் எல்லோரையும் என்னைப்போல் யோசிக்க வைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

நிர்மலா தேவி போன்ற பேராசிரியர்கள் இம்மாதிரியான சமூகப்போட்டிமனப்பான்மைகளில் இருந்தே தங்கள் இலாபங்களை அறுவடைசெய்கின்றனர், ஒருவேளை சிக்கவைக்கப்பட்டிருந்தாலும், அதன் மூலம் அங்கிருந்துதான். ஆக அவர்கள் அப்படி இயங்குவதற்குக் காரணம், ஏதோவொருவழியைப் பிடித்துக்கொண்டு அதன்வழி சென்றால்தான் சமூகம் முன்னேறும் என்றொன்றை நாம் நினைத்துவைத்திருப்பதே. மற்றவர்களை எல்லாம் ஏறிமிதித்து அவரவர் சாம்ராச்சியத்தை நிறுவிக்கொடிநாட்டுவதற்கு எதற்கு சமூகம்? தனித்த மிருகமாய் வாழ்ந்தே சாகலாம். சமூகமாய் வாழ்வதாய் காட்டிக்கொண்டு, அதன் தத்துவத்துக்கு மாறாகப் படிநிலைகளை/strata உருவாக்குவதைத்தான் எல்லோரும் செய்கிறோம், வேண்டுவோர்க்கு வேண்டுங்கல்வியென, கல்வியின் அழகையும் சிறப்பையும், பெருந்தேடலையும் உருவாக்காமல், சம்பாத்தியத்திற்கான வேலையில்கூட கற்றக்கல்விப் பயன்படாத சமூகத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்.

இதில் ஆச்சரியத்தக்கவகையில், நம் சமூகச்சான்றோரின் திறன் வியக்கவைப்பது. நம் சமூகத்திலும் தொழில்முறையில்லா சான்றோரின்/amateurs திறன், திறன்மிகுசான்றோரின்/professionals திறனுக்கு ஒப்பான தீரத்தைக்கொண்டிருப்பதை வியந்து நோக்கியிருக்கிறேன். ஆனால், சமூகத்தின் அரசை, அரசியலை உருவாக்குந்திறன் இவர்களுக்கு இல்லாதது அல்லது, பெரும்பாலும் தரப்படாதது வியப்பு. ஒருவேளை அப்படி உருவாயினும் அங்கீகரிக்கப்பட்ட வலதுசாரி குண்டர்களான “ஹூண்டா/Junta”வின் கைப்பிடிதனில் மாறுவதை வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஒரு பரந்துபட்டக் கருத்துக்கேட்போ அல்லது அதற்கான வழிகாட்டலோ இல்லாமல், இறுக்கிப்பிடிக்கப்பட்ட வலியுறுத்தல் மூலம் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. அணுமின்னிலையத்துக்கே அஞ்சாது, கருத்துக்கேட்பு நடத்தாது, அதுவமைந்த ஊருக்கு அவசரநிலைப்பாடங்களையும் சொல்லித்தராச் சமூகத்தில், சட்டத்தின்வழியாக அல்லது குறைந்தபட்சம் எண்ணவோட்டங்களின் வழியாகவாவது சிச்சிறு கிளர்ச்சிகளைச் செய்தாலாவது  நம் சமூகத்துக்கு ஆகும் என நம்புவோமாக.

#நூலகத்தொடர் – 7: மூலமத்யமககாரிகா, Tractatus Logico-Philosophicus

Day 7 :
Mulamadyamakakarika – Acharya Nagarjuna
Tractatus Logico-Philosophicus – Ludwig Wittgenstein
Philosophical investigations: Ludwig Wittgenstein

இன்றைய நூல்கள்: பௌத்தமுனிவர் நாகார்ச்சுனர் எழுதிய மூலமத்தியமிககாரிகா மற்றும் தத்துவ-கணிதஏரண வல்லுனர்/logician லுட்விக் விட்கன்ஸ்டைன் வெளியிட்ட ஒரே புத்தகம், பின்னர் அவரின் இறப்பினுக்குப்பின்னர், இரண்டாம் நூல் அவருடைய மற்ற ஆய்வுவேலைகளில் இருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டன.

இறுக்கமுமல்லாது, தளர்வுமில்லாது நடுவழி செல்லும் பௌத்தவழியில் வந்த மாமுனியான நாகார்ச்சுனர், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். வெறுமையைப் பெரிதும் பேசியவர். வெறுமையில் இருந்து எப்படி இவ்வளவும் வந்தது என்பதைப் பேசியிருப்பார். அண்டம் பிறந்து வளர்ந்ததைப் போலவே இருப்பதுபோல், இது அடிக்கடித் தோன்றும். இது முற்றிலும் எனதுக் கருத்தானாலும், குவாண்டவியல் வழியாக இவரின் தத்துவத்தைக் காணவும், அது சார்ந்து உழைக்கவும் எனது விருப்பம்.

விட்கன்ஸ்டைனின் Tractatus Logico-Philosophicus/ஏரண ஆய்வுநூலைக் காணும்போதெல்லாம், அவரும் நாகார்ச்சுனர் பேசியது போல பேசியிருப்பதாலேயே இவற்றைக் கலந்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன்! ஆயினும் விட்கன்ஸ்டைன் பொருண்மைவாத ஏரணங்களிலேயே இருப்பது என்வரையிலான அனுபவம். எல்லோருக்கும் விட்கனஸ்டைனை அவருடைய ஏரண-மெய்யட்டவணை/truth table மூலமாகவும், வாத்து-முயல் தோற்றமயக்கப் படம்/duckrabbit illusion மூலமும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு, அவரே மெய்யட்டவணைமாதிரியான ஏரணவாதங்களை முதலில் பயன்படுத்தியவர். தனது இரண்டாவது நூலில், தான் எழுதிய முதலாம் நூலில் ஏற்பட்ட விவாதங்களில் உள்ளப் பலக்குறிப்புகளை, அவரே விமர்சித்திருப்பார். இவரது நூல்களில், மொழியின் வடிவம், சொற்பொருளியல்/semantics, விளையாட்டுப்புதிர்கள், ஏரண கணிதம் ஆகியவற்றைப் பெரும்பாலும் பேசியிருக்கிறார்.

எனக்குப் பிடித்த மற்றத்தத்துவவியலாளர்கள் நூல்களைப் பற்றியும் பேச ஆசை. தர்மகீர்த்தி, இரஸ்ஸல்/Betrand Russell, டெ கார்ட்/Rene Descartes, பாப்பர்/Karl Popper ஆகியோரின் தத்துவங்களைப்பற்றியும் நம்மூர் நூல்களான விவேக சம்ஹிதை, உபநிடதங்கள் போன்ற தத்துவங்களைப்பற்றியும் வேறொரு சமயத்தில் பார்க்கலாம்!

#நூலகத்தொடர்

No automatic alt text available.
Image may contain: 1 person, text
LikeShow more reactions

Comment